சனி, 5 மார்ச், 2016

சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்

ஒலிம்பிக் பதக்கமே இலக்குஎன்ற திட்டத்தின் கீழ், திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி வசதி மற்றும் ஊக்கத் தொகை அளிக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுக்கு இடம் கொடுக்காமல் புறக்கணிப்பதாக முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகள் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா இருவரும் புகார் கூறியிருந்தனர்.தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்பதே அவர்களின் முக்கிய குற்றச்சாட்டு. பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் சாய்னா நெஹ்வால், பாருபள்ளி காஷ்யப், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய், குருசாய்தத், பி.வி.சிந்து ஆகியோருக்கு நிதியுதவி அளிக்கப்படும் நிலையில், இரட்டையர் பிரிவில் விளையாடும் தங்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக ஜுவாலா, அஷ்வினி நினைத்ததில் தவறு இல்லை. ஊடகங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றிருந்தாலே சுமுகமான தீர்வு கிடைத்திருக்கும். ‘ஒற்றையர் பிரிவில் விளையாடுவோரை ஒரு குழுவாக தேர்வு செய்ததாலேயே, முதல் கட்டமாக அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டது. தற்போது பேட்மின்டன் இரட்டையர் பிரிவுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிவில் நாட்டின் தலைசிறந்த வீராங்கனைகளாக உள்ள ஜுவாலா, அஷ்வினி இருவருக்கும் ஒலிம்பிக் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதே சமயம், தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் பாரபட்சம் காட்டுவதாக இந்த வீராங்கனைகள் புகார் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. நிதியுதவி பெறத் தகுதியான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில், ஒரு முறை கூட ஜுவாலா, அஷ்வினிக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தது இல்லைஎன்கிறது விளையாட்டு அமைச்சகம்.இவர்களின் குற்றச்சாட்டை பயிற்சியாளர் கோபிசந்த்தும் மறுத்துள்ளார். ‘இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய பேட்மின்டன் சங்கம், விளையாட்டு அமைச்சகம் என எல்லா தரப்புமே சம்பந்தப்பட்ட வீராங்கனைகளுக்கு எல்லா சமயத்திலும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. தேசிய போட்டி மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போதும் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்யப்பட்டுள்ளதுஎன்கிறார் அவர்.வீராங்கனைகள் சற்று பொறுமையாக இருந்திருக்கலாம். அதே சமயம் ஒற்றையர், இரட்டையர் என தனித்தனியே தேர்வு செய்து அறிவிக்காமல், பேட்மின்டன் விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலை ஒரே சமயத்தில் வெளியிட்டிருந்தால் இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக