ஞாயிறு, 29 மே, 2016

ஏமாற்றும் முயற்சி

வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே பாக்கி. தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, விவசாயக் கடன் ரத்து, மின் கட்டணத்தை மாதாந்திர அடிப்படையில் வசூலிப்பது மற்றும் பால் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்புகள்.தேர்தல் தொடர்பான நடைமுறைகளில் எப்போதும் முந்திக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு, அதை தன்னம்பிக்கையின் அடையாளமாக முத்திரை குத்திக் கொள்ளும் அதிமுக தலைமை, இம்முறை தேர்தல் அறிக்கை வெளியிட காட்டிய தயக்கமும் கால தாமதமும் ஏதோ பெரிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஆனால், பிரத்யேகமான குழு அமைத்து, பல நாள் யோசித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. திமுக அறிக்கையின் நல்ல அம்சங்களை அப்பட்டமாக நகல் எடுத்தவர்கள், செயல்படுத்த முடியாத சில கவர்ச்சி திட்டங்களை சேர்த்து தூண்டில் புழுவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.சென்னையில் ஓடப்போவதாக அறிவித்த மோனோ ரயிலுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் டெண்டரை கூட இறுதி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையிலும் மோனோ ரயில் சேவை என்ற அறிவிப்பு நல்ல நகைச்சுவை.100 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிர் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம்என்ற அறிவிப்பும் இதே ரகம் தான். மின் பயனீட்டு அளவை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டால் கிடைக்கும் பலன் பல மடங்கு அதிகம் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிய விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் யாருக்கும் பிரயோஜனமில்லாமல் காயலாங்கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை கொள்முதல் செய்ததில் கோடி கோடியாய் சுருட்டியிருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள தகவல், வயிறெரியச் செய்கிறது. மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை 600 ரூபாய் என்றிருந்ததை 1000 ரூபாயாக அதிகரித்ததில், 5 ஆண்டுகளில் 24,000 ரூபாய் நஷ்டம். பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்ததாக வைத்துக் கொண்டால் கூட பத்தாயிரம் காலி. சென்னையில் இருந்து குடும்பத்தோடு மதுரை, நெல்லை, கோவை என்று ஊருக்கு போய் வந்ததில் சில ஆயிரங்கள். மின் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றியதால் ஒரு முப்பதாயிரம். இப்படி ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை பிடுங்கியிருக்கிறது இந்த அரசு. விண்ணை முட்டும் விலைவாசியில் சேமிப்பு என்ற வார்த்தையே சேதாரமாகி இருக்கிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய அளவுக்கு ஓட்டை உடைசல் பேருந்துகள். குண்டும் குழியுமான சாலைகள். சரியான கழிப்பறை வசதி இல்லை. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் பேருந்து நிறுத்தங்களில் இலவச வை-பை வசதி போன்ற வெற்று அறிவிப்புகள், மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக