ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சாதனைகள் தொடரட்டும்

சீன ஓபன் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.ஏற்கனவே உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலப் பதக்கமும், ரியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த சிந்து, சூப்பர் சீரீஸ் அந்தஸ்துள்ள போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அவரது விடா முயற்சிக்கு கிடைத்த சரியான அங்கீகாரம்.
முன்னணி வீராங்கனையான சாய்னா நெஹ்வால் காயம் காரணமாக சற்று தடுமாறி வரும் நிலையில், சிந்துவின் எழுச்சி இந்திய பேட்மின்டனுக்கு கிடைத்த வரம் என்பதில் சந்தேகமில்லை.
சூப்பர் சீரீஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதில் இருந்தே என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. சீன ஓபனில் சற்று நெருக்கடியோடு தான் விளையாடினேன். சாய்னா முதல் சுற்றிலேயே வெளியேறியதும் நெருக்கடியை அதிகரித்தது. எனினும், கடினமாக பயிற்சி செய்திருந்ததால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 2014ல் சாய்னா சாதித்ததை போல நானும் சீன ஓபன் பட்டத்தை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பட்டங்களுக்கு அடுத்தபடியாகவே இந்த வெற்றியை மதிப்பிடுவேன்என்கிறார் சிந்து.
சாய்னா, கிடாம்பியை தொடர்ந்து சீன ஓபனில் பட்டம் வெல்லும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர், கிரிக்கெட் நட்சத்திரங்கள் வி.வி.எஸ்.லஷ்மன், ஹர்பஜன் சிங், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, நடிகர் அமிதாப் பச்சன்என்று பட்டியல் நீள்கிறது.
உலக தரவரிசையில் தற்போது 14வது இடத்தில் இருக்கும் சிந்து, விரைவில் முதல் இடத்துக்கு முன்னேற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதுடன், பேட்மின்டனில் மிகவும் பாரம்பரியமிக்க போட்டியான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்வதும் தனது லட்சியம் என்கிறார்.வயது, திறமை, உடல்தகுதி சாதகமாக இருப்பதுடன் கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டவர் என்பதால், நினைத்ததை சாதிப்பார் என நம்பலாம்
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக