ஞாயிறு, 29 மே, 2016

யாருக்கு வாய்ப்பு?

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், நர்சிங் யாதவ் இருவரும் மல்லுகட்டுகின்றனர். இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் சுஷில். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஆண்டு நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கான ஒதுக்கீட்டு இடத்தை உறுதி செய்தவர். துரதிர்ஷ்டவசமாக, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் சுஷில் குமாரால் அந்த போட்டியில் களமிறங்க முடியாமல் போனது.தற்போது காயம் குணமடைந்து முழு உடல்தகுதியுடன் இருக்கும் சுஷில், ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க தனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். ‘ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் இந்தியா சார்பில் களமிறங்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். மூன்றாவது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று சாதனை படைப்பதே என் லட்சியம். அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தகுதிப் போட்டிக்கு ஏற்பாடு செய்தால் நர்சிங் யாதவுடன் மோத தயார். யார் ஜெயிக்கிறோமோ அவரை ரியோ அனுப்பி வையுங்கள்என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ள அவர், பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதால் பிரச்னை தீவிரமாகி இருக்கிறது.அவரது கோரிக்கையை ஏற்பது பற்றி மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். ஒலிம்பிக் தகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்த எனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் நர்சிங் யாதவ். அது தான் வழக்கமான நடைமுறையும் கூட. 2004 ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக யோகேஷ்வர் தத்துடன் தகுதி போட்டிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி கிர்பா சிங் என்ற வீரர் நீதிமன்றத்தை நாடியபோது, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட முன்னுதாரணமும் உள்ளது என்கிறார் ஒரு நிர்வாகி.சுஷில், நர்சிங் இருவருமே திறமையான வீரர்கள் தான். இந்த தர்மசங்கடமான நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக