சனி, 5 மார்ச், 2016

அளவுக்கு மிஞ்சினால்...

இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தொடர் வெற்றி, அந்நிய மண்ணில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த அரிய வெற்றி மகிழ்ச்சி அளித்தாலும், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாடத் தடை என்ற செய்தி அந்த மகிழ்ச்சியின் அளவை மட்டுப்படுத்தவே செய்துள்ளது.கிரிக்கெட் விளையாட்டில், எதிரணி வீரர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் கிண்டலடித்து உசுப்பேற்றுவது ஒன்றும் புதிதல்ல. இந்தஸ்லெட்ஜிங்கலையில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு கைதேர்ந்த அணிகளில் ஆஸ்திரேலியாவை குறிப்பிட்டு சொல்லலாம். போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாகவே வாய்ச்சவடாலில் இறங்கி விடுவார்கள். ஆடுகளத்திலும் அது எதிரொலிக்கும். அவப்பெயரை பற்றி கவலைப்படாமல் வெற்றியை குறி வைத்து வெறித்தனமாக செயல்படுவதை தங்களின் பிரத்யேகமானஆக்ரோஷ பாணிஆட்டமாக அடையாளப்படுத்துவதிலும் பெருமை கொள்வார்கள்.கனவான்களின் விளையாட்டு என்ற பழம்பெருமையை எல்லாம் வணிக மயமாகிப்போன கிரிக்கெட்டில் இனியும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாததற்கு, கேப்டன்களின் மென்மையான அணுகுமுறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது முன்வைக்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு, புதிய கேப்டனாக பொறுப்பேற்ற கோஹ்லிஆக்ரோஷமே இனி எங்களின் தாரக மந்திரமாக, சக்கர வியூகமாக இருக்கும்என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் வகையில், ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது என்ற அவரது தாக்குதல் வியூகத்தில் எந்த குறையும் இல்லை. ஆனால், அதை களத்தில் செயல்படுத்திய விதம்தான் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. அவரது ஆக்ரோஷ வலையில் சிக்கிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விதிகளை காற்றில் பறக்கவிட்டு எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். விக்கெட்டை பறிகொடுத்த பேட்ஸ்மேனை நோக்கி வெளியே போ என சைகை காட்டுவது, பவுன்சர் பந்துவீச்சை பிரயோகித்த பவுலரை நோக்கி தலையில் அடித்துக் கொண்டு முறைப்பது என்று அவரது நடத்தை எல்லை மீறியது.அவரது விக்கெட் வேட்டை, அணியின் வெற்றிக்கு உதவினாலும் மோசமான நடத்தையால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை என்ற தண்டனைக்குள்ளாகி இருக்கிறார். ‘இஷாந்த்தின் ஆக்ரோஷமான செயல்பட்டுக்கு கேப்டன் கோஹ்லியும் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியுமே காரணம். அவர் இதற்கு முன் இப்படி தரக்குறைவாக நடந்து கொண்டதே இல்லைஎன்கிறார் தனிப்பட்ட பயிற்சியாளர் ஷர்வன்குமார். முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதையெல்லாம் கண்டுகொள்ளாத கோஹ்லி, ‘ஒரு ஆக்ரோஷமான வேகப் பந்துவீச்சாளர், கேப்டனுக்கு கிடைத்த பொக்கிஷம் போன்றவர்என்று புகழ்ந்து தள்ளுகிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக