சனி, 5 மார்ச், 2016

ஈகோ வேண்டாம்

இந்திய ஹாக்கி அணி என்றாலே எதிரணி வீரர்கள் அஞ்சி நடுங்கிய காலம் இருந்தது. நமது வீரர்களின் லாவகமான மட்டைப் பிரயோகம், அப்போது நம்ப முடியாத மாயாஜாலமாக பிரமிப்புடன் பார்க்கப்பட்டது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒலிம்பிக் தங்கத்தை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து வைத்திருந்தோம். இன்று அதெல்லாம் பழங்கதை... ஹாக்கியில் நமது பெருமை எல்லாம் ஆவியாகி, காலி பெருங்காய டப்பாவாக காட்சி அளிக்கிறது.வேறு வழியில்லாமல் ரசிகர்கள் கிரிக்கெட்டை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் 5, 6, 7, 8வது இடம் என்று பின்தங்கி, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த போட்டிக்கு தகுதிபெறக் கூட முடியாமல் போனது உச்சக்கட்ட சோகம். 2012 லண்டன் ஒலிம்பிக்சில் பங்கேற்க தகுதி பெற்றதையே, தங்கம் வென்றது போல உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய கட்டாயம். அந்த தொடரில் 12வது இடம் கிடைத்தபோது, தகுதி பெறாமல் இருந்திருந்தாலே கவுரவமாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இறங்குமுகத்தில் இருந்த இந்திய ஹாக்கி அணி, இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. 2010, 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2014 ஆசிய விளையாட்டில் தங்கம் என்று நம்பிக்கை வெளிச்சம் மின்னலடிக்க தொடங்கியிருக்கிறது. சர்தார் சிங் தலைமையில் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடரில் 5வது இடம் பிடித்தது சற்று ஏமாற்றம் அளித்தாலும், அடுத்த ஆண்டு நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்சில் பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால், இந்திய ஹாக்கி சரியான பாதையில் பயணிக்கிறது என்ற நிம்மதியை நிலைக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது. பயிற்சியாளர் பால் வான் ஆஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். சரியாக செயல்படவில்லை என்பதே உண்மையான காரணம் என்றால் சர்ச்சை ஏதுமில்லை. ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ரா என்ற தனிநபரின் ஈகோ தன்னை பலிவாங்கி விட்டதாக வான் ஆஸ் கூறியிருப்பது தான் கவலை அளிக்கிறது. துணை பயிற்சியாளர் ஜூட் பெலிக்சின் திடீர் ராஜினாமா, பிரச்னையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4 பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தவறு அவர்கள் மீதா? இல்லை நிர்வாகத்திடமா? ரியோ ஒலிம்பிக்சுக்கு தயாராக மிகக் குறைந்த அவகாசமே உள்ள நிலையில், இப்படி பயிற்சியாளர்களை பந்தாடுவது எந்த வகையிலும் அணியின் நலனுக்கு உகந்ததல்ல என்பதே ஹாக்கி ரசிகர்களின் கவலை.தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஊக்குவிப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக