சனி, 5 மார்ச், 2016

உறுதி தேவை

விளையாட்டில் ஊக்க மருந்து சர்ச்சை புதிதல்ல. வழக்கமாக தடகள வீரர்கள் தான் இதில் அதிக அளவில் சிக்குவார்கள். ஆட்டத் திறனை மேம்படுத்துவதற்காக, தடை செய்யப்பட்ட இந்த மருந்துகளை உபயோகித்து அதன் பின்விளைவுகளால் அவதிப் படுபவர்களும் ஏராளம். 1988ல் நடந்த சியோல் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், மின்னல் வேகத்தில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார் கனடா வீரர் பென் ஜான்சன். பின்னர், ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்த அமெரிக்க வீரர் கார்ல் லூயிஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு தங்கப் பதக்கத்தை கொடுத்தார்கள்.அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற வேட் எக்யூம், 2003ல் வெளியிட்ட தகவல் விளையாட்டு உலகையே உலுக்கியது. ‘பல்வேறு சமயங்களில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய நூற்றுக் கணக்கான அமெரிக்க தடகள வீரர்கள் தப்பிக்கவிடப்பட்டிருக்கிறார்கள். சோதனை முடிவுகளை அப்படியே மூடி மறைத்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள். அதில் கார்ல் லூயிசும் ஒருவர்என்று அவர் பெரிய குண்டாக தூக்கிப் போட்டார்.முதலில் மழுப்பினாலும், தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட கார்ல் லூயிஸ், ‘நான் ஆயிரத்தில் ஒருவன்என்று சொல்லி சமாளித்தார். சைக்கிள் பந்தய சாம்பியன் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், தடகள நட்சத்திரங்கள் டைசன் கே, மரியான் ஜோன்ஸ், டென்னிஸ் வீரர் அகாசி... என்று இந்த பட்டியல் மிக நீளம். இந்த ஆண்டு இந்திய பளுதூக்கும் வீரர், வீராங்கனைகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானவர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உபயோகித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்பதே சந்தேகம் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குசால் பெரேராவும் தற்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். அவருக்கு 4 ஆண்டு தடைவிதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. காயம் குணமடைவதற்காக உட்கொள்ளும் சில மருந்துகளில், தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு கலந்திருப்பதை அறியாமல் சிக்கிக் கொள்ளும் அப்பாவிகளும் இருக்கிறார்கள். சத்து பானம், மருந்து எதுவாக இருந்தாலும் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே உபயோகிப்பதுடன், வெற்றிக்காக குறுக்கு வழிகளை தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதிலும் உறுதி தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக