சனி, 13 ஆகஸ்ட், 2016

தடைகளை தாண்டி

ரியோ ஒலிம்பிக்ஸ் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த விளையாட்டு திருவிழாவுக்கு பிரேசில் முழு அளவில் தயாராகிவிட்டதா? என்றால்... இது வரை இல்லை என்ற பதிலே மிரட்டுகிறது.அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதமாக ஊதியம் வரவில்லை என்பதால் வீதிக்கு இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டக் காரர்களில் சிலர் ஒலிம்பிக் சுடர் விளக்கை திருடிச் சென்று, எரிந்து கொண்டிருக்கும் ஜோதியை அணைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராணுவம் வரவழைக்கப்பட்டு கண்ணீர்புகை குண்டுவீச்சு, ரப்பர் புல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரச்னை இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது.ஜிகா வைரஸ் தொற்று அபாயம் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் ஒலிம்பிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டதும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.கழிப்பறையில் குழாய்கள் அடைத்துக் கொண்டு தண்ணீர் போகவில்லை, மின் சாதனங்கள் சரியாகப் பொருத்தப்படாமல் கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறி ஆஸ்திரேலிய அணி வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் நுழையவே மறுத்துவிட்டனர். அவசரம் அவசரமாக எல்லா குறைகளையும் சரி செய்து அவர்களை தங்க வைத்த நிலையில், ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் எல்லோரையும் தற்காலிகமாக வெளியேற்ற வேண்டிய இக்கட்டான நிலை. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கிறது.‘முதலில் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. ஒரு வார காலமாக ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டார்கள். திடீர் தீ விபத்தால் வீரர், வீராங்கனைகள் சற்று பதற்றமாகி விட்டனர். இப்போது எல்லாம் சரியாகவே உள்ளது. ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன’ என்கிறார் ஆஸி. அணி தலைமை நிர்வாகி கிட்டி சில்லர்.ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக ரஷ்ய அணி வீரர், வீராங்கனைகள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரியோ நகரில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணம் என்பதால் கவனமாக இருங்கள் என்று தங்கள் அணியை சீன அரசு எச்சரித்துள்ளது. ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய விளையடடுப் போட்டியை நடத்தும்போது, இது போன்ற
தடங்கல்கள் வருவது சகஜம் தான். எல்லாவற்றையும் சமாளித்து ரியோ ஒலிம்பிக்சை
வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என்கிறார்கள் பிரேசில் அதிகாரிகள். போட்டிகள் தொடங்கியதும் வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை அள்ளும்போது இந்த சிறு சிறு குறைகள் காணாமல் போய்விடும் என நம்புவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக