செவ்வாய், 25 அக்டோபர், 2016

நல்ல மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கேப்டன் டோனி 4வது வீரராகக் களமிறங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடக்க காலத்தில், ஒரு சில போட்டிகளில் முன் வரிசையில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் சலசலப்பை ஏற்படுத்தியவர், அதன் பிறகு பின் வரிசையில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.


பரபரப்பான கடைசி கட்டத்தில் கொஞ்சமும் பதற்றம் அடையாமல், சூழ்நிலைக்கேற்ப மிக சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதில் தனி முத்திரையும் பதித்தார்.பார்மில் இல்லாதபோது ஏற்படும் தடுமாற்றத்துக்கு டோனி மட்டும் விதிவிலக்கா என்ன?


தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் ஏற்படும் சோர்வும் சேர்ந்து கொண்டதால், சமீபத்திய போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியாமல் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக, போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர் என்ற தனித்திறன் கேள்விக்குறியானது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற இளம் வீரர் விராத் கோஹ்லி, வெற்றிகளைக் குவித்து வருவதுடன் தரவரிசையில் இந்திய அணியை மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற வைத்துள்ளதால் கூடுதல் நெருக்கடி.


இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான், மொகாலி போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 4வது வீரராக வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். துணை கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து அவர் 151 ரன் சேர்த்ததே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டியது, அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தியது என பல சிறப்பான விஷயங்களும் டோனிக்கு பெருமை சேர்த்தன.


‘நீண்ட காலமாக பின் வரிசையில் விளையாடிவிட்டேன். இதனால் ஆட்டத்தின் போக்கை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாடுவது சிரமமாகிவிட்டது. எனவே தான் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட முடிவு செய்தேன். கோஹ்லியுடன் இணைந்து பேட் செய்ததும் பல வகையில் உதவியாக இருந்தது. அணியின் வெற்றிக்காக அவர் முழு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார்’ என்று மனம் திறந்துள்ளார் டோனி.


கோஹ்லியின் ஆட்டமும் போட்டிக்கு போட்டி மெருகேறிக் கொண்டே வருகிறது. அடுத்த சாதனை நாயகனாக உருவாகி வருகிறார். கேப்டன், துணை கேப்டன் இருவரும் நல்ல புரிதலுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அணியின் நலனுக்கு மிகவும் முக்கியம். தங்களுக்குள் எந்தவிதமான கருத்து மோதலும் இல்லை என்பதை சிறப்பான ஆட்டத்தின் மூலம் இவர்கள் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

மாற்றம் வருமா?

நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் டிஆர்எஸ்.. என்ற பெயரைக் கேட்டாலே இந்திய அணிக்கு ஒவ்வாமையில் காது சிவந்து விடும்! அத்தனை அணிகளும் இந்த முறையை அரவணைக்கத் தயாராக இருக்கும்போது, இந்திய கிரிக்கெட் வாரியமும் அணியும் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது புரியாத புதிர் தான்.

கடைசியாக 2008ல் இலங்கை சுற்றுப்பயணம் சென்றபோது மட்டும் பச்சைக் கொடி காட்டி இருந்தார்கள். அதன் பிறகு இந்தியா விளையாடிய இருதரப்பு தொடர்களில் டிஆர்எஸ் தலை காட்டியதே இல்லை. கேப்டன் டோனிக்கு இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்பதே முட்டுக்கட்டைக்கு முக்கிய காரணம்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி புதிய எழுச்சியுடன் வெற்றிப் பயணத்தை தொடங்கி இருக்கிறது. தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதும் அணி மீதான நம்பிக்கையை. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.டிஆர்எஸ் பற்றிய கருத்திலும் மாற்றம் தெரிகிறது.


‘பந்து பயணிக்கும் வேகம், திசை, போக்கை கணிக்க உதவும் ‘ஹாவ்க் ஐ’ தொழில்நுட்பத்தை இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை. எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும், அவற்றை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக பேசத் தயாராக இருக்கிறோம்’ என்று கோஹ்லி சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். புதிய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூட இதற்கு ஆதரவாக இருப்பதாகவே தெரிகிறது.


நியூசிலாந்து அணியுடன் நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடர் முடிந்ததும், இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டிஆர்எஸ் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொது மேலாளர் ஜெப் அலர்டைஸ் இந்தியா வருவதாகவும் தகவல்.

லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ள சீர்திருத்தங்களை அமல் செய்வது தொடர்பாக சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ள பிசிசிஐ, எந்த அளவுக்கு இதில் அக்கறை காட்டும் என்பது கேள்விக்குறி தான். நடுவரின் தவறான கணிப்பால் சம்பந்தப்பட்ட வீரருக்கு தனிப்பட்ட பாதிப்பு என்பதை விட, ஒரு அணியின் வெற்றி வாய்ப்பே பறிபோகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறை உடனடியாக திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் டிஆர்எஸ் முறையை வரவேற்பதே சரியான முடிவாக இருக்கும்.  

மோதல் போக்கு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, லோதா கமிட்டி செய்த பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரில் எழுந்த சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சுட்டிக் காட்டி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது.


கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே அனுமதி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக நீடிக்கக் கூடாது, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகத்தில் இடம் பெறத் தடை, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது உள்பட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி சமர்ப்பித்த இந்த பரிந்துரைகளை அமல் செய்யாமல் கிரிக்கெட் வாரியம் இழுத்தடித்து வருகிறது. சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த நிலையில், சிறப்பு பொதுக் குழுவை கூட்டி ஆலோசித்த பிசிசிஐ ஒரு சில பரிந்துரைகள் தவிர்த்து மற்றவற்றை ஏற்க முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்று உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். ‘ஐபிஎல் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்தால் நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த தொடரில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தான் முன்னாள் வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறோம். இதையெல்லாம் லோதா கமிட்டி கருத்தில் கொள்ளவில்லை’ என்கிறார் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்.


சில பரிந்துரைகள் மிகக் கடுமையானவை என்று முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை உறுதி செய்த பிறகே, சீர்திருத்த நடவடிக்கைகளை லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவற்றை நிராகரிப்பது கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும்.

செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று எதிர்பார்ப்பதை எப்படி குறை கூற முடியும். நியாயமான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மோதல் போக்குடன் நடந்து கொள்வது சரியல்ல. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால், கிரிக்கெட் வாரியம் இதை விட தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுவது நிச்சயம். 

இது அழகல்ல

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றிருக்காவிட்டால், அணியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கியிருப்போம் என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல் கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.ஈடு இணையற்ற சாதனை வீரரான சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது, நெருக்கடி காரணமாகவே அந்த முடிவுக்கு தள்ளப்பட்டாரோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

‘சச்சினை சந்தித்து அவரது எதிர்கால திட்டம் குறித்து பேசினேன். ஓய்வு பெறும் எண்ணமில்லை என்றே தெரிவித்தார். ஆனால், தேர்வுக் குழுவில் இது பற்றி தீவிரமாக ஆலோசித்தோம். எங்கள் முடிவை கிரிக்கெட் வாரியத்துக்கும் தெரியப்படுத்தினோம். அதன் பிறகே சச்சின் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வேளை அவர் ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்காவிட்டால் அணியில் இருந்து கட்டாயமாக நீக்கியிருப்போம்’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பட்டீல்.

டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது பற்றியும் பல சமயங்களில் ஆலோசித்தோம். 2011ல் உலக கோப்பையை வென்றவர் என்பதாலேயே அவர் கேப்டனாக நீடிக்க அனுமதித்தோம். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் திடீரென ஓய்வு பெற்றது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.பதவிக் காலம் முடிந்து வீட்டுக்குப் போகும் சமயத்தில் இப்படி பரபரப்பாகப் பேசி மலிவான சுயவிளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார் சந்தீப் என்று சக தேர்வுக்கு குழு உறுப்பினர் ஒருவர் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.


தேர்வுக் குழுவில் விவாதிக்கப்படும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பது சரியல்ல. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதுடன், மனதளவில் அவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் ஆலோசனை விவரங்களில் ரகசியம் காப்பது மரபு. அதை பட்டீல் அப்பட்டமாக மீறியிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின், டோனி போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களைக் களங்கப்படுத்தும் வகையில் பேசுவது எந்த வகையிலும் ஏற்புக்குரியதல்ல. உண்மையிலேயே துணிவுள்ளவராக இருந்தால், சச்சினிடமே தேர்வுக் குழுவினரின் முடிவு பற்றி தெளிவாகக் கூறி ஓய்வு பெற வலியுறுத்தி இருக்கலாம். வாரியத்துக்கு தெரியப்படுத்தி... ஓராண்டு காலம் காத்திருந்து, சச்சினும் விடைபெற்று சென்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது பற்றி சொல்லியிருப்பது சந்தீப் பட்டீல் வகித்த தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு அழகல்ல. 

நல்ல வாய்ப்பு

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகிறது இந்திய அணி. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற அருமையான வாய்ப்பு.சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளை வீழ்த்துவது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்காது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை பொய்யாக்குவதுடன், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலகின் நம்பர் 1 அணியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இளம் வீரர் விராத் கோஹ்லியின் துடிப்பான தலைமையும், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் அனுபவமும் இந்திய அணியின் எழுச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணிக்கும் 2வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் இடையே 1 புள்ளி மட்டுமே வித்தியாசம். நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடக்கும் தொடரில் வெற்றியை வசப்படுத்தினாலே இந்தியா எளிதாக நம்பர் 1 ஆகிவிடும். அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பாக விளையாடி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வது தான் முக்கியம்.


கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், வி.வி.எஸ்.லஷ்மண் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்றால், வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பது அவசியம். சொந்த மண்ணில், சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் நம்பர் 1 அந்தஸ்துக்கு அர்த்தம் இருக்காது.

‘டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, இந்திய அணி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை கேப்டன் கோஹ்லி - பயிற்சியாளர் கும்ப்ளே கூட்டணி கட்டாயம் மாற்ற வேண்டும். ஒரேயடியாக சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பது சில சமயம் நமக்கே ஆபத்தாகி விடும். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்குமே திறமையை நிரூபிக்க சரி சமமான வாய்ப்பு கொடுப்பதுதான் உண்மையான டெஸ்ட் போட்டி’ என்கிறார் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்.

ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ள கேப்டன் கோஹ்லி, எந்த வகையான சவாலுக்கும் ஈடு கொடுப்பார் என்றே தோன்றுகிறது. சச்சின், லஷ்மண் கூறியுள்ளது போல, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி நீண்ட காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் என நிச்சயம் நம்பலாம்.

பழிதீர்க்கும் முயற்சி?

விளையாட்டும் ஊக்கமருந்து சர்ச்சையும் பிரிக்க முடியாததாகிவிட்டன. ஊக்கமருந்து உபயோகிப்பதால் கிடைக்கும் கூடுதல் ஆற்றல், நேர்மையான வீரர், வீராங்கனைகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்துவிடுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பரிசோதனையில் சிக்குவது எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தக்க தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.ரஷ்யாவில் விளையாட்டுத் துறை நிர்வாகிகளும், மருத்துவ நிபுணர்களும் கை கோர்த்து ஊக்கமருந்து உபயோகத்தை மிக சாமர்த்தியமாக யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் அரங்கேற்றி வந்தது அம்பலமானதால், அந்த நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கூட ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.நாங்கள் மட்டும் தான் தவறு செய்கிறோமா... அமெரிக்கா என்ன யோக்கியமா? என்று கேட்கும் வகையில், உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ‘வாடா’ இணையதளத்தில் ஊடுருவிய  ரஷ்யாவை சேர்ந்த மென் பொறியாளர்கள், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், கூடைப்பந்தாட்ட வீராங்கனை எலினா டெல் டன் ஆகியோர் பற்றிய ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை உபயோகித்துள்ளனர். எனவே அவர்களது பதக்கங்களை பறிப்பதுடன் சாதனைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது ரஷ்ய தரப்பு வாதம். ‘ரியோ ஒலிம்பிக்சில் அமெரிக்கர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், நேர்மையாக அல்ல’ என்று கிண்டலடிக்கிறது ‘பேன்சி பியர்ஸ்’ என்ற ரஷ்ய இணையதளம்.இதற்கு ‘வாடா’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக குறிப்பிட்ட சில மருந்துகளை உரிய அனுமதி பெற்று உபயோகிப்பது வழக்கமான நடைமுறை தான். அமெரிக்க வீராங்கனைகள் தங்களின் சிகிச்சை விவரங்களை முறையாக பதிவு செய்துள்ளனர். அவர்களது சாதனைகளை களங்கப்படுத்துவது, ரஷ்யாவின் கோழைத்தனமான பழிதீர்க்கும் முயற்சி’ என்கிறார் அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு நிறுவன தலைமை செயலதிகாரி டிராவிஸ் டைகார்ட்.செரீனா, வீனஸ், பைல்ஸ் ஆகியோரும் தாங்கள் ஊக்கமருந்து உட்கொண்டதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.


இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க ‘வாடா’ அமைப்பு தனது பரிசோதனை முறைகளில் வெளிப்படைத்தன்மையை கையாள வேண்டும். சோதனை முடிவுகளை உடனுக்குடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதும் அவசியம். 

பத்தரை மாற்று தங்கம்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு.இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை.

ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது.

பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது.

சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும்.

நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம்.

வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இவ்வளவு தாமதம் ஏன்?

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 60 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் பங்கேற்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அந்த போட்டியில் வெள்ளி வென்ற ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் தான் இது தெரியவந்தது.

இதையடுத்து, 2வது இடத்துக்கு முன்னேறிய யோகேஷ்வர் வெள்ளிப் பதக்கம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத இந்த பதக்க உயர்வால் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கும் யோகேஷ்வருக்கு இன்னும் ஒரு இனிய செய்தி கிடைத்திருக்கிறது.
தங்கப் பதக்கம் வென்றிருந்த அஜர்பைஜான் வீரர் தோக்ருல் அஸ்கரோவும் ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டிருக்கிறார். இதனால் யோகேஷ்வரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறதாம்.ரியோ ஒலிம்பிக்சில் முதல் சுற்றிலேயே வெளியேற நேரிட்டதால் ஏமாற்றத்தில் இருந்த யோகேஷ்வருக்கு திடீர் ஜாக்பாட். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தான் கொடுமை.

யோகேஷ்வரின் ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தி அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எதையும் உட்கொள்ளவில்லை என உறுதியானால் மட்டுமே பதக்க உயர்வு வழங்கப்படும் என உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ‘வாடா’ தெரிவித்துள்ளது. 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கூட ஊக்கமருந்து சோதனை நடத்திக் கொண்டிருப்பது நல்ல வேடிக்கை.

வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் குடுகோவ் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அடுத்த ஒலிம்பிக் கூட நடந்து முடிந்துவிட்டது. பரிசோதனை முடிவுகளை உறுதி செய்ய இவ்வளவு கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். நேர்மையான வீரருக்கே வெற்றியும் பதக்கமும் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம் தான். அதே சமயம், அந்த வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சி, புகழ், பரிசுகளை அந்த வீரர், வீராங்கனைகள் உடனடியாக அனுபவிக்கவும் வகை செய்ய வேண்டும்.

போட்டிகள் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாவது ஊக்கமருந்து பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து வெற்றியாளர்களை இறுதி செய்யும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் தேவை. சோதனை முறைகளையும் நவீனப்படுத்தலாம். காலம் கடந்து கிடைத்த பதக்கம் என்றாலும், சாதனை வீரர் யோகேஷ்வரை உரிய வகையில் பாராட்டி கவுரவிப்பதும், ரொக்கப் பரிசுகள் வழங்கி வாழ்த்துவதும் அரசின் கடமை. 

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆக்கபூர்வ நடவடிக்கை

ரியோ ஒலிம்பிக்சில் இரண்டு பதக்கங்களுடன் திருப்தி அடைந்திருக்கிறது இந்தியா. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சாதிக்க தவறிய நிலையில் மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக், பேட்மின்டனில் பி.வி.சிந்து பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர்.

ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட கணிப்பில், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 2 பதக்கம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கணிப்பு இவ்வளவு துல்லியமாக பலித்தது துரதிர்ஷ்டவசம் என்று தான் சொல்ல வேண்டும்.

துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா, மகளிர் ஜிம்னாஸ்டிக்சில் தீபா கர்மாகர் நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டனர். ஸ்டீபிள் சேஸ் பைனலுக்கு முன்னேறிய லலிதா பாபர், வில்வித்தையில் பாம்பேலா தேவி, கலப்பு இரட்டையர் டென்னிசில் சானியா - போபண்ணா ஜோடியும் கூட பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தும் கை கூடவில்லை. மிகச் சிறிய நாடுகள் கூட பதக்க வேட்டையில் பாய்ச்சல் காட்டிய நிலையில், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் 2 பதக்கம் மட்டுமே பெற முடிந்தது பெரிய ஏமாற்றம் தான்.

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடு, வீரர்கள் தேர்வில் பாரபட்சம், நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு என்று வழக்கம் போல தோல்விக்கான காரணங்கள் வரிசை கட்டுகின்றன. ‘வெளி நாடுகளில் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்காக செலவிடப்படும் தொகையில் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நமது வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை’ என்று ஆதங்கப்படுகிறார் ஒலிம்பிக்சில் தனிநபர் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரிய பிந்த்ரா.

பதக்கங்களை வென்று சாதனை படைத்த சாக்‌ஷி, சிந்துவுக்கு போட்டி போட்டுக் கொண்டு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் அரசுகள், அந்த வெற்றிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கஞ்சத்தனமாக நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது? வீரர்கள் தேர்வில் இன்னும் கவனம் தேவை.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. மூட்டை தூக்கும் இளைஞனை பளுதூக்குதலில் பயிற்சியளித்து களமிறக்குங்கள். கடல் அலைகளை துச்சமாக நினைத்து நீந்தி விளையாடும் மீனவ சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி, சாலையோரம் கழைக்கூத்தாடும் சிறுமிக்கு ஜிம்னாஸ்டிக்ஸ், பள்ளி செல்வதற்காக தினமும் பல மைல் தூரம் நடக்கும் மலை கிராம மாணவர்கள்... என்று தேடித் தேடி தேர்வு செய்தால் ஓராயிரம் உசேன் போல்ட், மைக்கேல் பெல்ப்ஸ், லியோனல் மெஸ்ஸி கிடைப்பார்கள்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கப் போகிறது. இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது. உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே கணிசமான பதக்கங்களைப் பெற முடியும். இந்த கவலை பிரதமர் மோடிக்கும் வந்திருக்க வேண்டும். அதனால் தான் அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட ‘செயலாக்கப் படை’ ஒன்றை சில தினங்களுக்குள்ளாகவே உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டு தொடர்பான ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டமிடல், பயிற்சி, வீரர்கள் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து இந்த செயலாக்கப் படை அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். வரவேற்கத்தக்க முடிவு. வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் முழு மூச்சாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.   

பெண்களால் பெருமை

ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி பத்து நாட்களுக்கு மேலான பிறகும் இந்திய அணியால் பதக்க பட்டியலில் இடம் பெற முடியவில்லை. பூஜ்ஜியத்துடன் திரும்பி பெருத்த அவமானமாகி விடுமோ என்ற கவலை வாட்டி வதைத்தது.125 கோடி பேர் உள்ள நாட்டில், பதக்கம் வெல்ல ஒருவர் கூடவா இல்லை என்ற கேள்வி இதயங்களை துளைத்து எடுத்த நிலையில் தான், ரக்ஷா பந்தன் தின பரிசாக ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் இந்தியாவின் வசமானது.

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைக்க, மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பதை உறுதி செய்தார் பி.வி.சிந்து.பிரீஸ்டைல் மல்யுத்தம் 58 கிலோ எடை பிரிவு பிளே-ஆப் போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையுடன் மோதிய சாக்ஷி 0-5 என்ற கணக்கில் பின்தங்கியபோது, மீண்டும் ஒரு பதக்க வாய்ப்பு வீணாகப் போகிறது என்றே தோன்றியது.

ஆனால், மன உறுதியுடன் புலிப் பாய்ச்சல் காட்டி போராடிய அவர் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 8-5 என வெற்றியை வசப்படுத்தியதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.பெண் குழந்தையை குஸ்தி போட வைப்பதா என்று சாக்ஷியின் பெற்றோரை திட்டித் தீர்த்த கிராம மக்கள், இன்று தேசத்துக்கே பெருமை சேர்த்த சாதனை வீராங்கனையை தங்கள் மண்ணின் மகளாக போற்றிக் கொண்டாடுகிறார்கள். பேட்மின்டன் பைனலில் உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்ட பி.வி.சிந்துவும் நம் நாட்டு பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக புரியவைத்தார்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டாலும், உலக சாம்பியனுக்கு ஈடுகொடுத்து விளையாடி பாராட்டுகளை அள்ளினார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்சில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை அவருக்கு சொந்தமாகி உள்ளது. பதக்கம் வென்ற சாக்ஷி, சிந்து மட்டுமல்ல… மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு பைனலில் பங்கேற்று 4வது இடம் பிடித்த தீபா கர்மாகர், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லலிதா பாபர், வில்வித்தையில் போராடிய பாம்பேலா தேவி, கலப்பு இரட்டையர் டென்னிசில் போபண்ணாவுடன் இணைந்து கலக்கிய சானியா மிர்சா, காயம் காரணமாக பதக்க வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் உள்பட அனைவருமே தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கவுரவமாக விலகியிருக்கலாம்...

ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் தகுதிச் சுற்றில் 59 வீரர்கள் களமிறங்கினர். அகன்ற மார்பு, உறுதியான தோள்கள், ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் பதக்க வேட்டைக்கு தயாராக நின்ற வீரர்களின் இடையே ஒருவர் மட்டும் தொந்தியும் தொப்பையுமாக நின்றது வித்தியாசமான காட்சியாக இருந்தது. விறுவிறுப்பாக நடந்த பந்தயத்தில், எத்தியோப்பியாவை சேந்த ரோபெல் கிரோஸ் ஹாப்தே என்ற அந்த வீரர் சர்வதேச தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடைசி இடம் பிடித்ததில் யாருக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவரது தோற்றமும், அதிகமான எடையால் நீந்த முடியாமல் தடுமாறியதும் சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகி பரபரத்தது. ‘ரோபெல் தி வேல்’ என்று அவரை திமிங்கலமாக வர்ணித்தனர். எத்தியோப்பியாவுக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர். தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தவர் தான் இந்த ரோபெல். விளையாட்டுப் போட்டிகளின் மணிமகுடமாக திகழும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, இது போன்ற தகுதியற்ற நபரை எப்படி அனுமதித்தார்கள் என்று கேட்டவர்கள் எல்லாம்... எத்தியோப்பிய நீச்சல் கூட்டமைப்பு தலைவர் கிரோஸ் ஹாப்தேவின் மகன் தான் ரோபெல் என்ற பதிலால் வாயடைத்துப் போனார்கள். ‘இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்து பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஓய்வெடுத்ததே எனது மோசமான நீச்சலுக்கு காரணம். 80 கிலோவாக இருந்த எடை 120 கிலோவாக அதிகரித்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. கடுமையான விமர்சனங்களால் சோர்ந்துவிட மாட்டேன். கடுமையாக பயிற்சி செய்து உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் எனது திறமையை நிரூபிப்பேன்’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் ரோபெல்.‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடல்தகுதி இல்லை என்று தெரிந்த பிறகும், எதற்காக ரியோ சென்று நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும். தொடக்க விழா அணிவகுப்பில் தலைமையேற்க அவருக்கு என்ன தகுதி உள்ளது. வீரர்கள் தேர்வில் பாரபட்சமும் அதிகார துஷ்பிரயோகமும் காட்டப்படுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது’ என்று கொதிக்கிறார் எத்தியோப்பிய மாரத்தான் வீரர்.நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வீரர், வீராங்கனைகளுக்கு அந்த கவுரவத்தை கொடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் நியாயமானதே. அதை உறுதி செய்யும் வகையில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் எத்தியோப்பிய வீராங்கனை அல்மாஸ் அயனா. முழு உடல்தகுதி இல்லாத நிலையில், கவுரவமாக விலகியிருந்தால் இந்த அவப்பெயரை தவிர்த்திருக்கலாம். திறமையான வேறொரு வீரர் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். 

சனி, 13 ஆகஸ்ட், 2016

நம்பிக்கை ஒளி

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 31வது ஒலிம்பிக் போட்டித் தொடர், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் தென் அமெரிக்க நாடு என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த தொடரை நடத்துவதில் பிரேசில் எதிர்கொண்டுள்ள சவால்கள் ஏராளம். ஜிகா வைரஸ் தொற்று அபாயம், அரசியல் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் என்று பல்வேறு தடைக்கற்களை தாண்டி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது திருப்தி அளிக்கிறது. இன்னும் இரண்டு வார காலத்துக்கு எந்த சிக்கலும் இல்லாமல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக அகதிகள் அணி பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மனித நேயத்தின் போற்றத்தக்க வெளிப்பாடு. தொடக்க விழா அணிவகுப்பில் அகதிகள் அணி வீரர், வீராங்கனைகளை வரவேற்று பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், ‘பிரச்னைகள், அவநம்பிக்கை, உறுதியற்ற தன்மை கொண்ட உலகில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இவற்றுக்கான தீர்வை இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலமாகக் காண முடிகிறது. 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திறன்மிக்க வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்காக தங்களுக்குள் போட்டியிட்டாலும், ஒலிம்பிக் கிராமத்தில் அமைதியாகவும் நட்புணர்வுடனும் ஒன்றாகத் தங்கியிருந்து உணவு, உறைவிடம் மட்டுமல்லாது தங்களின் உணர்வுகளையும் பகிர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வதில் இருந்து ஒவ்வொருவரும் பாடம் கற்க வேண்டும். நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை விடவும், மனிதநேயத்துடன் கூடிய நமது ஒற்றுமையின் ஆற்றல் அதிகம். இங்கே அணிவகுக்கும் அகதிகள் அணி வீரர், வீராங்கனைகள் இந்த உலகுக்கு விலைமதிப்பில்லா தகவலை சுமந்து வருகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அகதிகளுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்குகிறீர்கள். வன்முறை, ஏழ்மை, சமத்துவமின்மை காரணமாக உங்கள் வீடுகளை விட்டு, தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாலும், உங்களின் திறமையாலும் போராட்ட குணத்தாலும் தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.அந்த தருணத்தில் அகதிகள் அணி வீரர்களின் முகங்களில் தோன்றிய உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணியின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, உலகில் அகதிகள் என்று யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். அதற்கான நம்பிக்கை ஒளியாகவே ஒளிர்கிறது ரியோ ஒலிம்பிக்.   

தடைகளை தாண்டி

ரியோ ஒலிம்பிக்ஸ் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த விளையாட்டு திருவிழாவுக்கு பிரேசில் முழு அளவில் தயாராகிவிட்டதா? என்றால்... இது வரை இல்லை என்ற பதிலே மிரட்டுகிறது.அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதமாக ஊதியம் வரவில்லை என்பதால் வீதிக்கு இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டக் காரர்களில் சிலர் ஒலிம்பிக் சுடர் விளக்கை திருடிச் சென்று, எரிந்து கொண்டிருக்கும் ஜோதியை அணைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராணுவம் வரவழைக்கப்பட்டு கண்ணீர்புகை குண்டுவீச்சு, ரப்பர் புல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரச்னை இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது.ஜிகா வைரஸ் தொற்று அபாயம் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் ஒலிம்பிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டதும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.கழிப்பறையில் குழாய்கள் அடைத்துக் கொண்டு தண்ணீர் போகவில்லை, மின் சாதனங்கள் சரியாகப் பொருத்தப்படாமல் கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறி ஆஸ்திரேலிய அணி வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் நுழையவே மறுத்துவிட்டனர். அவசரம் அவசரமாக எல்லா குறைகளையும் சரி செய்து அவர்களை தங்க வைத்த நிலையில், ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் எல்லோரையும் தற்காலிகமாக வெளியேற்ற வேண்டிய இக்கட்டான நிலை. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கிறது.‘முதலில் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. ஒரு வார காலமாக ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டார்கள். திடீர் தீ விபத்தால் வீரர், வீராங்கனைகள் சற்று பதற்றமாகி விட்டனர். இப்போது எல்லாம் சரியாகவே உள்ளது. ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன’ என்கிறார் ஆஸி. அணி தலைமை நிர்வாகி கிட்டி சில்லர்.ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக ரஷ்ய அணி வீரர், வீராங்கனைகள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரியோ நகரில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணம் என்பதால் கவனமாக இருங்கள் என்று தங்கள் அணியை சீன அரசு எச்சரித்துள்ளது. ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய விளையடடுப் போட்டியை நடத்தும்போது, இது போன்ற
தடங்கல்கள் வருவது சகஜம் தான். எல்லாவற்றையும் சமாளித்து ரியோ ஒலிம்பிக்சை
வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என்கிறார்கள் பிரேசில் அதிகாரிகள். போட்டிகள் தொடங்கியதும் வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை அள்ளும்போது இந்த சிறு சிறு குறைகள் காணாமல் போய்விடும் என நம்புவோம். 

ரஷ்யாவின் பேராசை

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, ரஷ்ய தடகள வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது கேள்விக் குறியாகி உள்ளது.தங்கள் நாட்டு அணி பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்ற பேராசையில், ஊக்கமருந்து உபயோகத்தை அரசும் அதிகாரிகளும் ஊக்குவித்தது வெளிச்சத்துக்கு வந்ததால் ரஷ்யாவை சேர்ந்த 68 வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து விளையாட்டு தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்கும் சர்வதேச தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தடையை நீக்க மறுத்து ரஷ்யாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட 68 பேருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரஷ்ய அணியையும் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில், இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டியும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்த சர்ச்சையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முடிவு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. தவறு செய்த வீரர், வீராங்கனைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுங்கள். ஒட்டுமொத்தமாக ரஷ்ய அணியை தடை செய்தால், எந்த தவறும் செய்யாத அப்பாவி வீரர், வீராங்கனைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆண்டுக் கணக்கில் கடுமையாகப் பயிற்சி செய்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களின் எதிர்காலமே இதனால் வீணாகிவிடும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குள் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.‘திறமையான எங்கள் அணியை முடக்கிவிட்டு, ஒலிம்பிக் பதக்கங்களை தட்டிச் செல்ல சர்வதேச சதி நடக்கிறது. இப்படி குறுக்கு வழியில் பெறும் பதக்கங்கள் உண்மையான வெற்றிக்கு சான்றாக முடியாது’ என குமுறுகிறார் போல்வால்ட் நட்சத்திர வீராங்கனை இசின்பயேவா. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை மாற்றி, மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை திருத்தி எழுதுவதற்கு அரசாங்கமே ஆதரவாக இருந்தது என்ற குற்றச்சாட்டை அவ்வளவு எளிதாக அலட்சியப்படுத்திவிட முடியாது. தண்டனை கடுமையாக இருந்தால் தான் மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காது. ‘ரஷ்ய அணிக்கு தடை என்ற முடிவு துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால், விதிமுறைகளை கடைப்பிடிப்பது அதைவிட முக்கியம்’ என்கிறார் ஒலிம்பிக் தடகள நட்சத்திரம் உசேன் போல்ட். ஊக்கமருந்து உபயோகிக்காதவர்கள், ரஷ்யா சார்பில் களமிறங்காமல் தனிப்பட்ட முறையில் எந்த நாட்டையும் சேராத வீரர், வீராங்கனைகளாக பங்கேற்க அனுமதிக்கலாம் என்ற ஆலோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

பாதுகாப்பது கடமை

ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம், பிரேசில் நாட்டை அச்சுறுத்தி வரும் ஸிகா வைரஸ் தாக்குதல், ஒலிம்பிக் போட்டியையும் வெகுவாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உயிரை பறிக்கும் அளவுக்கு வீரியம் மிக்கது அல்ல என்றாலும், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி சிறிய தலைகளுடன் பிறக்கும் என்பதால் பிரேசில் செல்வதா... வேண்டாமா? என்ற தயக்கம் எல்லோரையுமே தொற்றிக் கொண்டுள்ளது.கனடா நாட்டு டென்னிஸ் வீரர் மிலோஸ் ரயோனிச், ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப் இருவரும் ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரியோ ஒலிம்பிக்சில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ‘இது மிகவும் கடினமான முடிவு. குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பிறகு, உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். கனமான இதயத்துடன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார் ரயோனிச்.‘டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எனக்கென ஒரு குழந்தை, குடும்பம் வேண்டும் என விரும்புகிறேன். பிரேசில் பயணத்தால் அந்த கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க முடியாது’ என்கிறார் ஹாலெப்.அமெரிக்காவின் ஜான் ஐஸ்னர், ஆஸ்திரேலியாவின் டாமிக், கிர்ஜியோஸ், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ்... என்று விலகிய டென்னிஸ் வீரர்களின் பட்டியல் நீள்கிறது. கோல்ப் விளையாட்டில் உலகின் டாப் 4 வீரர்கள் ஏற்கனவே ரியோ பயணத்தை ரத்து செய்துவிட்டார்கள். இன்னும் எத்தனை பேர் விலகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ‘எந்தவித அச்சமும் இல்லாமல் எங்கள் நாட்டுக்கு வாருங்கள். ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்களில் ஒருவருக்கு கூட ஸிகா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம்’ என்று உறுதியளிக்கிறார் பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் ரிகார்டோ பாரோஸ். ஆண்டின் தொடக்கத்தில் ஸிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-3500 என இருந்தது. தற்போது அது 30க்கும் கீழாக குறைந்துவிட்டது. கொசுக்களை அழிக்கவும், மீண்டும் பெருகாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதும் சாதகமாக உள்ளது என்கிறார்கள் ரியோ வாசிகள். 

திறமைக்கு மகுடம்

கோபா அமெரிக்கா நூற்றாண்டு விழா போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்... ஒரே சமயத்தில் இரண்டு பெரிய கால்பந்து போட்டித் தொடர்கள் நடந்தது உலகம் முழுவதும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. இந்த கால்பந்து ஜுரம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. சுமார் மூன்று வார காலம் தூக்கத்தை தொலைத்து திகட்டத் திகட்ட பார்த்து ரசித்தார்கள்.லீக் சுற்று மற்றும் நாக் அவுட் ஆட்டங்களில் அனல் பறந்தாலும், அர்ஜென்டினா - சிலி அணிகளிடையே நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் மூலமாக நிர்ணயிக்கப்பட்டது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இதற்காகவா இத்தனை போராட்டம் என்ற சலிப்பும் விரக்தியும் அடி மனதை அறுப்பதை தவிர்க்க முடியவில்லை. உலக கோப்பை, ஒலிம்பிக், கோபா அமெரிக்கா, யூரோ போன்ற தொடர்களில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க ‘பெஸ்ட் ஆப் த்ரீ’ அடிப்படையில் இறுதிப் போட்டியை நடத்துவதே நியாயமாக இருக்கும்.ஸ்பெயினின் லா லிகா சாம்பியன்ஷிப்பில் நடத்துவது போல உள்ளூர்/வெளியூர் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணிக்கு கோப்பையை வழங்குவது மிகப் பொருத்தமானது. ரசிகர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருந்தாலும், எல்லா வகையிலும் திறமையான அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்க வேண்டும் என்பதே விளையாட்டின் அடிப்படை அம்சம். பெனால்டி ஷூட் அவுட்டில் அது தீர்மானிக்கப்படும்போது, திறமையை விட அதிர்ஷ்டத்தின் பங்கு அதிகமாகி விடுகிறது. மின்னல் வேக ஷாட்டை விநாடிக்கும் குறைவான நேரத்தில் கணித்து தடுக்க வேண்டிய கட்டாயம் கோல் கீப்பருக்கு. பந்தை வலைக்குள் திணிக்க வேண்டுமே என்ற பதற்றமும், மன அழுத்தமும் ஷாட் அடிப்பவருக்கு. இப்படி ஒட்டுமொத்த அணியின் தலையெழுத்தையும் ஒருசில வீரர்களின் கையில் ஒப்படைப்பது நியாயமாகப் படவில்லை. காலம் காலமாக கால்பந்து போட்டி இப்படித்தானே நடக்கிறது? உண்மைதான். ஆனால், அதில் மாற்றம் செய்வதற்கான தருணம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் போட்டி என்ற நிலை மாறி, ஒருநாள் போட்டி, டி20 என்று வந்த பிறகு அதன் வளர்ச்சியும் ஈர்ப்பும் பிரமிக்க வைக்கிறதே.கடைசி வரை சமநிலை நீடித்து இழுபறியாக அமையும் கால்பந்து போட்டிகளில் பெனால்டி ஷூட் அவுட்டுடன், தலா 5 கார்னர் கிக், பிரீ கிக் வாய்ப்புகளையும் சேர்த்து வழங்கினால் திறமையான அணிக்கு வெற்றி உறுதி என்பதோடு இதில் ஏற்படும் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு ரசிகர்களுக்கு விருந்தாகும். பரீட்சார்த்தமாக முயற்சிப்பதில் பாதகம் ஏதுமில்லை. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தாராளமாக பரிசீலிக்கலாம்.

பக்குவம் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்த நிலையில், அனைத்து வகையிலும் பொருத்தமான அனில் கும்ப்ளேவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது வரவேற்கத்தக்க முடிவு. குறிப்பாக, இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு, கும்ப்ளேவின் அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் மிக உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.முன்னாள் கேப்டன்கள் கங்குலி, சச்சின் மற்றும் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் வி.வி.லஷ்மண் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினரின் பரிந்துரை அடிப்படையில் கும்ப்ளேவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முடிவு எல்லோருக்கும் மகிழ்ச்சி, திருப்தி அளித்திருந்தாலும், பதவிக்கான போட்டியில் பங்கேற்று முடிவுக்காக ஆவலோடு காத்திருந்த ரவி சாஸ்திரிக்கு பெருத்த ஏமாற்றம்.  நேர்காணலில் தான் பங்கேற்றபோது, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த கங்குலி வேண்டுமென்றே வெளியேறி தன்னை அவமதித்துவிட்டதாக சாஸ்திரி குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது போன்ற முக்கியமான கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கங்குலிக்கு தெரியவில்லை என்று தாக்கினார். இதற்கு பதிலளித்த கங்குலி, ‘நேர்காணலின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த ரவி சாஸ்திரி கொல்கத்தாவுக்கு நேரில் வந்து கலந்து கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, பாங்காக்கில் சுற்றுலா போன இடத்தில் இருந்து ஸ்கைப் மூலமாக ஆன்லைனில் பங்கேற்பது எந்த வகையில் நியாயம். கிணற்றுத் தவளை போல ஏதேதோ உளறுகிறார்’ என்று பதிலடி கொடுக்க, முன்னாள் கேப்டன்களின் மோதலில் அனல் பறக்கிறது.ஏகத்துக்கு கடுப்பான சாஸ்திரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சொந்த காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியிருப்பதாகக் கூறினாலும், இந்த குழுவுக்கு கும்ப்ளே தலைவராக இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்திய அணியின் கேப்டன், உயர் செயல்பாட்டு இயக்குனர், வர்ணனையாளர் உள்பட பல பொறுப்பான பதவிகளில் இருந்தவர் இப்படி பொறுமை இழந்து வார்த்தைகளை கொட்டுவது சரியல்ல. கங்குலியும் கூட இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் பக்குவமாக கையாண்டிருக்கலாம். இந்த ஈகோ மோதலால், அவர்கள் மீதான மதிப்பு, மரியாதை சேதாரமாகி இருக்கிறது என்பதே உண்மை. ‘பயிற்சியாளர் யார் என்பது முக்கியமல்ல. இன்று நான், நாளை வேறு யாரோ ஒருவர். இதில் வீரர்களின் நலனும், அணியின் வெற்றியுமே முக்கியம்’ என்று இந்த சர்ச்சைக்கு கும்ப்ளே முற்றுப்புள்ளி வைத்தது அவரது முதிர்ச்சியை காட்டுகிறது.

செவ்வாய், 28 ஜூன், 2016

நம்பிக்கை நட்சத்திரம்

ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கிவிட்டது. இன்னும் 40 நாளில் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிவிடும். பதக்கங்களை அள்ளிக் குவிக்க வீரர், வீராங்கனைகள் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியா சார்பிலும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது, புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆண்கள் ஹாக்கி அணி, டென்னிசில் பயஸ், போபண்ணா, சானியா, பேட்மின்டனில் சாய்னா, ஜிம்னாஸ்டிக்சில் தீபா கர்மாகர் உள்பட பல பிரிவுகளில் பதக்க வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. இந்த பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உற்சாகமாக சிறகடிக்கிறார் தடகள வீராங்கனை டூட்டீ சந்த்.ஒலிம்பிக்சின் பிரதான போட்டி என்றால் அது 100 மீட்டர் ஓட்டம் தான். அதிவேக வீரர், வீராங்கனையாக யார் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில் பி.டி.உஷா பங்கேற்றார். அதன் பிறகு ஒலிம்பிக் 100 மீ. ஓட்டத்துக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை டூட்டீ சந்த்துக்கு கிடைத்துள்ளது.ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் 4வது மகளாகப் பிறந்தாலும், தனது முயற்சியாலும் கடுமையான பயிற்சியாலும் இதை சாதித்திருக்கிறார். கஜகஸ்தானில் நடந்த போட்டியில் பந்தய தூரத்தை 11.30 விநாடிகளில் கடந்து ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார். இது மட்டும் போதுமா? பதக்கம் வெல்ல முடியுமா? போன்ற கேள்விகளை ஒதுக்கித் தள்ளி, நம்பிக்கையுடன் முயன்றால் இலக்கை நிச்சயம் எட்ட முடியும்.

மகளிர் 100 மீட்டர் ஓட்டத்திலும் போட்டி கடுமையாகிக் கொண்டே தான் வருகிறது. 1920களில் 14 விநாடிகளில் ஓடியதே உலக சாதனையாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து தற்போது 11 விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஓட முடிந்திருக்கிறது. 1988ல் அமெரிக்க வீராங்கனை கிரிபித் ஜாய்னர் 10.49 வீநாடியில் ஓடிக் கடந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. காற்றின் வேகம் அவரது சாதனைக்கு சாதகமாக இருந்ததாக சர்ச்சை எழுந்தாலும், சர்வதேச தடகள கூட்டமைப்பு அந்த சாதனையை அங்கீகரித்தது.

அந்த அதிவேகத்தை எட்ட முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வென்றாலே டூட்டீ சந்த்தின் பெயர் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படும் என்பது உறுதி. 

செவ்வாய், 21 ஜூன், 2016

புதிய எழுச்சி

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 36 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், உலக சாம்பியனும் நம்பர் 1 அணியுமான ஆஸ்திரேலியாவுக்கு கடைசி வரை ஈடு கொடுத்த இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி கொடிகட்டிப் பறந்த காலம் முடிவுக்கு வந்து பல மாமாங்கம் ஆகிவிட்டது. தொடர்ச்சியாக 6 முறை உள்பட ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம் வென்ற இந்திய அணி, 1980க்கு பிறகு படிப்படியாக கீழிறங்கி பரிதாபமான நிலையை எட்டியது. 2008ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறக் கூட முடியவில்லை. தேசிய விளையாட்டு என்பதே மறந்துபோகும் அளவுக்கு தோல்வியால் துவண்டுகிடந்த ஹாக்கி அணி, இன்று புதிய எழுச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. ஹாக்கி விளையாட்டில் மிகப் பெரிய தொடராகக் கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபியில், முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றதே பெரிய சாதனை தான்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி, ஒரு மணி நேர ஆட்டத்தில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் தீரமாகப் போராடியதை பாராட்டாமல் இருக்க முடியாது.சமீபத்தில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடரில் இரண்டு முறையும், சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை சந்தித்தபோது ஒரு டஜன் கோல் விட்டுக் கொடுத்திருந்தது இந்திய அணி. ஆனால், இறுதிப் போட்டியில் வியூகத்தை முற்றிலுமாக மாற்றி உலக சாம்பியனை திக்குமுக்காட வைத்துவிட்டது.

சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில், நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தவறவில்லை.எட்டு விநாடிகளில் பெனால்டி ஷூட் அவுட் முயற்சி பூர்த்தியடைய வேண்டும் என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு, ஆஸ்திரேலிய வீரருக்கு நடுவர்கள் மறுவாய்ப்பு அளித்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த தவறான முடிவால் இந்திய வீரர்கள் சோர்வடையத் தேவையும் இல்லை.

இதே எழுச்சியுடன் ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடினால், பதக்கத்தை வசப்படுத்தி தேசத்துக்கு பெருமை சேர்க்க முடியும். 

செவ்வாய், 14 ஜூன், 2016

தேசத்துக்காக விளையாடுங்கள்

ரியோ ஒலிம்பிக்சில் அனுபவ வீரர் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா இணைந்து விளையாடுவார்கள் என்று உரிய நேரத்தில் அறிவித்து பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்திய டென்னிஸ் சங்கம். சர்வதேச டென்னிஸ் இரட்டையர் தரவரிசை பட்டியலில் 10வது இடம் பிடித்த போபண்ணா, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். தனக்கு ஜோடியாக விளையாடும் வீரரை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு கிடைத்தது.

யாரை தேர்வு செய்யப் போகிறாரோ என்ற பரபரப்புக்கு இடையே, இளம் வீரர் சாகேத் மைனேனியுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டியில் களமிறங்க விரும்புவதாக இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார் போபண்ணா.அவரது கோரிக்கையை தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்ட டென்னிஸ் சங்கம், கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் பயசுடன் ஜோடி சேர்ந்து விளையாடுங்கள் என அறிவுறுத்தியதுடன், ஒலிம்பிக் போட்டிக்கான அணியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார் பயஸ். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றது, 42 வயதிலும் அவரது ஆட்டத் திறனும் உடல்தகுதியும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதற்கு அத்தாட்சி.தனக்கான இணையை தேர்வு செய்யும் உரிமை போபண்ணாவுக்கு இருந்தாலும், பயசுடன் இணைந்து விளையாடினால் மட்டுமே பதக்க வாய்ப்பு அதிகம் என்று தேர்வுக் குழுவினர் தெளிவு படுத்தியுள்ளனர். மைனேனியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் போபண்ணா சோர்வடைய வேண்டிய அவசியம் இல்லை. அவரது விருப்பம் நியாயமானதாக இருந்தாலும் கூட,

தேர்வுக் குழுவினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், தாய்நாட்டுக்காக முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவதே முக்கியம். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 8, கலப்பு இரட்டையர் பிரிவில் 10 என மொத்தம் 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பயசின் அனுபவத்துக்கு தற்போதுள்ள வீரர்களில் யாருமே ஈடாக மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பயஸ் - போபண்ணா ஒருங்கிணைந்து விளையாடினால் ஒலிம்பிக் பதக்கத்தை நிச்சயம் வசப்படுத்த முடியும். 

செவ்வாய், 7 ஜூன், 2016

மகத்தான வீரர்

முகமது அலி... உலகம் முழுவதும் குத்துச்சண்டை விளையாட்டின் அடையாளமாக உச்சரிக்கப்படும் பெயர். ஹெவி வெயிட் பாக்சிங்கில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம், நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் விருது. எதிர்த்து போட்டியிட்ட வீரர்களை நாக்-அவுட் செய்து, ‘அலி தி கிரேட்டஸ்ட்’ என்று தன்னைத் தானே மகத்தான வீரனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், களத்திலும் வெளியிலும் தனது துணிச்சலான செயல்பாடுகளால் உண்மையிலேயே மகத்தான வீரராக அனைவராலும் போற்றப்படக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்.

ஏழ்மையான பின்னணி, ஒதுக்கப்பட்ட கறுப்பர் இனம் போன்ற தடைக்கற்களை எல்லாம் தகர்த்தெறிந்து, குத்துச்சண்டை களத்தில் தனி முத்திரை பதித்த கிளாசியஸ் கிளே ஜூனியர், பின்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி முகமது அலியாக மாறினார். கட்டாய ராணுவப் பயிற்சிக்கு மறுப்பு தெரிவித்ததுடன் வியட்நாம் போருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது, சிறைவாசம், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பாக்சிங் உரிமம் பறிப்பு என்று 25வது வயது முதல் 29வது வயது வரை வாழ்க்கையே போராட்டமாக மாறிய நிலையிலும் மன உறுதியை கைவிடாமல் எதிர்நீச்சல் போட்டவர். உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர், மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்த முகமது அலி அமெரிக்க இளைஞர்களின் அபிமான நாயகனாக மாறியதில் வியப்பேதும் இல்லை.

சன்னி லிஸ்டன், ஜோ பிரேசியர், ஜார்ஜ் போர்மேன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எதிராக அவர் பெற்ற வெற்றிகள் இன்றளவும் பிரமிப்போடு பார்க்கப்படுகின்றன. நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஒஹையோ ஆற்றில் வீசி எறிந்த பேராண்மை மிக்கவர். மின்னல் வேக குத்து, நேர்த்தியான தற்காப்பு வியூகம், நடனம் போலவே நளினமான கால் அசைவு... என்று பாக்சிங் வளையத்தை தெறிக்கவிட்டவருக்கு, நரம்பு மண்டலத்தை பாதித்து படிப்படியாக செயலிழக்கச் செய்யும் பர்கின்சன்ஸ் நோயையும் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது.

போட்டியிடப் போகும் வீரருக்கு சவால் விடும் வகையில் முகமது அலி பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவரது புகழை பல மடங்கு அதிகரிக்கக் கூடிய மந்திர வாக்கியங்களாகவே அவை மாறிப் போனது அதிசயம் தான். அந்த மகத்தான வீரர் இன்று மறைந்துவிட்டாலும், குத்துச்சண்டை வரலாற்றிலும் ரசிகர்களின் மனத்திலும் அவரது பெயர் என்றென்றும் நிச்சயம் நிலைத்திருக்கும். 

ஞாயிறு, 29 மே, 2016

சாதனை கை கூடுமா?

ரபேல் நடால்... டென்னிஸ் ரசிகர்களின் அபிமான வீரர்கள் பட்டியலில் மறக்க முடியாத பெயர். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர். பத்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மகத்தான சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 3வது சுற்றிலேயே விலக வேண்டி வந்தது துரதிர்ஷ்டவசமானது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் பிரெஞ்ச் ஓபனில் இருந்து ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், தற்போது நடாலும் இல்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம் தான். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பெடரர் 17 பட்டங்களும், நடால் 14 பட்டங்களும் வென்றுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவருக்கும் இடையே நிலவிய கடும் போட்டி, டென்னிஸ் விளையாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தது என்றால் மிகையல்ல. இவர்களுக்கு இணையானது, தற்போதைய நம்பர் 1 வீரர் ஜோகோவிச் பங்களிப்பும்.ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வெல்லும் கேரியர் கிராண்ட் ஸ்லாம் எனும் சாதனையை பெடரர், நடால் வசப்படுத்திய நிலையில், ஜோகோவிச்சுக்கு மட்டும் அது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இரண்டு மகத்தான வீரர்களின் கடும் போட்டிக்கு இடையில் ஆஸி. ஓபனில் 6 முறை, விம்பிள்டன் 3, அமெரிக்க ஓபனில் 2 என 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் அவரால் இதுவரை சாதிக்க முடியவில்லை. நடாலின் அசைக்க முடியாத ஆதிக்கம் தான் இதற்கு முக்கிய காரணம்.பெடரர், நடால் இருவருமே இல்லாததால் இம்முறை கேரியர் கிராண்ட் ஸ்லாம் சாதனை ஜோகோவிச்சுக்கு கை கூடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற இரண்டு வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், நல்ல உடல்தகுதியுடன் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் கோப்பையையும் முத்தமிடுவார் என எதிர்பார்க்கலாம்.

யாருக்கு வாய்ப்பு?

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், நர்சிங் யாதவ் இருவரும் மல்லுகட்டுகின்றனர். இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் சுஷில். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஆண்டு நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கான ஒதுக்கீட்டு இடத்தை உறுதி செய்தவர். துரதிர்ஷ்டவசமாக, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் சுஷில் குமாரால் அந்த போட்டியில் களமிறங்க முடியாமல் போனது.தற்போது காயம் குணமடைந்து முழு உடல்தகுதியுடன் இருக்கும் சுஷில், ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க தனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். ‘ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் இந்தியா சார்பில் களமிறங்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். மூன்றாவது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று சாதனை படைப்பதே என் லட்சியம். அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தகுதிப் போட்டிக்கு ஏற்பாடு செய்தால் நர்சிங் யாதவுடன் மோத தயார். யார் ஜெயிக்கிறோமோ அவரை ரியோ அனுப்பி வையுங்கள்என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ள அவர், பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதால் பிரச்னை தீவிரமாகி இருக்கிறது.அவரது கோரிக்கையை ஏற்பது பற்றி மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். ஒலிம்பிக் தகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்த எனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் நர்சிங் யாதவ். அது தான் வழக்கமான நடைமுறையும் கூட. 2004 ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக யோகேஷ்வர் தத்துடன் தகுதி போட்டிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி கிர்பா சிங் என்ற வீரர் நீதிமன்றத்தை நாடியபோது, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட முன்னுதாரணமும் உள்ளது என்கிறார் ஒரு நிர்வாகி.சுஷில், நர்சிங் இருவருமே திறமையான வீரர்கள் தான். இந்த தர்மசங்கடமான நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏமாற்றும் முயற்சி

வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே பாக்கி. தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, விவசாயக் கடன் ரத்து, மின் கட்டணத்தை மாதாந்திர அடிப்படையில் வசூலிப்பது மற்றும் பால் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்புகள்.தேர்தல் தொடர்பான நடைமுறைகளில் எப்போதும் முந்திக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு, அதை தன்னம்பிக்கையின் அடையாளமாக முத்திரை குத்திக் கொள்ளும் அதிமுக தலைமை, இம்முறை தேர்தல் அறிக்கை வெளியிட காட்டிய தயக்கமும் கால தாமதமும் ஏதோ பெரிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஆனால், பிரத்யேகமான குழு அமைத்து, பல நாள் யோசித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. திமுக அறிக்கையின் நல்ல அம்சங்களை அப்பட்டமாக நகல் எடுத்தவர்கள், செயல்படுத்த முடியாத சில கவர்ச்சி திட்டங்களை சேர்த்து தூண்டில் புழுவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.சென்னையில் ஓடப்போவதாக அறிவித்த மோனோ ரயிலுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் டெண்டரை கூட இறுதி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையிலும் மோனோ ரயில் சேவை என்ற அறிவிப்பு நல்ல நகைச்சுவை.100 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிர் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம்என்ற அறிவிப்பும் இதே ரகம் தான். மின் பயனீட்டு அளவை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டால் கிடைக்கும் பலன் பல மடங்கு அதிகம் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிய விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் யாருக்கும் பிரயோஜனமில்லாமல் காயலாங்கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை கொள்முதல் செய்ததில் கோடி கோடியாய் சுருட்டியிருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள தகவல், வயிறெரியச் செய்கிறது. மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை 600 ரூபாய் என்றிருந்ததை 1000 ரூபாயாக அதிகரித்ததில், 5 ஆண்டுகளில் 24,000 ரூபாய் நஷ்டம். பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்ததாக வைத்துக் கொண்டால் கூட பத்தாயிரம் காலி. சென்னையில் இருந்து குடும்பத்தோடு மதுரை, நெல்லை, கோவை என்று ஊருக்கு போய் வந்ததில் சில ஆயிரங்கள். மின் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றியதால் ஒரு முப்பதாயிரம். இப்படி ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை பிடுங்கியிருக்கிறது இந்த அரசு. விண்ணை முட்டும் விலைவாசியில் சேமிப்பு என்ற வார்த்தையே சேதாரமாகி இருக்கிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய அளவுக்கு ஓட்டை உடைசல் பேருந்துகள். குண்டும் குழியுமான சாலைகள். சரியான கழிப்பறை வசதி இல்லை. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் பேருந்து நிறுத்தங்களில் இலவச வை-பை வசதி போன்ற வெற்று அறிவிப்புகள், மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நல்ல நடவடிக்கை

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க கணிசமான வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இந்திய அணிக்கு இளைஞர்களிடையே ஆதரவை அதிகரிக்கவும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாலிவுட்
நடிகர் சல்மான் கான் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், தடகள நட்சத்திரம் மில்கா
சிங் உள்பட விளையாட்டுத் துறை பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய போட்டிக்கு நல்லெண்ணத் தூதரை நியமிக்கும்போது, விளையாட்டில் மகத்தான சாதனையாளர்களாக விளங்குபவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம். ‘விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எங்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மக்களின் மனநிலையில் இருந்து எங்களின் மனநிலை முற்றிலுமாக மாறுபட்டது. ஒரு நடிகருக்கு பதிலாக விளையாட்டு வீரர் ஒருவரை தூதராக தேர்வு செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உதாரணமாக, ஒலிம்பிக்ஸ் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்ற பிந்த்ரா போன்ற வீரரே இதற்கு நூறு சதவீதம் சரியான நபராக இருந்திருப்பார்என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன்

கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார். பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கவே, சல்மான் கானுடன் இணைந்து அபினவ் பிந்த்ராவும் ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதராக செயல்படுவார் என அறிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்த வரிசையில் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் .ஆர்.ரகுமான் ஆகியோரையும் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட, வரவேற்கத்தக்க நல்ல முடிவு. இது போன்ற முக்கியமான நியமனங்களில் முதலிலேயே தீவிரமாக ஆலோசித்து, பல தரப்பு கருத்தையும் அறிந்தபிறகு தகுதியான நபரை தேர்வு செய்தால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும். தூதர்களை நியமிப்பதில் காட்டும் வேகத்தை, சரியான வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஊக்குவிப்பதில் காட்டினால் ஒலிம்பிக் பதக்க வேட்டையில் இந்தியா மற்ற அணிகளுக்கு சவாலாக   விளங்கலாம்.

போற்றிக் கொண்டாடுவோம்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார், திரிபுரா மாநிலம் அகர்தலாவை சேர்ந்த 22 வயது தீபா கர்மார்கர். அது மட்டுமல்ல, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் களமிறங்கப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கே கிடைத்துள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தகுதிச் சுற்று போட்டியில், மொத்தம் 52.698 புள்ளிகள் பெற்ற தீபா ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார். மிகக் கடினமான புரோடுனோவா வால்ட் சாகசத்தில் அபாரமாக செயல்பட்ட அவர் 15.066 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது கூடுதல் போனஸ்.ஒலிம்பிக்சில் இதுவரை 11 இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 1952ல் 2, 1956ல் 3, 1964ல் 6 வீரர்கள்... அவ்வளவு தான். அப்போது தகுதிச் சுற்று போட்டிகள் எல்லாம் கிடையாது. பங்கேற்க விரும்பும் அணிகள், தாங்களாகவே தேர்வு செய்து அனுப்பினால் போதும். கடுமையான போட்டி நிலவும் தற்போதைய சூழலில், தீபா படைத்திருப்பது மகத்தான சாதனை என்பதில் சந்தேகமில்லை.வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சாதனை வீராங்கனை. ஆறு வயது சிறுமியாக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை தொடங்கியவர், இரண்டு முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார். 2014ம் ஆண்டு நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம். கடந்த ஆண்டு நவம்பரில், உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் இவருக்கே சொந்தம். அந்த போட்டியில் 5வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். அதில் பதக்கம் வென்றிருந்தால், அப்போதே ரியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற்றிருக்கலாம்.இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக பயிற்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் லட்சிய வெறியுடன் தகுதிச் சுற்றில் அசத்தியுள்ள தீபா தனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் பதக்கமே என்பதில் உறுதியாக இருக்கிறார். மத்திய அரசின் ஒலிம்பிக் பதக்க வேட்டை திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்சுக்கு குறைந்த அவகாசமே இருந்தாலும், தீவிரமாக பயிற்சி செய்து இலக்கை எட்டுவார் என நம்பலாம்.

தோல்வியால் துவள வேண்டாம்

உலக கோப்பை டி20ல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாதது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் தொடர் என்பதால் டோனி தலைமையிலான அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் போட்டி தொடரில் 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்ற போதே, உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என்பதே பலரது கணிப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வென்றதும், ஆசிய கோப்பையை கைப்பற்றியதும் நம்பிக்கையை அதிகரித்தது. அதற்கேற்ப, இளம் வீரர் விராத் கோஹ்லியின் சிறப்பான ரன் குவிப்பு இந்திய அணிக்கு அசுர பலத்தை அளித்தது. வங்கதேசத்திடம் சற்று தடுமாறினாலும், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகப் பெற்ற அபார வெற்றிகள் நியூசிலாந்து அணியிடம் அடைந்த ஆரம்ப அதிர்ச்சியை அடியோடு மறக்க செய்தன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த அரை இறுதியில், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 192 ரன் குவித்தபோது வெற்றி நிச்சயம் என்றே தோன்றியது. வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் கிறிஸ் கேல் சொற்ப ரன்னில் வெளியேறியதும், நமது அணி பைனலுக்கு முன்னெறிவிட்டதாகவே முடிவு செய்து ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிம்மன்ஸ், ரஸ்ஸல் இருவரும் அதிரடியாக விளையாடி நம்ப முடியாத வகையில் வெற்றியை பறித்துவிட்டனர். டாசில் தோற்றது, இரவு நேரப் பனி காரணமாக இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சு எடுபடாதது, சிம்மன்ஸ் மூன்று முறை ஆட்டமிழக்கும் அபாயத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்தது... என இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அரை இறுதி வரை முன்னேறியும், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பறிபோனதில் பெருத்த ஏமாற்றமே. எனினும், இதை கவுரவமான தோல்வி என்றே சொல்ல வேண்டும். 193 ரன் என்பது அத்தனை எளிதான இலக்கு அல்ல. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் விளையாடிய அனுபவம், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த தோல்விக்காக அணியில் அதிரடி மாற்றங்களை செய்யத் தேவையில்லை என்றாலும், தவறுகளை திருத்திக் கொண்டு ஆட்டத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். அணியின் இயக்குனர்/பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்கும் வாய்ப்பும் உள்ளது. நம்பிக்கையுடன் விளையாடினால், இந்தியா நம்பர் 1 அணியாக தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வீராங்கனைகளுக்கும் பங்கு

இண்டியன் வெல்ஸ் ஓபன்... அமெரிக்காவில் நடக்கும் பிரபல டென்னிஸ் போட்டி. இந்த தொடரின் இயக்குனரும் தலைமை செயலதிகாரியுமான ரேமண்ட் மூர், டென்னிஸ் வீராங்கனைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார். ஆண்கள் பிரிவில் இருக்கும் அளவுக்கு மகளிர் டென்னிஸில் போட்டி அத்தனை கடுமையாக இல்லை. அப்படி இருந்தும் பெயர், புகழ், பணம் என எல்லாவற்றையும் எளிதாகப் பெற்றுவிடுகிறார்கள். வீராங்கனைகளால் டென்னிசுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே ரேமண்ட் மூரின் கண்டுபிடிப்பு!கையில் மைக் கிடைத்த உற்சாகத்தில், ‘வீராங்கனைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை, எந்த பொறுப்பும் இல்லை. வீரர்களின் தோள்களில் சவாரி செய்கிறார்கள். ஆண்கள் பிரிவு ஆட்டங்களால் தான் டென்னிஸ் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. நான் ஒரு வீராங்கனையாக இருந்தால் பெடரர், நடால் போன்ற மகத்தான வீரர்களை படைத்ததற்காக தினந்தோறும் மண்டியிட்டு தொழுது கடவுளுக்கு நன்றி செலுத்துவேன்’ என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.அவரது இந்த கருத்துக்கு செரீனா வில்லியம்ஸ், மார்டினா நவ்ரத்திலோவா உள்பட வீராங்கனைகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். களத்தில் நாங்களும் கடுமையாகவே உழைக்கிறோம். எந்த வீரருக்காகவும் மண்டியிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று செரீனா காட்டமாக பதிலடி கொடுத்தார். ‘மூர் உளறிக் கொட்டுகிறார். அவரை அடக்கி வைக்காவிட்டால் இண்டியன் வெல்ஸ் போட்டியை வீராங்கனைகள் புறக்கணிப்பார்கள்’ என்று மிரட்டினார் முன்னாள் பிரபலம் நவ்ரத்திலோவா.சர்ச்சை வலுக்கவே, தனது பதவியை ராஜினாமா செய்து ஓரங்கட்டிக் கொண்டார் மூர். பிரச்னை இத்தோடு முடியவில்லை. ‘மூரின் கருத்து தவறானது என்றாலும், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு சம அளவு பரிசுத் தொகை வழங்குவது சரியல்ல. வீரர்கள் மோதும் ஆட்டங்களையே ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கிறார்கள். எனவே, எங்களுக்கு தான் அதிக பரிசுத் தொகை கொடுக்க வேண்டும்’ என்று இண்டியன் வெல்ஸ் ஓபனில் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் கூறியதும் சர்ச்சையை கிளப்பியது.ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகள் சேர்த்து நடத்தப்படும் தொடர்களில் இரு பிரிவு சாம்பியன்களுக்கும் சம அளவு பரிசுத் தொகை அளிப்பது என்பது ஏற்கனவே நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு. அதில் மாற்றம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை... என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டென்னிஸ் சங்கம். டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் நவ்ரத்திலோவா, கிறிஸ் எவர்ட், ஸ்டெபி கிராப், செரீனா போன்ற வீராங்கனைகளின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. ரேமண்ட் மூர் போன்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.