சனி, 5 மார்ச், 2016

சந்தேக வலையில்

கிரிக்கெட்டில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை தற்போது டென்னிசையும் உலுக்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி நடக்கும் நேரத்தில் கிளம்பியிருக்கும் இந்த சர்ச்சையில், பல முன்னணி வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், கடந்த 2007ல் ஒரு போட்டியில் தோற்க தனக்கு ₹1.3 கோடி கொடுக்க சூதாட்ட தரகர்கள் வலை விரித்ததாகக் கூறி அதிர வைத்திருக்கிறார். ‘எனது நிர்வாகிகளை அணுகி மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியை ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டேன்என்கிறார் அவர். அதே ஆண்டில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சான்டோரோ என்ற வீரரிடம் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்ததன் பின்னணியில் சூதாட்டம் நடந்திருப்பதாக இத்தாலி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியுள்ளது.‘என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த போட்டியில் நான் தோற்றது உண்மைதான். பெரிய வீரர்கள் தோற்கும் போட்டிகள் எல்லாமே மேட்ச் பிக்சிங் என்றால், அதை விட முட்டாள்தனமான வாதம் இருக்க முடியாது. ஏதாவதொரு போட்டியை எடுத்துக் கொண்டு யார் வேண்டுமானுலும் கதை கட்டலாம். ஆனால், தகுந்த ஆதாரங்களை வெளியிட்டால் தான் அந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும்என்கிறார் ஜோகோவிச்.அதிக முக்கியத்துவம் இல்லாத டென்னிஸ் போட்டிகளில் இப்படி பிக்சிங் சூதாட்டம் நடப்பது வாடிக்கை தான். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் அந்த பித்தலாட்டம் இருக்கிறது... முன்னணி வீரர்களே கோடி கோடியாய் பணம் வாங்கிக் கொண்டு தோல்வியைத் தழுவுகிறார்கள் என்ற தகவலை ஜீரணிக்க முடியவில்லை. டென்னிஸ் விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்புக்கு இது பற்றி நன்றாகத் தெரியும். பெரிய வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்கிறது புலனாய்வு தகவல். ‘நான் டென்னிஸ் விளையாடிய இருபது ஆண்டுகளில் இப்படி பிக்சிங் சூதாட்டம் நடந்ததாக கேள்விப்பட்டதே இல்லைஎன்கிறார் அமெரிக்க முன்னாள் நட்சத்திரம் அகாசி. தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கமும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. நெருப்பில்லாமல் புகையுமா? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. முறைகேடுகளை தடுக்கவும், தவறு செய்யும் வீரர்களை கடுமையாகத் தண்டிக்கவும் தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, டென்னிஸ் விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த களங்கத்தை துடைக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக