சனி, 5 மார்ச், 2016

யார் பொறுப்பு?

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது ஆந்திர மாநிலம் அனந்தபூர் நீதிமன்றம்.இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்றவர். டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் நமது அணி முதலிடத்துக்கு முன்னேறக் காரணமாக இருந்தவர். நெருக்கடியான கட்டங்களிலும் பதற்றம் அடையாமல் விளையாடி வெற்றியை வசப்படுத்தக் கூடியவர். அதிரடி ஆட்டம், வசீகர தோற்றம், குவியும் வெற்றிகள்விளம்பர நிறுவனங்கள் டோனியை மொய்க்க இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?விளம்பர ஒப்பந்தங்களால் அவருக்கு கிடைக்கும் வருமானம் பற்றி, கடந்த 2013ல்  ஒரு ஆங்கில மாத இதழ் கட்டுரை வெளியிட்டது. அட்டைப்படத்தில் டோனியை மகா விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து ஒவ்வொரு கையிலும் ஷூ, குளிர்பானம் உள்பட பல்வேறு பொருட்களைத் தாங்கி விளம்பரம் செய்வது போல ஒரு படத்தையும் அச்சிட்டிருந்தார்கள்.கடவுளை அவமதித்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக டோனி மீது சில அமைப்புகள் குற்றம்சாட்டின. பல்வேறு மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் பதிவான வழக்கு தொடர்பாக, டோனி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை கவனத்தில் கொள்ளாமல் அனந்தபூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது விவாதப் பொருளாகிவிட்டது.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பத்திரிகைகளும், வார, மாத இதழ்களும் வெளியாகின்றன. அவற்றில் பிரசுரமாகும் செய்தி, கட்டுரைகளுடன் புகைப்படங்கள், விளக்கப்படங்கள், கேலிச்சித்திரங்களும் இடம் பெறுகின்றன. பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பிரபலங்களிடம் எந்த அனுமதியும் பெறப்படுவது இல்லை. முழு பொறுப்பும் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் குழுவையே சேரும். இதில் டோனியின் தவறு எதுவும் இல்லை.அதே போல, சர்ச்சைக்குரிய அந்தப் படம் கடவுளை அவமதிப்பதாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டிலும் தவறு இல்லை. ஆனால், எந்த வகையிலும் சம்பந்தப்படாத டோனியை அலைக்கழிப்பது தேவையா? என்பதே கேள்வி.ஒரே விஷயத்துக்காக பல்வேறு நீதிமன்றங்களில் நூற்றுக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் தற்போது பேஷனாகிவிட்டது. சுய விளம்பரத்துக்காக, ஆதாயத்துக்காக போடப்படும் இது போன்ற வழக்குகளை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்யலாம். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். அவதூறு வழக்குகள் தொடர்பான மனுவில், ஏற்கனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இருப்பதையும் மறந்துவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக