சனி, 5 மார்ச், 2016

சரியான வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். 34 வயது தான் ஆகிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகை போட்டியிலும் முத்திரை பதித்த வெகு சில வீரர்களில் முக்கியமானவர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்ற அவரது துணிச்சலான முடிவு யாரும் எதிர்பாராதது. ஆஸ்திரேலியாவுடன் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் பிரியாவிடை பெறப்போகிறார். ஒரு 30 அல்லது 40 ரன் கவுரவமான ஸ்கோர் அடித்தாலே திருப்தியாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்க, அதிரடியாக உலக சாதனை படைத்து அசத்திவிட்டார் மெக்கல்லம். அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் அணி இக்கட்டான நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கியவர் 54 பந்தில் சதம் விளாசி மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் வசம் இருந்த டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் (56 பந்து) என்ற சாதனை உடைந்து நொறுங்கி மெக்கல்லம் வசமாகிவிட்டது.கடைசி போட்டியில் சதம் விளாசுவது என்ற பெருமை எல்லோருக்கும் கிடைத்துவிடாது. டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஈடு இணையற்ற வீரர்களுக்கு கூட அது கை கூடவில்லை. சதம் அடிப்பதே பெரிய விஷயம் எனும்போது, அதில் உலக சாதனையும் படைத்திருக்கும் மெக்கல்லமை பாராட்ட வார்த்தைகள் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்து (100 சிக்சர்) முன்னேறியவர், தற்போது 106 சிக்சருடன் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். விளையாடிக் கொண்டிருக்கும் 101வது டெஸ்டில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் மிச்சம் இருக்கிறது. அணியில் அறிமுகமானதில் இருந்து ஒரு டெஸ்ட் போட்டியை கூட மிஸ் செய்யாமல் தொடர்ச்சியாக விளையாடி வருவதிலும் கூட மெக்கல்லம் தான் பெஸ்ட். இந்தியாவில் நடக்க இருக்கும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் விளையாடிய பிறகு ஓய்வு பெற்றிருக்கலாமே... என்ற ஆதங்கம், நியூசிலாந்து ரசிகர்களுக்கு மட்டுமல்ல; கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேருக்குமே நிச்சயம் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக