ஞாயிறு, 29 மே, 2016

தோல்வியால் துவள வேண்டாம்

உலக கோப்பை டி20ல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாதது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் தொடர் என்பதால் டோனி தலைமையிலான அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் போட்டி தொடரில் 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்ற போதே, உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என்பதே பலரது கணிப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வென்றதும், ஆசிய கோப்பையை கைப்பற்றியதும் நம்பிக்கையை அதிகரித்தது. அதற்கேற்ப, இளம் வீரர் விராத் கோஹ்லியின் சிறப்பான ரன் குவிப்பு இந்திய அணிக்கு அசுர பலத்தை அளித்தது. வங்கதேசத்திடம் சற்று தடுமாறினாலும், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகப் பெற்ற அபார வெற்றிகள் நியூசிலாந்து அணியிடம் அடைந்த ஆரம்ப அதிர்ச்சியை அடியோடு மறக்க செய்தன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த அரை இறுதியில், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 192 ரன் குவித்தபோது வெற்றி நிச்சயம் என்றே தோன்றியது. வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் கிறிஸ் கேல் சொற்ப ரன்னில் வெளியேறியதும், நமது அணி பைனலுக்கு முன்னெறிவிட்டதாகவே முடிவு செய்து ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிம்மன்ஸ், ரஸ்ஸல் இருவரும் அதிரடியாக விளையாடி நம்ப முடியாத வகையில் வெற்றியை பறித்துவிட்டனர். டாசில் தோற்றது, இரவு நேரப் பனி காரணமாக இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சு எடுபடாதது, சிம்மன்ஸ் மூன்று முறை ஆட்டமிழக்கும் அபாயத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்தது... என இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அரை இறுதி வரை முன்னேறியும், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பறிபோனதில் பெருத்த ஏமாற்றமே. எனினும், இதை கவுரவமான தோல்வி என்றே சொல்ல வேண்டும். 193 ரன் என்பது அத்தனை எளிதான இலக்கு அல்ல. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் விளையாடிய அனுபவம், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த தோல்விக்காக அணியில் அதிரடி மாற்றங்களை செய்யத் தேவையில்லை என்றாலும், தவறுகளை திருத்திக் கொண்டு ஆட்டத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். அணியின் இயக்குனர்/பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்கும் வாய்ப்பும் உள்ளது. நம்பிக்கையுடன் விளையாடினால், இந்தியா நம்பர் 1 அணியாக தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக