ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அப்பட்டமான அநாகரீகம்

நாகரீக உலகில் தான் வாழ்கிறோமா? இல்லை... காட்டுமிராண்டிகள் காலத்திலா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது, சிவசேனா எம்பி ரவீந்திர கெயிக்வாட் நடந்துகொண்ட விதம்.
பிசினஸ் வகுப்பில் பயணிப்பதற்கான டிக்கெட் வாங்கிவிட்டு, புனேவில் இருந்து டெல்லி செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ஏறினார் கெயிக்வாட். அந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும் எகானமி வகுப்புக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. சொகுசு வசதி இல்லை.
வேறு விமானத்தில் செல்லுமாறு ஊழியர்கள் வலியுறுத்தியதை ஏற்காமல் தொடர்ந்து பயணம் செய்தவர், டெல்லி வந்த பிறகும் இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். இதுபற்றி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் வந்து சமாதானப்படுத்த முயற்சி செய்தார். எதையும் காதில் வாங்காத கெயிக்வாட், வெறிபிடித்தவர் போல அந்த 60 வயது மேலாளரின் சட்டையை கிழித்து, மூக்குக் கண்ணாடியை உடைத்ததுடன் நில்லாமல் செருப்பை கழட்டி 25 முறை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த அநாகரீகமான செயல் வைரல் வீடீயோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பானது. தனது செயலுக்காக கொஞ்சமும் வருத்தப்படாத கெயிக்வாட், அதை நியாயப்படுத்தும் வகையில் திமிராகப் பேட்டி கொடுத்தது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது.
ஊழியரை தாக்கி தரக்குறைவாக நடந்து கொண்ட எம்பி, இனி தங்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது ஏர் இந்தியா நிர்வாகம். மற்ற விமான நிறுவனங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து கை கோர்த்துக் கொண்டதால் நிலைமை மோசமானது. கடுமையான பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விமானப் பயணம் இனி சாத்தியமில்லை என்ற நிலையில், மும்பை செல்ல ரயிலில் ஏறினார் கெயிக்வாட். இடையிலேயே இறங்கி தலைமறைவாகிவிட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தாலும், சிவசேனா தரப்பில் எந்த பதிலும் இல்லை.
அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. கெயிக்வாடின் உஸ்மனாபாத் தொகுதியில் ஏர் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடந்திருக்கிறது. மாநிலங்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி உறுப்பினர்கள் செருப்படி புகழ் எம்பிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எம்பிக்கும் அது பொருந்தும். விமான சேவையின் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சட்டத்தின் மான்பைக் காக்க வேண்டிய ஒருவர், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் ஒரு மூத்த அதிகாரியை மூர்க்கத்தனமாக தாக்கி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இது போன்ற அத்துமீறல்களுக்கு நீதிமன்றம் தான் உறுதியான தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். வைப்பார்கள் என நம்பலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக