செவ்வாய், 25 அக்டோபர், 2016

இவ்வளவு தாமதம் ஏன்?

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 60 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் பங்கேற்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அந்த போட்டியில் வெள்ளி வென்ற ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் தான் இது தெரியவந்தது.

இதையடுத்து, 2வது இடத்துக்கு முன்னேறிய யோகேஷ்வர் வெள்ளிப் பதக்கம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத இந்த பதக்க உயர்வால் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கும் யோகேஷ்வருக்கு இன்னும் ஒரு இனிய செய்தி கிடைத்திருக்கிறது.
தங்கப் பதக்கம் வென்றிருந்த அஜர்பைஜான் வீரர் தோக்ருல் அஸ்கரோவும் ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டிருக்கிறார். இதனால் யோகேஷ்வரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறதாம்.ரியோ ஒலிம்பிக்சில் முதல் சுற்றிலேயே வெளியேற நேரிட்டதால் ஏமாற்றத்தில் இருந்த யோகேஷ்வருக்கு திடீர் ஜாக்பாட். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தான் கொடுமை.

யோகேஷ்வரின் ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தி அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எதையும் உட்கொள்ளவில்லை என உறுதியானால் மட்டுமே பதக்க உயர்வு வழங்கப்படும் என உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ‘வாடா’ தெரிவித்துள்ளது. 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கூட ஊக்கமருந்து சோதனை நடத்திக் கொண்டிருப்பது நல்ல வேடிக்கை.

வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் குடுகோவ் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அடுத்த ஒலிம்பிக் கூட நடந்து முடிந்துவிட்டது. பரிசோதனை முடிவுகளை உறுதி செய்ய இவ்வளவு கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். நேர்மையான வீரருக்கே வெற்றியும் பதக்கமும் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம் தான். அதே சமயம், அந்த வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சி, புகழ், பரிசுகளை அந்த வீரர், வீராங்கனைகள் உடனடியாக அனுபவிக்கவும் வகை செய்ய வேண்டும்.

போட்டிகள் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாவது ஊக்கமருந்து பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து வெற்றியாளர்களை இறுதி செய்யும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் தேவை. சோதனை முறைகளையும் நவீனப்படுத்தலாம். காலம் கடந்து கிடைத்த பதக்கம் என்றாலும், சாதனை வீரர் யோகேஷ்வரை உரிய வகையில் பாராட்டி கவுரவிப்பதும், ரொக்கப் பரிசுகள் வழங்கி வாழ்த்துவதும் அரசின் கடமை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக