சனி, 5 மார்ச், 2016

மாற்றம் தேவையா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இழந்திருக்கிறது இந்தியா. அதுவும் சொந்த மண்ணில். அடுத்த ஆண்டு உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்த தோல்வி எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. கட்டாக் ரசிகர்களை கடுப்பேற்றி ரகளையில் இறங்க வைக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது இந்திய வீரர்களின் ஆட்டம். ரசிகர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது என்றாலும், தோல்விகள் தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதற்கான அறிகுறி அது. அதிகபட்ச விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பவர் கேப்டன் டோனி தான். அணியில் அவரது இடமே கேள்விக்குறியாகி உள்ளது. ‘கேப்டன் பொறுப்பில் டோனி எப்படி செயல்படுகிறார் என்பதை மட்டுமல்ல, ஒரு பேட்ஸ்மேனாகவும் அவரது பங்களிப்பு என்ன என்பதை தேர்வுக் குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். இந்தியாவின் மிகச் சிறந்த வீரர்களில் டோனியும் ஒருவர். ஆனால், அவர் அணிக்கு ஒரு சுமையாக அமைந்துவிடக் கூடாது. கடந்த கால சாதனைகளுக்காக தற்போதைய தோல்விகளை சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த உலக கோப்பை போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ரகானே போன்ற திறமையான இளம் வீரரை வீணடிப்பது சரியல்ல. டோனியின் விளாசும் திறன் மங்கிவிட்டது. தென் ஆப்ரிக்க தொடருக்குப் பிறகு தேர்வுக் குழுவினர் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்என்கிறார் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர். ‘டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானதுஎன்று சச்சின் ஒரே ஒரு சர்வதேச போட்டியுடன் பெருந்தன்மையாக விலகிக் கொண்டது சரியான உதாரணம். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக இளம் வீரர் விராத் கோஹ்லி ஏற்கனவே பொறுப்பேற்றிருக்கிறார். டி20 போட்டியிலும் அவரது தலைமையில் விளையாடுவது, சக வீரர்களுக்கு சகஜமாகவும் சவுகரியமாகவும் இருக்கும் என்கிறார்கள் முன்னாள் பிரபலங்கள். இந்தியாவுக்காக இரண்டு உலக கோப்பைகளை வென்று சாதனை படைத்த டோனி, புகழின் உச்சியில் இருக்கும்போதே கவுரமாக விடைபெற வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதில் தவறில்லை. டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி சாதாரண வீரராக பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால், உலக கோப்பை வரையாவது தாக்குப்பிடிக்க முடியும். இந்த மாற்றம் தேவையா? தென் ஆப்ரிக்காவுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடர், இதற்கு விடையளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக