ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தவிர்த்திருக்கலாம்

எந்த ஒரு நல்ல விஷயமும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பார்கள். ‘வெற்றிக் கேப்டன்டோனிக்கும் அது நேர்ந்திருக்கிறது. இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பைகளை வென்றவர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்டவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர் என்ற பெருமைகள் எல்லாம் இன்று செல்லாக் காசாகியிருக்கிறது.
எந்த நெருக்கடியிலும் கொஞ்சமும் பதற்றம் அடையாமல் செயலாற்றும் திறன், சக வீரர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம், வித்தியாசமான வியூகங்கள் மட்டுமல்லாது தொட்டதெல்லாம் பொன்னானதால் அதிர்ஷ்ட கேப்டனாகவும் அடையாளம் காணப்பட்ட டோனியிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வந்தவர், சமீபத்தில் தான் அந்த பொறுப்பில் இருந்து விலகி விராத் கோஹ்லிக்கு வழி விட்டிருந்தார். ஐபிஎல் தொடரின் 10வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டிருப்பதாகவும், புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அணி நிர்வாகம் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டோனி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக அவர் நீடிப்பார். கேப்டன் பதவியில் இருந்து அவராக விலகவில்லை. கடந்த சீசனில் எங்கள் அணி சிறப்பாக செயல்படவில்லை. எனவே, இந்த முறை அணியை வழிநடத்தவும், வலுவானதாக கட்டமைக்கவும் ஒரு இளம் வீரரை தலைமை பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தோம். எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான எங்கள் அணியின் கேப்டனாக ஸ்மித்தை நியமித்துள்ளோம்என்கிறார் புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.
அணியை வழிநடத்தப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் முழு உரிமை அவருக்கு உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், டோனி போன்ற இணையற்ற சாதனையாளரிடம் இருக்கும் பொறுப்பை, வேறு ஒருவருக்கு வழங்கிய விதம் ஏற்புடையதாக அமையவில்லை.
இரு தரப்பும் கலந்தாலோசித்து, சம்பந்தப்பட்ட வீரரின் புகழுக்கு கொஞ்சமும் களங்கம் ஏற்படாத வகையில் சுமுகமான முடிவை எடுத்திருக்க வேண்டுய்ஒரு வெற்றிகரமான கேப்டனுக்கான புதிய இலக்கணத்தை வகுத்தவருக்கு கவுரவமான முறையில் விலகிக் கொள்ளும் வாய்ப்பை அளித்திருந்தால், இந்த தர்மசங்கடமான நிலையை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக