ஞாயிறு, 29 மே, 2016

வீராங்கனைகளுக்கும் பங்கு

இண்டியன் வெல்ஸ் ஓபன்... அமெரிக்காவில் நடக்கும் பிரபல டென்னிஸ் போட்டி. இந்த தொடரின் இயக்குனரும் தலைமை செயலதிகாரியுமான ரேமண்ட் மூர், டென்னிஸ் வீராங்கனைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார். ஆண்கள் பிரிவில் இருக்கும் அளவுக்கு மகளிர் டென்னிஸில் போட்டி அத்தனை கடுமையாக இல்லை. அப்படி இருந்தும் பெயர், புகழ், பணம் என எல்லாவற்றையும் எளிதாகப் பெற்றுவிடுகிறார்கள். வீராங்கனைகளால் டென்னிசுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே ரேமண்ட் மூரின் கண்டுபிடிப்பு!கையில் மைக் கிடைத்த உற்சாகத்தில், ‘வீராங்கனைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை, எந்த பொறுப்பும் இல்லை. வீரர்களின் தோள்களில் சவாரி செய்கிறார்கள். ஆண்கள் பிரிவு ஆட்டங்களால் தான் டென்னிஸ் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. நான் ஒரு வீராங்கனையாக இருந்தால் பெடரர், நடால் போன்ற மகத்தான வீரர்களை படைத்ததற்காக தினந்தோறும் மண்டியிட்டு தொழுது கடவுளுக்கு நன்றி செலுத்துவேன்’ என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.அவரது இந்த கருத்துக்கு செரீனா வில்லியம்ஸ், மார்டினா நவ்ரத்திலோவா உள்பட வீராங்கனைகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். களத்தில் நாங்களும் கடுமையாகவே உழைக்கிறோம். எந்த வீரருக்காகவும் மண்டியிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று செரீனா காட்டமாக பதிலடி கொடுத்தார். ‘மூர் உளறிக் கொட்டுகிறார். அவரை அடக்கி வைக்காவிட்டால் இண்டியன் வெல்ஸ் போட்டியை வீராங்கனைகள் புறக்கணிப்பார்கள்’ என்று மிரட்டினார் முன்னாள் பிரபலம் நவ்ரத்திலோவா.சர்ச்சை வலுக்கவே, தனது பதவியை ராஜினாமா செய்து ஓரங்கட்டிக் கொண்டார் மூர். பிரச்னை இத்தோடு முடியவில்லை. ‘மூரின் கருத்து தவறானது என்றாலும், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு சம அளவு பரிசுத் தொகை வழங்குவது சரியல்ல. வீரர்கள் மோதும் ஆட்டங்களையே ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கிறார்கள். எனவே, எங்களுக்கு தான் அதிக பரிசுத் தொகை கொடுக்க வேண்டும்’ என்று இண்டியன் வெல்ஸ் ஓபனில் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் கூறியதும் சர்ச்சையை கிளப்பியது.ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகள் சேர்த்து நடத்தப்படும் தொடர்களில் இரு பிரிவு சாம்பியன்களுக்கும் சம அளவு பரிசுத் தொகை அளிப்பது என்பது ஏற்கனவே நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு. அதில் மாற்றம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை... என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டென்னிஸ் சங்கம். டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் நவ்ரத்திலோவா, கிறிஸ் எவர்ட், ஸ்டெபி கிராப், செரீனா போன்ற வீராங்கனைகளின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. ரேமண்ட் மூர் போன்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக