செவ்வாய், 25 அக்டோபர், 2016

நல்ல வாய்ப்பு

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகிறது இந்திய அணி. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற அருமையான வாய்ப்பு.சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளை வீழ்த்துவது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்காது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை பொய்யாக்குவதுடன், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலகின் நம்பர் 1 அணியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இளம் வீரர் விராத் கோஹ்லியின் துடிப்பான தலைமையும், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் அனுபவமும் இந்திய அணியின் எழுச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணிக்கும் 2வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் இடையே 1 புள்ளி மட்டுமே வித்தியாசம். நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடக்கும் தொடரில் வெற்றியை வசப்படுத்தினாலே இந்தியா எளிதாக நம்பர் 1 ஆகிவிடும். அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பாக விளையாடி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வது தான் முக்கியம்.


கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், வி.வி.எஸ்.லஷ்மண் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்றால், வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பது அவசியம். சொந்த மண்ணில், சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் நம்பர் 1 அந்தஸ்துக்கு அர்த்தம் இருக்காது.

‘டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, இந்திய அணி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை கேப்டன் கோஹ்லி - பயிற்சியாளர் கும்ப்ளே கூட்டணி கட்டாயம் மாற்ற வேண்டும். ஒரேயடியாக சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பது சில சமயம் நமக்கே ஆபத்தாகி விடும். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்குமே திறமையை நிரூபிக்க சரி சமமான வாய்ப்பு கொடுப்பதுதான் உண்மையான டெஸ்ட் போட்டி’ என்கிறார் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்.

ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ள கேப்டன் கோஹ்லி, எந்த வகையான சவாலுக்கும் ஈடு கொடுப்பார் என்றே தோன்றுகிறது. சச்சின், லஷ்மண் கூறியுள்ளது போல, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி நீண்ட காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் என நிச்சயம் நம்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக