சனி, 5 மார்ச், 2016

பொறுப்பு அதிகம்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் செப் பிளாட்டர். சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர். 79 வயதிலும் கால்பந்து விளையாட்டின் தலைமை நிர்வாகியாக தளராமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.ஜூரிச் நகரில் நேற்று முன் தினம் இரவு நடந்த விறுவிறுப்பான தேர்தலில் பிளாட்டர் வெற்றி பெறுவது கடைசி வரை கேள்விக்குறியாகவே இருந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த வாய்ப்பளிப்பது, போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக்கான உரிமம் வழங்குவது, ஸ்பான்சர்கள் தேர்வு உள்பட பல்வேறு வகைகளில் ₹650 கோடிக்கு பிபா அமைப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சமீபத்தில் அமெரிக்கா புகார் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்தல் நடக்க சில நாட்களே இருந்த நிலையில், ஜூரிச் நகர ஓட்டலில் தங்கியிருந்த பிபா துணைத் தலைவர் உள்பட 7 பேர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது கால்பந்து வட்டாரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. பிளாட்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தாலும், அதை அவர் அலட்சியப்படுத்திவிட்டு தேர்தலை எதிர்கொண்டார்.அவருக்கு எதிராக ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசேனை களமிறக்கியது எதிர் தரப்பு. முதல் கட்ட வாக்குப்பதிவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் 2வது கட்ட வாகுப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியில் இருந்து விலகிக் கொள்கவதாக அறிவித்தார் இளவரசர் அலி பின் ஹுசேன். இதைத் தொடர்ந்து, 5வது முறையாக பிபா அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் பிளாட்டர். ‘நிர்வாகிகள் கைது நடவடிக்கையில் அமெரிக்க சதி இருப்பதாக சந்தேகிக்கிறேன். 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை கத்தாரிடம் பறிகொடுத்ததாலேயே அமெரிக்கா இப்படி குறுக்கு வழியில் என்னை வீழ்த்த முயற்சித்திருக்கிறது. அதே போல 2018 போட்டியை நடத்தும் உரிமை தங்களுக்கு கிடைக்காமல் ரஷ்யாவுக்கு கிடைத்துவிட்டதே என்ற பொறாமையில் இங்கிலாந்தும் எனக்கு எதிராக விஷமத்தனமான பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது. இத்தனை தடைகளையும் மீறி மீண்டும் என்னை தலைவராகத் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். பிபா படகு தற்போது தள்ளாடினாலும் பத்திரமாக கரை சேர்ப்பேன்என்கிறார், தலைமைப் பொறுப்பை தக்கவைத்துக் கொண்ட உற்சாகம் கொப்பளிக்க. இந்த வெற்றியோடு, அவருக்கான பொறுப்பு பன்மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. சக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் கடமையையும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக