செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

பெண்களால் பெருமை

ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி பத்து நாட்களுக்கு மேலான பிறகும் இந்திய அணியால் பதக்க பட்டியலில் இடம் பெற முடியவில்லை. பூஜ்ஜியத்துடன் திரும்பி பெருத்த அவமானமாகி விடுமோ என்ற கவலை வாட்டி வதைத்தது.125 கோடி பேர் உள்ள நாட்டில், பதக்கம் வெல்ல ஒருவர் கூடவா இல்லை என்ற கேள்வி இதயங்களை துளைத்து எடுத்த நிலையில் தான், ரக்ஷா பந்தன் தின பரிசாக ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் இந்தியாவின் வசமானது.

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைக்க, மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பதை உறுதி செய்தார் பி.வி.சிந்து.பிரீஸ்டைல் மல்யுத்தம் 58 கிலோ எடை பிரிவு பிளே-ஆப் போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையுடன் மோதிய சாக்ஷி 0-5 என்ற கணக்கில் பின்தங்கியபோது, மீண்டும் ஒரு பதக்க வாய்ப்பு வீணாகப் போகிறது என்றே தோன்றியது.

ஆனால், மன உறுதியுடன் புலிப் பாய்ச்சல் காட்டி போராடிய அவர் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 8-5 என வெற்றியை வசப்படுத்தியதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.பெண் குழந்தையை குஸ்தி போட வைப்பதா என்று சாக்ஷியின் பெற்றோரை திட்டித் தீர்த்த கிராம மக்கள், இன்று தேசத்துக்கே பெருமை சேர்த்த சாதனை வீராங்கனையை தங்கள் மண்ணின் மகளாக போற்றிக் கொண்டாடுகிறார்கள். பேட்மின்டன் பைனலில் உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்ட பி.வி.சிந்துவும் நம் நாட்டு பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக புரியவைத்தார்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டாலும், உலக சாம்பியனுக்கு ஈடுகொடுத்து விளையாடி பாராட்டுகளை அள்ளினார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்சில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை அவருக்கு சொந்தமாகி உள்ளது. பதக்கம் வென்ற சாக்ஷி, சிந்து மட்டுமல்ல… மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு பைனலில் பங்கேற்று 4வது இடம் பிடித்த தீபா கர்மாகர், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லலிதா பாபர், வில்வித்தையில் போராடிய பாம்பேலா தேவி, கலப்பு இரட்டையர் டென்னிசில் போபண்ணாவுடன் இணைந்து கலக்கிய சானியா மிர்சா, காயம் காரணமாக பதக்க வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் உள்பட அனைவருமே தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக