புதன், 3 நவம்பர், 2010

மிரட்டுகிறது மின்னணுப் புத்தகம்

ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறீர்களா? கவிதைத் தொகுப்பினை வெளியிட ஆசையிருந்தும் வசதியில்லையா? கவலையே வேண்டாம்! உங்கள் படைப்புகளை அச்சேற்றுவது தொடங்கி வடிவமைப்பது, வண்ணம் சேர்ப்பது மற்றும் வெளியிடுவது வரை அனைத்து வேலைகளையும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் செய்து முடிக்க முடியும்.

என்ன ... தோளை உயர்த்துகிறீர்கள்... நம்பிக்கையில்லையா?! இந்தச் செய்தி ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால் உண்மையானதும் கூட.

இணையம் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. தலையணை அளவிலான புத்தகங்களுக்கெல்லாம் விடைகொடுக்கும் வேளை வந்துவிட்டது. 'பொன்னியின் செல்வன்' நூலின் அனைத்து பாகங்களையும் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது படித்துக் கொள்ளலாம். அல்லது வீட்டில் உள்ள கணனியில் சாவகாசமாகப் படித்து ரசிக்கலாம்.

புத்தகத் துறையில் பெரும் புரட்சியையும் மிரட்சியையும் உண்டாக்கியுள்ள இந்தப் புதிய கண்டுபிடிப்பை மின்னணுப் புத்தகம் (ஈ-புக்) என்றழைக்கின்றனர்.

உங்கள் வீட்டுக் கணனியிலோ அல்லது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவியிலோ உங்கள் அபிமான எழுத்தாளரின் படைப்பினைப் படித்து மகிழலாம். பெரும்பாலும் இலவசமாக அல்லது கொள்ளை மலிவு விலையில்.

கணனிச் சந்தையில் உலா வரும் 'பதிப்பக மென்பொருளின்' உதவியோடு உங்கள் புத்தகத்தை நீங்களே வடிவமைத்து வெளியிடலாம். யாருக்கும் அனுப்பி வைக்கலாம். ஒரு கணனியும், இணையத்திற்கான இணைப்பும் இருந்து விட்டால் போதும், வீட்டிலமர்ந்தபடியே இவ்வளவையும் செய்து முடித்து விடலாம். இதனால் உங்கள் புத்தகத்தை அடிமாட்டு விலைக்கு விற்கலாம். ! (அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வந்து விடாது)

மின்னணுப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் அதனை நீங்கள் அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். அதிலிருக்கும் தகவல்களை, புள்ளி விவரங்களை, ஒரு குறிப்பிட்ட பகுதி சம்பந்தமான புதிய நிகழ்வுகளை அவ்வப்போது இணைத்துக் கொள்ளும் வசதியை ஈ - புக் அளிக்கிறது.

மேலும் தங்கள் படைப்பு குறித்து வாசகர்களின் கருத்துகளை இடம் பெறச் செய்யவும் அவர்களின் சந்தேகங்களுக்குத் தகுந்த விளக்கமளிக்கவும் இதில் வாய்ப்பு உள்ளது. எனவே தங்களின் படைப்பு உயிரோட்டமுள்ளதாக ( இந்த வகையிலாவது !) ஆகி விடுகிறது.

மற்றொரு அனுகூலம் உலக அளவிலான வாசக வட்டம். இது மட்டுமல்ல தங்கள் புத்தகத்திற்குக் குரலொலி, இசை, சலனப்படங்கள் போன்ற நவீன ஜாலங்களையும் சேர்த்து வாசகர்களை வசப்படுத்தலாம். சேமிப்பதும், பாதுகாப்பதும் எளிது. வீட்டிலிருந்தபடியே விற்பனையும் இதில் சாத்தியம். பல வெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீட்டின் சில மாதிரிப் பக்கங்களை முதலில் இணையத்தில் வெளியிட்டு அதனால் கவரப்படும் வாசகர்களின் தேவைக்கேற்ப மலிவு விலையில் தங்கள் மின்னணுப் புத்தகத்தினை விநியோகிக்கிறார்கள்.

மின்னணுப் புத்தகத்தினைத் தயாரித்து வெளியிட பிரமாதமான தொழில்நுட்ப அறிவு எல்லாம் தேவைப்படாது. இதற்கென உள்ள பிரத்யேகமான இணைய தளங்களில் நுழைந்து பதிவு செய்து கொண்டால் எளிதாக ஈ - புக் தயாரித்து விடலாம். ஒரு குழந்தையைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போல அழகாக அரவணைத்துச் செல்கின்றன இத்தகைய இணைய தளங்கள். முதலில் அதற்கான மென்பொருளை உங்கள் கணனியில் ஏற்றிக் கொள்வது மிக மிக அவசியம்.

இதற்குப் பிறகு சும்மா பூந்து விளையாடுங்க. எழுத்து வடிவிலான கோப்புகளை, புகைப்பட பிம்பங்களை வண்ண வடிவமைப்பை எல்லாம் நிர்ணயித்து, நிர்மானித்துக் கொண்டு வெட்டுங்கள்... ஒட்டுங்கள் ! அவ்வளவே மின்னணுப் புத்தகம் தயார்.

கையைக் கொடுங்கள். தற்போது நீங்கள் ஒரு புத்தகத்தின் ஆசிரியர். உங்களுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள். என்னங்க கண்டுக்காம போறீங்க? அடக்கடவுளே... ஒரேயொரு ஈ - புக்தான் வெளியிட்டிருக்கீங்க! அதுக்குள்ள இத்தனை அலட்டலா சரி.. சரி கண்டுக்க மாட்டோம்.

வழக்கமான முறையில் புத்தகம் அச்சிட்டு வெளியிடுபவர்கள்தான் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன செய்வது? அறிவியல் மாற்றங்களும் அதைச் சார்ந்த முன்னேற்றங்களும் காலத்தின் கட்டாயமாயிற்றே. ஆற்றின் போக்கிலேயே நீந்தித்தான் அக்கரை சேர்ந்தாக வேண்டும்.

பா. சங்கர்

ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது (2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக