சனி, 13 ஆகஸ்ட், 2016

பக்குவம் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்த நிலையில், அனைத்து வகையிலும் பொருத்தமான அனில் கும்ப்ளேவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது வரவேற்கத்தக்க முடிவு. குறிப்பாக, இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு, கும்ப்ளேவின் அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் மிக உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.முன்னாள் கேப்டன்கள் கங்குலி, சச்சின் மற்றும் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் வி.வி.லஷ்மண் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினரின் பரிந்துரை அடிப்படையில் கும்ப்ளேவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முடிவு எல்லோருக்கும் மகிழ்ச்சி, திருப்தி அளித்திருந்தாலும், பதவிக்கான போட்டியில் பங்கேற்று முடிவுக்காக ஆவலோடு காத்திருந்த ரவி சாஸ்திரிக்கு பெருத்த ஏமாற்றம்.  நேர்காணலில் தான் பங்கேற்றபோது, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த கங்குலி வேண்டுமென்றே வெளியேறி தன்னை அவமதித்துவிட்டதாக சாஸ்திரி குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது போன்ற முக்கியமான கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கங்குலிக்கு தெரியவில்லை என்று தாக்கினார். இதற்கு பதிலளித்த கங்குலி, ‘நேர்காணலின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த ரவி சாஸ்திரி கொல்கத்தாவுக்கு நேரில் வந்து கலந்து கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, பாங்காக்கில் சுற்றுலா போன இடத்தில் இருந்து ஸ்கைப் மூலமாக ஆன்லைனில் பங்கேற்பது எந்த வகையில் நியாயம். கிணற்றுத் தவளை போல ஏதேதோ உளறுகிறார்’ என்று பதிலடி கொடுக்க, முன்னாள் கேப்டன்களின் மோதலில் அனல் பறக்கிறது.ஏகத்துக்கு கடுப்பான சாஸ்திரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சொந்த காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியிருப்பதாகக் கூறினாலும், இந்த குழுவுக்கு கும்ப்ளே தலைவராக இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்திய அணியின் கேப்டன், உயர் செயல்பாட்டு இயக்குனர், வர்ணனையாளர் உள்பட பல பொறுப்பான பதவிகளில் இருந்தவர் இப்படி பொறுமை இழந்து வார்த்தைகளை கொட்டுவது சரியல்ல. கங்குலியும் கூட இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் பக்குவமாக கையாண்டிருக்கலாம். இந்த ஈகோ மோதலால், அவர்கள் மீதான மதிப்பு, மரியாதை சேதாரமாகி இருக்கிறது என்பதே உண்மை. ‘பயிற்சியாளர் யார் என்பது முக்கியமல்ல. இன்று நான், நாளை வேறு யாரோ ஒருவர். இதில் வீரர்களின் நலனும், அணியின் வெற்றியுமே முக்கியம்’ என்று இந்த சர்ச்சைக்கு கும்ப்ளே முற்றுப்புள்ளி வைத்தது அவரது முதிர்ச்சியை காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக