சனி, 5 மார்ச், 2016

தவறான வியூகம்?

உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் டோனியின் வியூகங்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.இரண்டு ஆட்டத்திலுல் இந்திய அணி 300 ரன்னுக்கும் அதிகமான இலக்கை நிர்ணயித்தும், ஆஸ்திரேலியா அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எளிதாகவே வெற்றியை வசப்படுத்திக் கொண்டது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மா தொடர்ச்சியாக 2 சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றும் பலனில்லை. நமது அணியின் பலமே பேட்டிங் தான். அப்படி இருக்கும்போது, டாசில் வென்று முதலில் பேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சேசிங்கை தேர்வு செய்திருந்தால், இலக்கு என்ன? ஓவருக்கு எத்தனை ரன் தேவை என்று கணக்கிட்டு அதற்கேற்ப விளையாடி இருக்கலாம் என்கிறார்கள்.துல்லியமாகப் பந்துவீசி எதிரணி ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தாததே தோல்விக்கு முக்கிய காரணம். இந்திய வீரர்களின் பீல்டிங்கும் பாராட்டும் வகையில் அமையவில்லை. பல கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தனர். வெளிநாட்டு மைதானங்களில் நமது பவுலர்களின் சுழற்பந்துவீச்சு எடுபடாததும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் என்ற வகையில் பந்துவீச்சு வியூகம் வேண்டும். கடைசி பத்து ஓவர்களில் குறைந்தபட்சம் நூறு ரன் விளாசுவது அவசியம்... என்று நிபுணர்களும் முன்னாள் பிரபலங்களும் ஆலோசனைகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.தோல்விக்கு டோனி மட்டுமே காரணம் என்று கட்டம் கட்டுவது சரியல்ல என்கிறார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் வல்லவர். இந்தியாவின் பெருமை... உலகின் பொறாமை! தற்போது சற்று தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு குறைந்துவிட்டது. அதனால் தான் இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதற்காக டோனியை ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. அவருக்கு இன்னும் அவகாசம் கொடுக்க வேண்டும்என்று டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.முன்பு சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்றுவிடும் என்று சில விஷயம் தெரியாத ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்போது ரோகித் ஷர்மாவுக்கு அந்த கைராசி முத்திரையை குத்தப் பார்க்கிறார்கள். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. அதில் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றி வசமாகும். தனி நபரை மட்டுமே நம்பியிருக்கும் அணியால் பெரிதாக சாதிக்க முடியாது. டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக