செவ்வாய், 7 ஜூன், 2016

மகத்தான வீரர்

முகமது அலி... உலகம் முழுவதும் குத்துச்சண்டை விளையாட்டின் அடையாளமாக உச்சரிக்கப்படும் பெயர். ஹெவி வெயிட் பாக்சிங்கில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம், நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் விருது. எதிர்த்து போட்டியிட்ட வீரர்களை நாக்-அவுட் செய்து, ‘அலி தி கிரேட்டஸ்ட்’ என்று தன்னைத் தானே மகத்தான வீரனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், களத்திலும் வெளியிலும் தனது துணிச்சலான செயல்பாடுகளால் உண்மையிலேயே மகத்தான வீரராக அனைவராலும் போற்றப்படக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்.

ஏழ்மையான பின்னணி, ஒதுக்கப்பட்ட கறுப்பர் இனம் போன்ற தடைக்கற்களை எல்லாம் தகர்த்தெறிந்து, குத்துச்சண்டை களத்தில் தனி முத்திரை பதித்த கிளாசியஸ் கிளே ஜூனியர், பின்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி முகமது அலியாக மாறினார். கட்டாய ராணுவப் பயிற்சிக்கு மறுப்பு தெரிவித்ததுடன் வியட்நாம் போருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது, சிறைவாசம், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பாக்சிங் உரிமம் பறிப்பு என்று 25வது வயது முதல் 29வது வயது வரை வாழ்க்கையே போராட்டமாக மாறிய நிலையிலும் மன உறுதியை கைவிடாமல் எதிர்நீச்சல் போட்டவர். உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர், மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்த முகமது அலி அமெரிக்க இளைஞர்களின் அபிமான நாயகனாக மாறியதில் வியப்பேதும் இல்லை.

சன்னி லிஸ்டன், ஜோ பிரேசியர், ஜார்ஜ் போர்மேன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எதிராக அவர் பெற்ற வெற்றிகள் இன்றளவும் பிரமிப்போடு பார்க்கப்படுகின்றன. நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஒஹையோ ஆற்றில் வீசி எறிந்த பேராண்மை மிக்கவர். மின்னல் வேக குத்து, நேர்த்தியான தற்காப்பு வியூகம், நடனம் போலவே நளினமான கால் அசைவு... என்று பாக்சிங் வளையத்தை தெறிக்கவிட்டவருக்கு, நரம்பு மண்டலத்தை பாதித்து படிப்படியாக செயலிழக்கச் செய்யும் பர்கின்சன்ஸ் நோயையும் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது.

போட்டியிடப் போகும் வீரருக்கு சவால் விடும் வகையில் முகமது அலி பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவரது புகழை பல மடங்கு அதிகரிக்கக் கூடிய மந்திர வாக்கியங்களாகவே அவை மாறிப் போனது அதிசயம் தான். அந்த மகத்தான வீரர் இன்று மறைந்துவிட்டாலும், குத்துச்சண்டை வரலாற்றிலும் ரசிகர்களின் மனத்திலும் அவரது பெயர் என்றென்றும் நிச்சயம் நிலைத்திருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக