சனி, 13 ஆகஸ்ட், 2016

ரஷ்யாவின் பேராசை

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, ரஷ்ய தடகள வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது கேள்விக் குறியாகி உள்ளது.தங்கள் நாட்டு அணி பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்ற பேராசையில், ஊக்கமருந்து உபயோகத்தை அரசும் அதிகாரிகளும் ஊக்குவித்தது வெளிச்சத்துக்கு வந்ததால் ரஷ்யாவை சேர்ந்த 68 வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து விளையாட்டு தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்கும் சர்வதேச தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தடையை நீக்க மறுத்து ரஷ்யாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட 68 பேருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரஷ்ய அணியையும் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில், இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டியும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்த சர்ச்சையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முடிவு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. தவறு செய்த வீரர், வீராங்கனைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுங்கள். ஒட்டுமொத்தமாக ரஷ்ய அணியை தடை செய்தால், எந்த தவறும் செய்யாத அப்பாவி வீரர், வீராங்கனைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆண்டுக் கணக்கில் கடுமையாகப் பயிற்சி செய்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களின் எதிர்காலமே இதனால் வீணாகிவிடும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குள் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.‘திறமையான எங்கள் அணியை முடக்கிவிட்டு, ஒலிம்பிக் பதக்கங்களை தட்டிச் செல்ல சர்வதேச சதி நடக்கிறது. இப்படி குறுக்கு வழியில் பெறும் பதக்கங்கள் உண்மையான வெற்றிக்கு சான்றாக முடியாது’ என குமுறுகிறார் போல்வால்ட் நட்சத்திர வீராங்கனை இசின்பயேவா. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை மாற்றி, மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை திருத்தி எழுதுவதற்கு அரசாங்கமே ஆதரவாக இருந்தது என்ற குற்றச்சாட்டை அவ்வளவு எளிதாக அலட்சியப்படுத்திவிட முடியாது. தண்டனை கடுமையாக இருந்தால் தான் மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காது. ‘ரஷ்ய அணிக்கு தடை என்ற முடிவு துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால், விதிமுறைகளை கடைப்பிடிப்பது அதைவிட முக்கியம்’ என்கிறார் ஒலிம்பிக் தடகள நட்சத்திரம் உசேன் போல்ட். ஊக்கமருந்து உபயோகிக்காதவர்கள், ரஷ்யா சார்பில் களமிறங்காமல் தனிப்பட்ட முறையில் எந்த நாட்டையும் சேராத வீரர், வீராங்கனைகளாக பங்கேற்க அனுமதிக்கலாம் என்ற ஆலோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக