செவ்வாய், 25 அக்டோபர், 2016

இது அழகல்ல

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றிருக்காவிட்டால், அணியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கியிருப்போம் என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல் கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.ஈடு இணையற்ற சாதனை வீரரான சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது, நெருக்கடி காரணமாகவே அந்த முடிவுக்கு தள்ளப்பட்டாரோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

‘சச்சினை சந்தித்து அவரது எதிர்கால திட்டம் குறித்து பேசினேன். ஓய்வு பெறும் எண்ணமில்லை என்றே தெரிவித்தார். ஆனால், தேர்வுக் குழுவில் இது பற்றி தீவிரமாக ஆலோசித்தோம். எங்கள் முடிவை கிரிக்கெட் வாரியத்துக்கும் தெரியப்படுத்தினோம். அதன் பிறகே சச்சின் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வேளை அவர் ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்காவிட்டால் அணியில் இருந்து கட்டாயமாக நீக்கியிருப்போம்’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பட்டீல்.

டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது பற்றியும் பல சமயங்களில் ஆலோசித்தோம். 2011ல் உலக கோப்பையை வென்றவர் என்பதாலேயே அவர் கேப்டனாக நீடிக்க அனுமதித்தோம். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் திடீரென ஓய்வு பெற்றது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.பதவிக் காலம் முடிந்து வீட்டுக்குப் போகும் சமயத்தில் இப்படி பரபரப்பாகப் பேசி மலிவான சுயவிளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார் சந்தீப் என்று சக தேர்வுக்கு குழு உறுப்பினர் ஒருவர் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.


தேர்வுக் குழுவில் விவாதிக்கப்படும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பது சரியல்ல. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதுடன், மனதளவில் அவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் ஆலோசனை விவரங்களில் ரகசியம் காப்பது மரபு. அதை பட்டீல் அப்பட்டமாக மீறியிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின், டோனி போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களைக் களங்கப்படுத்தும் வகையில் பேசுவது எந்த வகையிலும் ஏற்புக்குரியதல்ல. உண்மையிலேயே துணிவுள்ளவராக இருந்தால், சச்சினிடமே தேர்வுக் குழுவினரின் முடிவு பற்றி தெளிவாகக் கூறி ஓய்வு பெற வலியுறுத்தி இருக்கலாம். வாரியத்துக்கு தெரியப்படுத்தி... ஓராண்டு காலம் காத்திருந்து, சச்சினும் விடைபெற்று சென்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது பற்றி சொல்லியிருப்பது சந்தீப் பட்டீல் வகித்த தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு அழகல்ல. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக