ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நம்பிக்கை தரும் வெற்றி

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. பதினைந்து ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.
சொந்த மண்ணில் நடந்த ஜூனியர் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி, 6 முறை சாம்பியனான ஜெர்மனிக்குப் பிறகு இந்த கோப்பையை ஒரு முறைக்கு மேல் வென்ற முதல் அணி என்ற பெருமைகளும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கங்களாக அள்ளிக் குவித்த பொற்காலம் முடிந்து, தகுதி பெறுவதற்கே போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி மீண்டும் எழுச்சி கண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
சீனியர் அணி வீரர்கள் ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ரியோ ஒலிம்பிக்ஸ்... என்று தொடர்ச்சியாக அசத்தி வரும் நிலையில், ஜூனியர் அணி உலக கோப்பையை வென்றுள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற பலம் வாய்ந்த அணிகளின் கடும் போட்டிக்கிடையே உலக சாம்பியன் பட்டத்தை வென்றது உண்மையிலேயே பெரிய சாதனை தான்.
லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடம் பிடித்தது வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரிக்க உதவியது. சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் முன்பாக விளையாடும்போது ஏற்படும் மனரீதியாக ஏற்படும் கூடுதல் நெருக்கடியை இளம் வீரர்கள் சிறப்பாக சமாளித்தனர்.கால் இறுதியில் ஸ்பெயினையும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியதால் எதிர்பார்பாப்பு அதிகரித்தது.
பெல்ஜியம் அணியுடன் நடந்த இறுதிப் போட்டியில், தொடக்கத்தில் இருந்தே துடிப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து இரண்டு கோல் திணித்து முன்னிலை பெற்றது, வெற்றிக்கு அடித்தளமிட்டது. இடைவேளைக்குப் பிறகு தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது நல்ல வியூகம். கடைசி விநாடிகளில் பெனால்டி கார்னர் கோல் விட்டுக் கொடுத்ததையும் குறை சொல்ல முடியாது.
ஒவ்வொரு வீரரும் முழு திறமையை வெளிப்படுத்தியதுடன், ஒருங்கிணைந்து செயல்பட்டு கோப்பையை வசப்படுத்தியது பாராட்டுக்குரியது.‘2014 ஏப்ரலில் பொறுப்பேற்றவுடன், உலக கோப்பையை நாம் வெல்லப் போகிறோம் என்று வீரர்களிடம் கூறினேன். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். நாளைய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்என்கிறார் பயிற்சியாளர் ஹரேந்திரா சிங்.
ஜூனியர் அணியின் மேலாளராக செயல்பட்ட சீனியர் அணி தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஒல்ட்மான்ஸ்நமது அணியின் வெற்றி குறித்து எந்த சமயத்திலும் சந்தேகம் எழவில்லை. அற்புதமாக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்என்று மனம் திறந்து பாராட்டுகிறார்.
திறமை வாய்ந்த இளம் வீரர்கள் சீனியர் அணியிலும் இடம் பிடித்து அசத்தும்போது, ஹாக்கியில் இந்தியா மீண்டும் அசைக்க முடியாத சக்தியாக நிச்சயம் உருவாகும்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக