ஞாயிறு, 29 மே, 2016

சாதனை கை கூடுமா?

ரபேல் நடால்... டென்னிஸ் ரசிகர்களின் அபிமான வீரர்கள் பட்டியலில் மறக்க முடியாத பெயர். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர். பத்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மகத்தான சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 3வது சுற்றிலேயே விலக வேண்டி வந்தது துரதிர்ஷ்டவசமானது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் பிரெஞ்ச் ஓபனில் இருந்து ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், தற்போது நடாலும் இல்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம் தான். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பெடரர் 17 பட்டங்களும், நடால் 14 பட்டங்களும் வென்றுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவருக்கும் இடையே நிலவிய கடும் போட்டி, டென்னிஸ் விளையாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தது என்றால் மிகையல்ல. இவர்களுக்கு இணையானது, தற்போதைய நம்பர் 1 வீரர் ஜோகோவிச் பங்களிப்பும்.ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வெல்லும் கேரியர் கிராண்ட் ஸ்லாம் எனும் சாதனையை பெடரர், நடால் வசப்படுத்திய நிலையில், ஜோகோவிச்சுக்கு மட்டும் அது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இரண்டு மகத்தான வீரர்களின் கடும் போட்டிக்கு இடையில் ஆஸி. ஓபனில் 6 முறை, விம்பிள்டன் 3, அமெரிக்க ஓபனில் 2 என 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் அவரால் இதுவரை சாதிக்க முடியவில்லை. நடாலின் அசைக்க முடியாத ஆதிக்கம் தான் இதற்கு முக்கிய காரணம்.பெடரர், நடால் இருவருமே இல்லாததால் இம்முறை கேரியர் கிராண்ட் ஸ்லாம் சாதனை ஜோகோவிச்சுக்கு கை கூடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற இரண்டு வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், நல்ல உடல்தகுதியுடன் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் கோப்பையையும் முத்தமிடுவார் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக