செவ்வாய், 10 மே, 2011

வீறுகொண்டார் வீரு… உள்ளூரில் சிஎஸ்கே விர்ரு!


‘நாக் அவுட்’ சுற்று நெருங்குவதால் எல்லா அணிகளும் ஜுர வேகத்தில். டாப் கியரில் ஓடிக் கொண்டிருக்கும் மும்பை, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு அதிகம். டி20ல் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மற்ற அணிகளையும் ஒதுக்கிவிட முடியாது. புனே மட்டும் கடைசி இடத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில் உறுதியாக இருக்கிறது.
உள்ளூர் ராசி இந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று டோனி கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். சார்ஜர்சுடன் மோதிய ஆட்டத்தில் அல்பி மார்கெல் அடித்த ஹாட்ரிக் சிக்சர் செம ரகளை. கடைசி சிக்சர் வங்கக் கடலில் விழுந்ததாகக் கேள்வி. சார்ஜர்ஸ் இன்னிங்சில், சோகல் போட்டுத் தாக்கியபோது சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில். ஜகாதி, மார்கெல், போலிஞ்சர் கூட்டணி சூப்பராகப் பந்துவீசி அசத்தியதில் சார்ஜ் இறங்கியது சார்ஜர்ஸ்.
அடுத்த கோதா ராஜஸ்தான் ராயல்சுடன். மிரட்டிக் கொண்டிருந்த வாட்சனை போட்டுப் பிடித்தார் ஜகாதி. அதன் பிறகு ராயல்சால் எழுந்திருக்க முடியவில்லை. ஹஸி, ரெய்னா அதிரடியில் எதிர்ப்பே இல்லாமல் சரணடைந்தது ராயல்ஸ். சென்னையில் சாம்பியன் சிஎஸ்கே ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. அரை இறுதி, இறுதிப் போட்டியும் இங்குதான் என்பதால் சூப்பர் கிங்ஸ் உற்சாகம் கரை புரள்கிறது.
குறைந்தது 12 ஓவர் வரை களத்தில் நிற்க முயற்சிப்பேன் என்று சபதம் செய்த டேர்டெவில்ஸ் கேப்டன் சேவக் சாதித்துக் கொண்டிருக்கிறார். கொச்சிக்கு எதிராக 18வது ஓவர் வரை தாக்குப்பிடித்து 47 பந்தில் 80 ரன் விளாசியவர், ஐதராபாத்தில் சார்ஜர்சை உளுக்கி எடுத்துவிட்டார். டெல்லி துரத்தலின் 6வது ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட்அவுட். கண்ணுக்கெட்டாத தூரத்தில் 176 ரன் இலக்கு. மனம் தளராத விக்ரமனாய் வீறுகொண்டார் வீரு! சார்ஜர்ஸ் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்தார். ஒரு டஜன் பவுண்டரி, அரை டஜன் சிக்சரை பறக்கவிட்டவர் 48 பந்தில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்ய… அதிர்ச்சியில் உறைந்தது ஐதராபாத். ஒரே மிதியில் சச்சின், வல்தாட்டி, காலிஸ் எல்லோரையும் ஓவர் டேக் செய்து ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார் சேவக். இந்த முறை அவர் 17வது ஓவர் வரை களத்தில் நின்று காட்ட… என்னடா இது புது தலை வலி என்று மற்ற அணிகள் கிலிபிடித்து நிற்கின்றன.
கொச்சி டஸ்கர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் அணிகளும் நம்பிக்கை குறையாமல் உற்சாகமாகவே உள்ளன. கிங்ஸ் லெவனுக்கு நிறைய லீக் ஆட்டங்கள் பாக்கி இருப்பதால் கில்கிறிஸ்ட் - வல்தாட்டி ஜோடி பாய்ச்சலுக்கு ஆயத்தமாக உறுமிக் கொண்டிருக்கிறது. யுவராஜின் புனே மட்டுமே பரிதாபத்துக்குரிய ஒரே அணியாக எக்சிட் கேட்டில். தொடர்ச்சியாக ஏழு தோல்வி என்றால் எழுந்திருப்பது எப்படி? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று புலம்புகிறார் யுவா. பெருங்காய டப்பா நெஹ்ராவுக்கு பதிலாக கங்குலியை துணை கேப்டனாக ஒப்பந்தம் செய்திருப்பது டூ லேட் என்றே தோன்றுகிறது.
‘கம் பேக் கிங்’ என்று தாதா நிரூபித்தாலும்… புனே அணியை பொருத்தவரை சீசன் 4 சேப்டர் குளோஸ்! கொல்கத்தா அரை இறுதிக்கு வெகு அருகே இருப்பதில் ஷாருக் கான் திருப்தியாக இருக்கிறார். டிவி ரேட்டிங்கில் ஐபிஎல் டைவ் அடித்திருந்தாலும், இண்டர்நெட்டில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஜிவ்வென 85 சதவீதம் எகிறியிருக்கிறது.
நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் யுடிஆர்எஸ் முறையை, ஐபிஎல் போட்டியில் அறிமுகம் செய்ய ஆதரவு அதிகரித்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சுதாரித்துக் கொள்ள அவகாசம் அதிகம். டி20ல் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. இதில் ஒரு தவறான முடிவு கூட ஆட்டத்தின் முடிவை அடியோடு மாற்றிவிடும் என்பதால், நாட்டாமை தீர்ப்பை மாற்றச் சொல்லி கேட்கும் உரிமை அவசியம் வேண்டும் என்கிறார் ஜெயவர்தனே.
உலக கோப்பை, ஐபிஎல்… என்று தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எங்களுக்கு ஓய்வு கொடுங்கள் என்று சீனியர் வீரர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் வாரியம் விடுவதாக இல்லை. ‘நல்ல பசங்க இல்ல… அங்கேயும் போய் ஆடிட்டு வந்துருங்க. நீங்க ஆடினாத்தான் விளம்பரம் கிடைக்கும், நாலு காசு பார்க்கலாம்’ என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறது. இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் இந்திய வீரர்கள் தவழ்ந்துதான் போக வேண்டியிருக்கும். வாய்ப்புக்காக காத்திருக்கும் உத்தப்பா, வல்தாட்டி, ஜடேஜா, இர்பான், வேணுகோபால், ராயுடு, இஷாந்த் ஆகியோரை செலக்ட் செய்தால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு இந்த அணியே ரொம்ப அதிகம்! இப்படி வீரர்களை ரொட்டேட் செய்தால்தான் அவர்களும் எனர்ஜியோடு விளையாட முடியும். தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

பா.சங்கர்  

கலக்குறாங்க சென்னை பசங்க


அதிர்ஷ்டம் ஸ்டாக் அவுட் ஆயிடுச்சு… நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பேல் என்ற கணிப்பை வழக்கம் போலவே தகர்த்திருக்கிறார் டோனி. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே 2வது இடத்துக்கு ஜம்ப் செய்ய, ‘எல்லாம் மச்சம்பா’ என்கிறார்கள் மீண்டும்!
பெரிய கனவோடுதான் சேப்பாக்கத்தில் கால் வைத்தது புனே வாரியர்ஸ். யுவராஜ் டாசில் ஜெயித்து சேஸ் செய்ய முடிவு செய்தது எதிர்பார்த்ததுதான். ஹஸி, விஜய், டோனி ஓரளவு தாக்குப்பிடிக்க சிஎஸ்கே 142 ரன் எடுக்க… வாரியர்ஸ் போட்டுத் தாக்கிவிடும் என்றே தோன்றியது.
உள்ளூர் ரசிகர்களின் உசுப்பேற்றலில் சிலிர்த்தது சூப்பர் கிங்ஸ். துல்லியமான பந்துவீச்சும் துடிப்பான பீல்டிங்கும் செம கிளாஸ். சூறைத் தேங்காய பொறுக்குற மாதிரி நம்ம பாய்ஸ் சும்மா பாய்ஞ்சு பாய்ஞ்சு புடிச்சத நம்பவே முடியவில்லை. யுவராஜ் மட்டும் கொஞ்சம் போராடி பார்த்தார். பாவம், சென்னையோட சூட்டில் தொங்கிப் போனவர் ‘முடியல’ என்று ஒதுங்கிக் கொண்டார். மார்க்கெல், போலிஞ்சர், அஸ்வின் பவுலிங் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான ஆட்டத்தில் வென்ற திருப்தி டோனி முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது ஆச்சரியம்! கேலரியில் திருமதி டோனியின் ஆர்ப்பாட்டம் அழகான அமர்க்களம்.
ஒரே நாள் இடைவெளியில் மீண்டும் வாரியர்சுடன் மோதல். இந்த முறை அவங்களோட குகையில். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் டீம்… சேப்பாக்கத்துக்கு வெளியே பாச்சா பலிக்காது என்ற அவப் பெயரை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்ற வெறியோடு விளையாடியது சிஎஸ்கே. யுவராஜ், உத்தப்பா அதிரடியில் வாரியர்ஸ் 141 எடுத்தது. சேசிங்கில் ஹஸி ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொண்டாலும் விஜய், பத்ரி, ரெய்னா அட்டகாசம் செய்தனர். பத்ரியோட அதிரடி ஆட்டம் யாருமே எதிர்பார்க்காதது. வீழ்வதெல்லாம் எழுவதற்கே என்று மீண்டும் நிரூபித்துள்ளது சிஎஸ்கே.
சீசன் 4 ரன் குவிப்பு டாப் 10ல் பத்ரி, விஜய் இடம் பிடித்திருப்பது பெரிய விஷயம். மற்ற அணிகளில் மும்பை இந்தியன்ஸ் டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. நான்காவது வெற்றிக்கு குறி வைத்த கொச்சி டஸ்கர்ஸ், இஷாந்த் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. டேர்டெவில்ஸ் நிலைமைதான் கவலைக்கிடம். எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் சேவக். பின்தங்கியுள்ள அணிகள், இரண்டாவது பாதியில் ஈடுகட்டி விடலாம் என்ற நம்பிக்கையோடு உள்ளன.
தேர்வுகள் முடிந்து ஹாலிடே மூடு வந்திருந்தாலும், டிவி ரேட்டிங்கில் ஐபிஎல் சூடு பிடிக்காதது டூ மச் ஆப் கிரிக்கெட் என்ற சலிப்புணர்வை காட்டுகிறது என்றே தோன்றுகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த சீசனை விட 22 சதவீதம் குறைந்திருக்கிறதாம். லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் இருந்துதான் ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறார்கள்.
‘ஒப்பந்தத்தில் இருப்பதை விட குறைவான போட்டிகளில் விளையாடுகிறோம். அதனால், முதல் ஆண்டுக்கான தொகையில் 75 சதவீதம் மட்டுமே கட்டுவோம்’ என்று புதிய அணிகளான புனே, கொச்சி முரண்டு பிடிக்க, அதெல்லாம் நடக்காது… முழுசா எடுத்து வையுங்க என்று கிரிக்கெட் வாரியம் கறாராக சொல்லி இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்காக 10 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உள்ளதால், அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்வதில் அணிகள் ரொம்பவே பிஸி. அரை இறுதி வாய்ப்பு யாருக்கு என்பதும் அடுத்த வாரத்தில் தெளிவாகி விடும்.

பா.சங்கர் 

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

வார்ன் – ஹர்லி ஒரு காதல் சடுகுடு…


எதிர்பார்த்தது போலவே ஐபிஎல் 4வது சீசன் சூடு பிடித்துவிட்டது. கடைசி ஓவர் கடைசி பந்து வரை வெற்றி கண்ணாமூச்சி ஆடும் ஆட்டங்கள், ரசிகர்களை பேச வைத்திருக்கின்றன. இலங்கை வீரர்களுக்கான கெடு மே 18 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அணிகளின் உரிமையாளர்கள் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார்கள்.
கோப்பைக்கான ரேசில் டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்சுக்கு ஸ்டார்ட்டிங் டிரபுள். சாம்பியன் சிஎஸ்கே, டெக்கான், புனே, ராயல்ஸ் மிதவேகத்தில் மிதக்க… மும்பை, நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன், கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் பறந்து கொண்டிருக்கின்றன. லொக்க பிளேயர்சா செலக்ட் பண்ணியிருக்காங்க… கொச்சி அணி தேறாது என்று கணித்தவர்கள் எல்லாம் கப்சிப்! கடந்த சீசனில் தடை விதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா, ஆல்ரவுண்டராக ஜொலித்து வட்டியும் முதலுமாய் வசூலித்துக் கொண்டிருக்கிறார். சிக்சர் மன்னர்களில் இவருக்கு தனி இடம் நிச்சயம். 
அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவதில் மும்பை கேப்டன் சச்சின் - பஞ்சாப் ஓபனர் வல்தாட்டி இடையே ஏற்பட்டிருக்கும் போட்டி வெகு சுவாரசியம். கில்கிறிஸ்ட் ராசியில் வெற்றிகள் குவிவதால் பிரீத்தி ஜிந்தாவுக்கு செம குஷி! பஞ்சாப் – ராஜஸ்தான் மோதிய லீக் ஆட்டம் ஆஸி. உள்ளூர் கிளப் போட்டி போல இருந்தது.
ராயல்ஸ் கேப்டன் ஷேன் வார்ன் பந்துவீச்சை கிங்ஸ் லெவனின் ஷான் மார்ஷ் போட்டுத் தாக்கியது அமர்க்களமாக இருந்தது. காதலர் வார்ன் (41) ஆட்டத்தை பார்ப்பதற்காக நடிகை எலிசபத் ஹர்லி (45) தனது மகன் டேமியனுடன் மொகாலி வந்திருந்தார். வார்னின் திருவிளையாடல்களால் ஹர்லிக்கு காதல் கசந்துவிட்டது என்று கசிந்த தகவல் காற்றில் கரைந்து காணாமல் போனது. வார்ன் முதல் மனைவி சைமன் கல்லஹனின் குழந்தைகள் புரூக், சம்மர், ஜாக்சன் மூவரும் ஹர்லியோடு அமர்ந்து ஆட்டத்தை ரசித்தது ஆச்சரியம்.
பிங்க் டாப்ஸ், நீல நிற ஜீன்ஸ், கை நிறைய தங்க வளையல்கள் என்று அம்சமாக இருந்தார் ஹர்லி. ராயல்ஸ் கை ஓங்கிய போதெல்லாம் ஹர்லி கைகளை உயர்த்தி ஆர்ப்பரித்தது கண் கொல்லும் காட்சி! ‘முதல் முறையாக கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்து ரசித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரோட ராயல்ஸ் டீம் ஜெயித்திருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும். அடுத்த ஆட்டத்தில் அது நடக்கும் என நம்புகிறேன்’ என்றார் உற்சாகமாக. வார்ன் முகத்தில் பொலிவு கூடியிருப்பதற்கான ரகசியம் விளங்கிவிட்டது!
இலங்கை வீரர்கள் மே 5க்குள் பேக்கப் ஆகிவிடுவார்களே… மாற்று வீரர்களுக்கு எங்கே போவது என்று நகத்தை கடித்துக் கொண்டிருந்த அணிகளுக்கு, மே 18 வரை ஐபிஎல் போட்டியில் ஆடலாம் என்று அந்நாட்டு வாரியம் அனுமதித்திருப்பது பெரிய ரிலீப். ஜெயவர்தனே ரிலீவானால் டஸ்கர்ஸ் அணியில் சேர்ந்து கொள்ளலாம் என்ற கங்குலியின் கனவு கலைந்தது துரதிர்ஷ்டம். எப்படியாவது கங்குலிக்கு வாய்ப்பு கொடுத்துவிட வேண்டும் என்று கொச்சி உரிமையாளர்களும் முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். யாராவது காயம் அடைந்தால் கங்குலிக்கு ஆதாயம்!
வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழுவினர் அலட்சியப்படுத்திய ஆத்திரத்தில், அடுத்த பிளைட் பிடித்து பெங்களூர் வந்துவிட்டார் கிறிஸ் கேல். அணியில் சேர்க்கவில்லை என்றால் வீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டியதுதானே… எப்படி ஐபிஎல் டி20 ஆடப் போகலாம்? என்று வெ.இ. வாரியம் அங்கலாய்க்கிறது. ‘நீங்களும் சேர்க்க மாட்டேங்கறீங்க. சீனியர்ஸ் சர்வான், சந்தர்பாலையே சேர்த்துக்கல. என்னோட எதிர்காலம் என்னாகறது. ஐபிஎல்ல விட்டா எனக்கு யாரை தெரியும்… வேற எங்கே போவேன்’ என்று கலாய்க்கிறார் கேல். அவரது வருகையால் ராயல் சேலஞ்சர்ஸ் கொஞ்சம் தெம்பாகி இருக்கிறது.
‘இந்த முறை சாம்பியன் யார் என்பதை கணிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. போட்டி மிகவும் கடுமையாக இருக்கிறது. கடைசி லீக் ஆட்டம் வரை நாக் அவுட் சஸ்பென்ஸ் நீடிக்கும் என நினைக்கிறேன். கொச்சி, புனே என புதிதாய் இரண்டு அணிகள் வந்திருப்பதால் நெருக்கடி அதிகரித்திருக்கிறது. லீக் சுற்றில் சென்னை அணி எப்போதுமே கொஞ்சம் தடுமாற்றத்துடந்தான் ஆடும். போகப் போகப் பாருங்க… சூப்பரா ஆடி அமர்க்களப்படுத்தி விடுவோம்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சுழல் நட்சத்திரம் அஸ்வின்.
சச்சின் – ராயுடு, கில்கிறிஸ்ட் – வல்தாட்டி, சேவக் – வார்னர் ஜோடிகளின் அதிரடி ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் இரண்டு ஜோடியும் சூப்பர் டூப்பர் ஹிட். வார்னர் வெளுத்துக் கட்டினாலும், சேவக் கை பிடிக்காததால் டேக் ஆப் ஆக முடியாமல் ரன்வேயிலேயே ஊர்ந்து கொண்டிருக்கிறது டேர்டெவில்ஸ். இன்னும் எக்கச்சக்க லீக் ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் எந்த அணியையுமே ஒதுக்கிவிட முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பா.சங்கர்

மொகாலி மாப்பிள்ளை வல்தாட்டி


கல்யாண சாப்பாட்டை மூக்கு முட்ட ஒரு கை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களை சுடச் சுட பிரியாணி விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருக்கிறது கிரிக்கெட் ரசிகர்களின் நிலை! உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கைப்பற்றியதை கொண்டாடக் கூட அவகாசம் இல்லாமல், ஐபிஎல் டி20 கலாட்டா ஆரம்பித்ததில் கொஞ்சம் தொங்கித்தான் போனார்கள். லீக் ஆட்டங்கள் ஓரளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதால், ஹேங் ஓவர் கொஞ்சம் கொஞ்சமாய் ரிலீசாகத் தொடங்கி இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்சுடனான தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் வென்றது சென்னை ரசிகர்களுக்கு டபுள் போனசாக அமைந்தது. கேப்டன் டோனியின் கூலான அணுகுமுறை மீண்டும் பாராட்டுகளை அள்ளியது. அனிருதாவின் அதிரடியில் அப்பா ஸ்ரீகாந்த்தை பார்க்க முடிந்தது ஸ்வீட் சர்ப்ரைஸ். உள்ளூர் ஆட்டத்தில் சமாளித்தாலும், மொகாலியில் கிங்ஸ் லெவனிடம் சூப்பர் கிங்ஸ் பாச்சா பலிக்கவில்லை.
முதல் பந்தில் அனிருதா… அடுத்த பந்தில் ரெய்னா… இருவரும் தங்க முட்டை போட்டு திரும்பினாலும் விஜய், பத்ரியின் அமர்க்களமான ஆட்டத்தில் ஸ்கோர் எகிறியது. டோனியும் தன் பங்குக்கு விளாச 188 ரன் சேர்ந்தபோது, வெற்றிக்கு இது போதும் என்றுதான் தோன்றியது. ஆனால், கிங்ஸ் லெவன் தொடக்க வீரர் பால் வல்தாட்டி சிஎஸ்கே பந்துவீச்சை வாட்டி வதைத்துவிட்டார். என்ன நடக்குது என்பதை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே கேம் ஓவர்! 52 பந்தில் ஐபிஎல் 4வது சீசனின் முதல் சதத்தை விளாசிய வல்தாட்டி, 120 நாட் அவுட் ஸ்கோருடன் ஆட்டநாயகன் விருதையும் ஆரஞ்சு தொப்பியையும் அபகரித்துக் கொண்டார். யாருப்பா இந்த வல்தாட்டி என்று புருவம் உயர்த்தாதவர்களே இல்லை.
அந்த அற்புதமான ஆட்டத்துக்கு பின்னே ஒரு அயராத போராட்டம் இருந்திருக்கிறது. சச்சின், காம்ப்ளி என்று பள்ளிச் சிறுவர்களை சாதனையாளர்களாக அடையாளம் காட்டிய மும்பை ப்ராடக்ட்தான் இவரும். இர்பான், பார்திவ் ஆகியோரோடு 2002 இந்திய இளைஞர் அணியில் இடம் பிடித்தவருக்கு, சீனியர் அணியிலும் சீட் நிச்சயம் என்ற நிலையில் ஒரு விபத்து அந்த கனவை கலைத்தது துரதிர்ஷ்டத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். நியூசிலாந்தில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வலது கண்ணை தாக்கிய பந்து பார்வையை பறிக்கும் அளவுக்கு பலமான சேதத்தை ஏற்படுத்த கலங்கிப் போனார் வல்தாட்டி.. காயம் குணமாகி பார்வை சீராவதற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நொறுங்கிப் போயிருந்தவருக்கு ஐபிஎல் வடிவில் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு மும்பை அணிக்காக ரஞ்சி டி20ல் விளையாடியபோது இவர் அடித்த சிக்சரில் ஸ்டேடியத்துக்கு வெளியே நிறுத்தியிருந்த காரின் கண்ணாடி அவுட்!, ராஜஸ்தான் ராயல்ஸ், ஏர் இந்தியா என்று ஆடிக் கொண்டிருந்தவர் இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு எல்லாமே தலை கீழாகி இருக்கிறது. இந்த சீசன் முழுவதும் வல்தாட்டி மீது வெளிச்ச வட்டம் வீசிக் கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக கோப்பை ஹீரோ யுவராஜ் தலைமையில், புதிதாய் வந்த புனே வாரியர்ஸ் ஃபுல் த்ராட்டிலில் உருமிக் கொண்டிருக்கிறது. முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவனையும் அடுத்து கொச்சி டஸ்கர்சையும் புரட்டி எடுத்த புனே இன்னும் பல ஆச்சரியங்களைத் தரும் என்றே தோன்றுகிறது. குறிப்பாக, உத்தப்பா சிக்சர்கள் கொள்ளை அழகு!
இளைஞர்களுக்கு சவால் விடும் சச்சின், ஷேன் வார்ன் ஆட்டம் செமத்தியான ட்ரீட். வார்னர், வேணுகோபால் கொஞ்சம் மிரட்டினாலும் சேவக் அதிரடி எடுபடாததால் சோளக்கொள்ளை பொம்மையாக டேர்டெவில்ஸ். ‘ஐபிஎல் டி20ல் ஆடியது போதும்… இங்கிலாந்து டூருக்கு தயாராகணும், சீக்கிரம் வந்து சேருங்க’ என்று இலங்கை வீரர்களுக்கு அந்நாட்டு வாரியம் அழைப்பு விடுத்திருப்பதால் டென்ஷன். மலிங்காவின் யார்க்கர் இல்லாவிட்டால் மும்பை இந்தியன்ஸ் பல் பிடுங்கிய பாம்பாகி விடும். சங்கக்கரா, ஜெயவர்தனே, தில்ஷன் என்று 10 வீரர்கள் ஒரே நேரத்தில் ஜகா வாங்கினால் எப்படி சமாளிப்பது என்று எல்லா அணிகளும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றன.
நல்ல வேளையாக, வங்கதேச ஒருநாள் தொடர் முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வந்து கொண்டிருப்பது கொஞ்சம் தெம்பூட்டியுள்ளது. ஏற்கனவே உற்சாகமாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், வாட்சனின் வரவால் துள்ளிக் குதிக்கிறது. 15 சிக்சர் உலக சாதனையோடு வந்திருக்கிறார். அதே வேகத்தில் ஆடினால் எதிரணி பந்துவீச்சு அதோகதிதான்!
ஐபிஎல் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று நிறைய வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். புனே, மும்பை, ராஜஸ்தான் முன்னணியில் இருந்தாலும், இன்னும் நிறைய லீக் ஆட்டங்கள் இருப்பதால் எல்லா அணிகளுமே நம்பிக்கையோடுதான் உள்ளன.

பா.சங்கர்

பன்னிரு திருமறை இசை மேதை சைதை நடராஜன்


பன்னிரு திருமறை எனப்படும் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களை இசையுடன் பாடுவதிலும், கற்பிப்பதிலும் சிறந்து விளங்கும் சைதை நடராஜன் அவர்களின் இசைத் தொண்டு ஈடு இணையற்றது. தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ள இந்த இசைக் கலைஞரிடம் பயின்றவர்கள், தங்கள் குருவிடம் வைத்துள்ள அன்பும் அபிமானமும் வியக்க வைக்கிறது.
90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சைதை நடராஜன், இன்றும் தனது இசைப் பணியினை கொஞ்சமும் தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு முழுமுதற் காரணம் அவரது மாணவர்கள். எந்தவித பலனையும் எதிர்பாராமல், ஒரு குழந்தையைப் போல அவரை அரவணைத்து பராமரித்து வருவது பிரமிப்பூட்டுகிறது.
நமது பாரம்பரியமான தெய்வீக தமிழிசைப் பாடல்கள் அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியில் அயராது உழைத்து வரும் இந்தக் கலைஞர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாரந்தோறும் திரு.சைதை நடராஜன் அவர்களின் இல்லத்திலும், சிஷ்யர்களின் இல்லங்களிலும் இசை வகுப்புகளை நடத்தி பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து வருகின்றனர். அப்படியொரு இனிய இசை வகுப்பில் அவர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். திரு. சைதை நடராஜன் மற்றும் அவரது குழுவினரின் தெய்வீக தமிழ் இசைப்பணி என்றென்றும் தொடர வேண்டும்.





பா.சங்கர் 

சனி, 16 ஏப்ரல், 2011

சும்மா வரவில்லை வெற்றி


இந்தியாவின் 28 ஆண்டு கால கனவு நனவாகி இருக்கிறது. ரன் குவிப்பில் இமாலய சாதனைகளை படைத்திருந்தாலும், உலக கோப்பையை வென்ற பெருமை மட்டும் கண்ணாமூச்சி ஆடியதால் ஏமாற்றத்தில் இருந்த சச்சின் கடைசி வாய்ப்பில் அதை முத்தமிட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறார். கோப்பையை சச்சினுக்காக வெல்வோம் என்று சபதமிட்டு விளையாடிய சக வீரர்கள் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்கள். ஒட்டு மொத்த தேசமும் இந்த வெற்றியில் பூரித்து, நெஞ்சு நிமிர்த்தி பெருமிதத்துடன் வாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது கை கூடிய விதம் உணமையிலேயே திகிலானது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியாவை முத்திரை குத்திவிட்டார்கள். லீக் சுற்றில் கொஞ்சம் தடுமாறியபோது அந்த கணிப்பு தவறானதோ… என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. முக்கியமான நாக் அவுட் சுற்றில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, பங்காளி பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு முன்னேறியதும் அணியின் ரேட்டிங் மீண்டும் எகிறியது. அதிசயமாக பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் அபார முன்னேற்றம். எப்படியாவது கோப்பையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறி வீரர்களின் துடிப்பான பீல்டிங்கிலேயே தெரிந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் சிறப்பாகப் பந்துவீசி இலங்கையை கட்டுப்படுத்தியவர்கள் கடைசி கட்ட ஓவர்களில் சொதப்பி பெரிய ஸ்கோர் அடிக்கவிட்டபோது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. கடினமான துரத்தலின் தொடக்கத்திலேயே அதிரடி வீரர்கள் சேவக், சச்சின் விடைபெற்றுக் கொள்ள வெற்றி கேள்விக்குறியானது! அப்படி இருந்தும் இந்தியா கோப்பையை வசப்படுத்தியது எப்படி? பழைய அணிகளுக்கும் டோனி அண்ட் கோவுக்கும் அதுதான் வித்தியாசம். சச்சின் அவுட் என்றாலே மற்ற வீரர்களுக்கு கை கால் நடுங்கத் தொடங்கிவிடும். அப்படியே மந்திரித்துவிட்டவர்களைப் போல பெவிலியனுக்கும் விக்கெட்டுக்கும் இடையே அணிவகுப்பு நடத்துவார்கள்.
ஆனால், இப்போதைய அணி எந்த நெருக்கடிக்கும் தயாராக இருந்தது. அவர்கள் போனால் என்ன… நாங்கள் இருக்கிறோம். எங்களால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை பொங்கி வழிய கம்பீர் – கோஹ்லி, கம்பீர் – டோனி, டோனி – யுவராஜ் என்று பார்ட்னர்ஷிப் போட்டு போராடி அசத்தியதை மறக்கவே முடியாது.
பார்மில் இல்லாததால் அணியில் இருந்தே தூக்கப்பட்டு, ஒருமுகமான பங்களிப்பு இல்லாமல் ஏனோதானோ என்று செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ், ஆல் ரவுண்டராக ஜொலித்து 4 ஆட்டநாயகன் விருதுகளை அள்ளியது மட்டுமல்ல தொடர்நாயகன் விருதையும் வென்று அமர்க்களப்படுத்தினார். கடந்த 20 இன்னிங்சில் பெரிதாய் ஸ்கோர் அடிக்காமல் லொட்டு லொட்டு என்று டிபன்ஸ் பழகிக் கொண்டிருந்த டோனி, திடீரென தனது பழைய அதிரடி ஆட்டத்துக்கு மாறி அட்டகாசம் செய்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இப்படி ஒரு மிகப் பெரிய போட்டிக்காகத்தான் அவ்வளவு பொறுமையாக டோனி கொக்கு காத்துக் கொண்டிருந்தது போல.
இந்திய வீரர்களின் கூட்டு முயற்சிதான் வெற்றிக்கு காரணம். அணி ஒரு சில வீரர்களை மட்டுமே சார்ந்திருந்த காலம் மலையேறிவிட்டது. உலக கோப்பையில் அதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார்கள். ரன் குவிப்பில் சச்சின், சேவக், கம்பீர், யுவராஜ், கோஹ்லி, டோனி… பந்துவீச்சில் ஜாகீர், முனாப், ஹர்பஜன், அஷ்வின், நெஹ்ரா… மற்றும் எல்லா வீரர்களின் துடிப்பான பீல்டிங்கும்தான் கோப்பையை 2வது முறையாக வசப்படுத்த உதவியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கேப்டன் டோனியின் தன்னம்பிக்கையும், வித்தியாசமான வியூகங்களும், அதிர்ஷ்டமும் இந்த வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. மனம் தளராத உறுதியான போராட்டத்தால் தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ள வீரர்களை வாழ்த்துவோம்.
பா.சங்கர் 

ஆஸ்திரேலிய ஆதிக்கத்துக்கு ஆப்பு!


உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் 13 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் இருந்த கங்காருகளுக்கு நாக் அவுட் சுற்றில் மரண அடி கொடுத்தது டோனி அண்ட் கோ.
ஹாட்ரிக் சாம்பியன் என்ற அந்தஸ்து, ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணி, உலக கோப்பையில் தொடர்ச்சியாக 29 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணி… என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஏ பிரிவில் 5 லீக் ஆட்டங்களில் 4 வெற்றி ஒரு போட்டி மழையால் ரத்து என தனது தோல்வி இல்லா பயணத்தின் எண்ணிக்கையை 34 ஆட்டங்களாக ஆஸி. அதிகரித்தபோது, இந்த முறையும் கோப்பையை தூக்கிக் கொண்டு ஓடி விடுவார்களோ என்று உண்மையிலேயே பீதியைக் கிளப்பினார்கள்.
பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் ஆஸி.யின் வெற்றி நடைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இருந்தாலும், கால் இறுதியில் சாம்பியனை சமாளிக்குமா இந்தியா? என்ற கேள்வி ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது நிஜம். அகமதபாத்தில் நடந்த போட்டியில் பார்மில் இல்லாத பாண்டிங் சதம் அடித்தாலும் மற்ற வீரர்களை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். சேசிங்கில் சச்சின், கம்பீர் உறுதியாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்தபோது ஆஸி.க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், நடப்பு தொடரில் மகத்தான ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் யுவராஜ் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் வெற்றியை வசப்படுத்தியதுடன் 4வது முறையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு அருமையாக கம்பெனி கொடுத்த ரெய்னாவின் பங்கும் அற்புதமானது. இந்த வெற்றியால், கடந்த 13 ஆண்டுகளாக உலக கோப்பையில் ஆஸி. அணி செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர்களான கில்கிறிஸ்ட், மெக்ராத், வார்ன், ஹேடன் ஆகியோர் ஓய்வு பெற்றதில் இருந்தே ஆஸி. அணியின் பிடி தளரத் தொடங்கிவிட்டது. பேட்டை ரவுடி போல அமர்க்களம் செய்து கொண்டிருந்த அந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று உலகுக்கு உணர்த்தியதே இந்தியாதான். பல தொடர்களில் பதிலடி கொடுத்து தண்ணி காட்டியதுடன், ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமான முத்தரப்பு தொடரில் முதல் முறையாக தோல்வியைப் பரிசளித்து அசத்தியது இந்தியா.
இதைத் தொடர்ந்தே மற்ற அணிகளும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து அடிக்க ஆரம்பித்தன. சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து புரட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தோல்வியை அடுத்து ஆஸ்திரேலிய ஆதிக்கம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது.

பா.சங்கர் 

நண்பேன்டா…!


நட்புக்கரம் நீட்டிய மொகாலி

ஹிட்ச்காக் திரைப்படம் போல திகிலூட்டி திகைப்பில் ஆழ்த்திய மொகாலி மினி பைனலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியபோது ஒட்டு மொத்த தேசமும் ஆனந்தக் கூத்தாடியது. மகா யுத்தம் என்று வர்ணிக்கப்பட்டாலும், களத்தில் வீரர்கள் கண்ணியம் காத்தது ‘ஜெண்டில்மேன்’ விளையாட்டுக்கு பெருமை சேர்த்தது.
கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதுவே உலக கோப்பையில் எனும்போது… அந்த எதிர்பார்ப்பு ஆயிரம் மடங்காகிவிடுகிறது. இரண்டாவது அரை இறுதியில் இரு அணிகளும் மோதுவது முடிவானதுமே மீடியா பரபரத்தது. எல்லா சாலைகளும் பார்வைகளும் மொகாலி நோக்கி! அலுவலகங்கள் காலி, வீதிகள் வெறிச்சோடி அறிவிக்கப்படாத பாரத் பந்த் அமலாகி இருந்தது.
அணியில் அஷ்வின் இல்லை என்றதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் டாசில் வென்று இந்தியா முதலில் பேட் செய்யப்போவதில் அதை மறந்தார்கள். அதிசயமாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திருந்தார் டோனி. பாக். பிரதமர் கிலானி, இந்திய பிரதமர் மன்மோகன், சோனியா, ராகுல், பாலிவுட் நட்சத்திரங்கள் என்று வி.வி.ஐ.பி.க்கள் வருகையில் மொகாலி திக்குமுக்காடியது. பாகிஸ்தானில் இருந்தும் நான்காயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர்.
டென்ஷன் நிரம்பி வழிந்த ஸ்டேடியம் ஹோவென ஆர்ப்பரிக்க சேவக் – சச்சின் ஜோடி உள்ளே வந்தது. சேவக் மெஷின் கன் படபடக்க பாக். கிடுகிடுத்தது. இந்த வேகத்தில் சாத்தினால் 400 கூட சாத்தியம் என்று கணக்குபோட்டு… சே… சேவக் அவுட். அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்ட கம்பீர் திரும்பிப் பார்க்க கூட நேரமில்லாமல் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். கோஹ்லி ஆட்டமிழந்தபோதும் ரசிகர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ஆல் ரவுண்டர் யுவராஜ் முதல் பந்திலேயே ‘தங்க முட்டை’ போட்டு தளர்நடை போட இந்திய ரசிகர்கள் முகம் வெளிறியது. சச்சின் கொடுத்த 4 கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் விரல்களின் வழியே வழிய விட்டு ஆறுதல் அளித்தனர். ஒரு லைப் கூட இல்லாமல் சதம் அடிக்கும் சச்சின், அதிசயமாக 6 லைப் கிடைத்தும் 85 ரன்னில் ஆட்டமிழந்தது உலக அதிசயம்.
டோனி வழக்கம்போல தட்டித் தடவி 25 ரன் எடுத்து ஒதுங்கிக் கொண்டார். ரெய்னா தயவில் இந்தியா 260 ரன்னை எட்டியது. இந்த ஸ்கோர் தாங்குமா? 120 கோடி இந்திய ரசிகர்களும் கேள்வியின் கனத்தில் மவுனமாய் கவிழ்ந்தனர். பந்து மிச்சம் வைக்காமல் 50 ஓவர் ஆடிட்டாங்க, சச்சின் சதம் அடிக்கல, உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இதுவரை தோற்றதில்ல… எனவே எப்படியும் ஜெயிச்சுடுவாங்க என்று சென்டிமென்ட்டை துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது.
ஹபீஸ், ஷபிக் கொஞ்சம் மிரட்டினாலும் இந்திய வீரர்கல் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்குடன் தாக்குப் பிடித்து தாக்குதல் நடத்தினர். ஜாகீர், முனாப், நெஹ்ரா வேகம் ஒர்க் அவுட்டானது பெரிய ஆச்சரியம். அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்த்தி ஆர்ப்பரித்தார் யுவராஜ். மிஸ்பா மட்டும் தாக்குப் பிடிக்க மறுமுனையில் வீரர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். பூச்சாண்டி காட்டிய பூம்…பூம்… அப்ரிடி வெளியேறியதுமே இந்திய வெற்றி உறுதியாகிவிட்டது. ஒரு பந்து மிச்சம் இருக்க பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனபோது கொகாலியில் ரிக்டர் ஸ்கேல் கொண்டு அளந்திருந்தால் குறைந்தது 10 புள்ளி பதிவாகியிருக்கும்!
குழந்தை போல குதூகலித்த அன்னை சோனியாவின் முகத்தில் இந்தியா! கிலானி அமைதி காக்க மன்மோகன் கைதட்டியது கணத்தின் கட்டாயம். இதை இதைத்தானே இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். பொடிசுகள் முதல் பெரிசுகள் வரை கை தட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது கண்கொள்ளா காட்சி. அதிர்வேட்டுகளும் வாண வேடிக்கையும் பட்டி தொட்டிகளிலும் அமர்க்களப்பட்டது.
 ஹை வோல்டேஜ் ஆட்டத்தில் ஸ்லெட்ஜிங் துளி கூட தலைகாட்டாதது உண்மையிலேயே வரவேற்கத்தக்க அம்சம். ‘கடைசி வரை போராடினோம். அரை இறுதி வரை முன்னேறியதே பெரிய சாதனைதான். இந்த தோல்விக்காக பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கான வரவேற்பு மோசமாக இருக்காது என்று நம்புகிறேன்’ என்று அப்ரிடி அழகாகப் பேசினார். பிரதமர் மன்மோகனும் இந்திய அணியும் பாகிஸ்தான் வர வேண்டும் என்று கிலானி அழைப்பு விடுத்து நட்புக் கரம் நீட்டினார். ஆட்டநாயகன் விருது பெற்ற சச்சின், ‘ஒரே ஆட்டத்தில் எனக்கு இத்தனை லைப் இது வரை கிடைத்ததில்லை! அப்படியும் சதம் அடிக்காததில் வருத்தமும் இல்லை. அணி ஜெயிப்பதுதான் முக்கியம்’ என்று கலகலத்தார்.
இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து எஸ்.எம்.எஸ்.கள் பறந்தன. எல்லாவுட் நட்சத்திரங்களும் டுவிட்டர், பேஸ்புக்கில் பாராட்ட இணையதளங்கள் பாரம் தாங்காமல் தொங்கின. 2011 உலக கோப்பையில் இதுதான் கிளைமாக்ஸ். இதுதான் முடிவு. கோப்பையை முத்தமிடுவது யாராக இருந்தாலும்!

பா.சங்கர்  

ஸ்பெஷலான ஆளுக்காக விளையாடுறேன்!


பொடி வைக்கிறார் யுவராஜ்…
தாங்க முடியலடா சாமி… இந்தியா ஆடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் முழுசா பார்த்து முடிக்கறதுக்குள்ள நூறு தடவை செத்து பொழைக்க வேண்டியிருக்கு! ஈசியான ஆட்டத்த கூட பயங்கரமா சொதப்பி, தாங்களும் டென்ஷனாகி ரசிகர்களையும் பாடாய் படுத்தி… திக்கி திணறி ஜெயிச்சாதான் நம்ம பசங்களுக்கு தூக்கமே வரும் போல. ஒரு வழியா கங்காருகளை கைமா பண்ணிவிட்டு அடுத்து பங்காளியை பதம் பார்க்க ரெடியாகிட்டாங்க.
மரணக் கிணறாக வர்ணிக்கப்பட்ட பி பிரிவில் கால் இறுதிக்கு முன்னேறுவதற்குள்ளாகவே முன்னணி அணிகளுக்கு மூச்சு முட்டிவிட்டது. கொடைச்சல் கொடுத்துக்கிட்டிருந்த வங்கதேசம் தன்னோட கடைசி லீக் ஆட்டத்துல தென் ஆப்ரிக்காவிடம் சரணடைந்ததுமே ரூட் கிளியர். சென்னையில் நடந்த போட்டியில் ஜெயித்தால் ஆஸ்திரேலியா, தோற்றால் இலங்கையுடன் மோத வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துதான் இருந்தது. ஆஸ்திரேலியாவை தவிர்ப்பதற்காக வெஸ்ட் இண்டீசிடம் தோற்றால் கூட நல்லதுதான் என்று ரசிகர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய வீரர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெற்றியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
சர்வதேச சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல், நடுவரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல்… மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து நடையைக் கட்டிய சச்சினின் மதிப்பு கிரிக்கெட் அரங்கில் இன்னும் ஒரு படி உயர்ந்தது. கிடைத்த வாய்ப்பை உடும்பு மாதிரி பிடித்துக் கொண்டார் அஷ்வின். அதுவும் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே புதுப் பந்தை வைத்துக் கொண்டு முன்னணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீஸ் பெருசா அலட்டிக் கொள்ளவில்லை.
முதல் கால் இறுதியிலும் படு கேஷுவலாக விளையாடி பாகிஸ்தானிடம் மண்டியிட்டது பெரிய ஏமாற்றம். கேல், போலார்டு அதிரடி எடுபடாவிட்டால் அந்த அணி செத்த பாம்புதான் என்பது உறுதியாகிவிட்டது. ஆட்டத்துக்கு ஆட்டம் விக்கெட்டுகளை அள்ளும் அப்ரிடி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஆர்ப்பரிக்கும் காட்சி அப்படியே பிரீஸ் ஆகி நிற்கிறது. எல்லாருக்கும் முன்பாக அரை இறுதியில் அடி வைத்து மொகாலியில் காத்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அடுத்த குவார்ட்டர் அகமதாபாத்தில்… ஹாட்ரிக் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதப் போகிறோம் என்றதுமே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறி ரசிகர்களின் படபடப்பு அபாய கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தது.
பவுன்சர் போட்டு தாக்குவோம் என்று ஆஸி. வேகங்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்கள். வீரர்கள் தேர்வில் பல்வேறு காம்பினேஷன்களை யோசித்து சோசித்து கூல் கேப்டன் டோனி கொதிநிலைக்கே போய்விட்டார். பார்மில் இல்லாத பான்டிங் பார்த்துப் பார்த்து விளையாடி சதம் அடித்தாலும், மற்ற வீரர்களை அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டார்கள் இந்திய பவுலர்கள். அஷ்வின், ஜாகீர் கூட்டணி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. அகமதாபாத் ஆடுகளத்துக்கு 260 பெரிய ஸ்கோர்… இந்தியாவுக்கு நெருக்கடி நிச்சயம் என்று கணிப்பு கந்தசாமிகள் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். திக்கு தெரியாமல் திகைத்த சேவக் சீக்கிரமே பெவிலியனுக்கு வழி தேடிக் கொள்ள, சச்சின் பொறுப்பை சுமந்தார். அவரும் கம்பீரும் ஆடிக் கொண்டிருந்தபோது எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது.
அரைசதம் அடித்ததும் சச்சின் கழன்று கொள்ள டென்ஷன் ஏற ஆரம்பித்தது. கோஹ்லி தேவையே இல்லாமல் தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்து வெறுப்பேற்றினார். யுவராஜ் – கம்பீருக்கு ஓட்டம் ஒர்க் அவுட் ஆகவில்லை. ரன் அவுட் ஆகியே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார் கம்பீர். ஆஸி. வீரர்களே வேண்டாம் என்றால் கூட விடுவதாயில்லை! கண்ணை மூடிக் கொண்டு ஓடி கிணற்றில் விழுந்து மூழ்கினார் கம்பீர். எப்படி நம்ம கட் ஷாட் என்று ஸ்டைலாக ஆட முயன்ற டோனி தலையை தொங்கபோட்டபடி வெளியேற கவுத்துட்டாங்கய்யா கவுத்துட்டாங்க என்று ரசிகர்கள் தொங்க ஆரம்பித்தார்கள்.
சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கு போட்டு பார்முக்கு வந்துள்ள யுவராஜ் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் உறுதியுடன் ரெய்னா கம்பெனி கொடுக்க லீ, டெய்ட் வேகத்தை சிதறடித்து வெற்றியை வசப்படுத்திய யுவராஜின் கர்ஜனையில் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் குலுங்கியது. உலக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டோம் என்பதை சாம்பியன் ஆஸ்திரேலியாவால் நம்பவே முடியவில்லை. கங்காருகளின் 13 ஆண்டு ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இந்தியா.
தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்டநாயகன் விருதுடன் போஸ் கொடுத்த யுவராஜ், ‘எனது வாழ்க்கையில் முதல் முறையாக நிருபர்கள் சந்திப்பில் கைதட்டல் வாங்கியிருக்கிறேன். தோற்றால் வெளியேறி விடுவோமே… எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்… என்று மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டு, கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும்… தூக்கி அடிக்கவே கூடாது… வெற்றியைப் பறித்தே தீர வேண்டும் என்று விளையாடினேன். இந்த உலக கோப்பையில் ஒரு ஸ்பெஷலான நபருக்காக உறுதியுடன் விளையாடி வருகிறேன். இந்தியா பைனலுக்கு முன்னேறினால் ஏப்ரல் 2ம் தேதி அது யார் என்பதை வெளிப்படுத்துவேன்’ என்று புதிர் போட்டார் யுவராஜ். அவரது காதலி என்று சிலரும் சச்சின் என்று பலரும் கணித்திருக்கிறார்கள். இன்னும் இரண்டே ஆட்டம்… இந்தியா கோப்பையை முத்தமிட. கமான் பாய்ஸ்… அட்வான்ஸ் கங்கிராட்ஸ்!

பா.சங்கர்

அடுத்தது நாக் அவுட் அமர்க்களம்


கத்துக்குட்டி அணிகளுடன் நடந்த லீக் ஆட்டங்களில் சற்று தடுமாறினாலும், எதிர்பார்த்தது போலவே இந்தியா கால் இறுதிக்கு முன்னேறிவிட்டது. இனி நாக் அவுட் அமர்க்களம்தான். சிம்பிளாகச் சொன்னால்… தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெல்லும் அணி கோப்பையை தூக்கிக் கொண்டு ஓடலாம்!
பெங்களூரில் அயர்லாந்து அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் 207 ரன்னை சேஸ் செய்ய இந்தியா திணறியதில் ரசிகர்களுக்கு செம அதிர்ச்சி. ஆட்டத்தை கடைசி பந்து வரை இழுத்து கடைசியில் கோட்டை விட்டு விடுவார்களோ என்று பீதியை கிளப்பிவிட்டார்கள். யூசுப் பதான் வந்து தனது டிரேட் மார்க் சிக்சர்களை பறக்கவிட்ட பிறகுதான் உயிரே வந்தது. சனி பகவானுக்கு ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்து பார்முக்கு வந்த யுவராஜ் ஆல் ரவுண்டராக கை கொடுத்தார். ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சும்மா சொல்லக் கூடாது… அயர்லாந்து வீரர்கள் பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் இந்திய பேட்டிங் ஸ்டார்களுக்கு தண்ணி காட்டிட்டாங்க.
நெதர்லாந்துடன் நடந்த ஆட்டத்திலும் அதே ஸ்கிரீன் பிளேதான்… ரீமேக் படத்தை பார்க்கிற மாதிரியே இருந்துச்சு. இந்த முறை இலக்கு 190 ரன்தான். சேவக்கும் சச்சினும் 20 ஓவர்ல ஆட்டத்த முடிச்சுடற மாதிரி டாப் கியர்ல தொடங்கினாங்க. உலக கோப்பையில் 2000 ரன் என்ற சாதனை மைல் கல்லை சச்சின் ஹாட்ரிக் பவுண்டரியுடன் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றார். ‘குரு… என்னோட டர்ன்! இப்ப பாருங்க’ என்று சேவக் அடுத்த ஓவரிலேயே தன் பங்குக்கு ஹாட்ரிக் பவுண்டரி விளாச இந்திய ரசிகர்களுக்கு செம குஷி. தேவையில்லாமல் அவசரப்பட்ட இருவரும் சீலாரின் சுழலில் ஏமாந்தனர். புரமோஷன் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பதானும் அதே பவுலரிடம் பலியாக ஆட்டம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. இந்த முறையும் யுவராஜ் அரைசதம் அடித்து சேதாரம் இல்லாமல் காப்பாற்றினார்.
‘இருந்தாலும் கேப்டன் டோனி இந்த சாவ்லாவுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணக்கூடாதுப்பா! சிக்சர் சிக்சரா போட்டுக் கொடுக்கிறான்… அவன எதுக்கு சேக்குறாங்களோ! என்று புலம்பாத ரசிகர்களே இல்லை. ரெய்னா அல்லது அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது கட்டாயம். தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என்று பலமான அணிகளுடன் மோதுவதற்கு முன்பாகவே கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டதால் இனி பல காம்பினேஷன்களை முயற்சிக்கலாம். நாக் அவுட்டில் இதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது.
சொந்த மண்ணில் தொடை தட்டிய வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீசிடம் மண்டியிட்டு மண்ணோடு மண்ணானதில் அந்நாட்டு ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள். ஆனாலும், வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு, கேப்டன் ஷாகிப் வீட்டை நொறுக்கியது எல்லாம் ரொம்ப ஓவர். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் கொடுத்த கேட்ச்சுகளை நழுவவிட்ட விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மீது கூட பாகிஸ்தான் ரசிகர்கள் ஏகக் கடுப்பில் இருக்கின்றனர். இரட்டை லைப் கிடைத்த மகிழ்ச்சியில் டெய்லர் பின்னி எடுத்துட்டார். அடியா அது… கடைசி 5 ஓவரில் 100 ரன்!
பா.சங்கர் 

வெள்ளி, 25 மார்ச், 2011

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

சென்னையில் கடைசி லீக் ஆட்டம்
சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு வெளியே...


தலையை சுற்றி மூக்கை தொட்டு…


பி பிரிவு களேபரம்

உலக கோப்பையில் லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. ஏ பிரிவில் பெரிய அணிகள் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் கால் இறுதியை உறுதி செய்ய, பி பிரிவில் ஒரே களேபரம். கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் மரணப் போராட்டமாக இருந்தன.

இந்தியா நான்கு ஆட்டத்தில் ஏழு புள்ளிகள் எடுத்ததுமே கால் இறுதியில் கால் வச்சாச்சு என்று டிக்ளேர் செய்தது பேக் பயர் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தென் ஆப்ரிக்காவுடன் நடந்த லீக் ஆட்டத்தில் நம்மவர்கள் சொதப்பியதை நம்பவே முடியவில்லை. சேவக் – சச்சின் அதைத் தொடர்ந்து சச்சின் – கம்பீர் அமர்க்களமாக ரன் குவிக்க 400 ரன் அடிப்பாங்கப்பா என்று ரசிகர்கள் கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிக்சர் மட்டுமே அடிப்போம் என்று பிடிவாதமாக இருந்த இந்திய வீரர்கள் 29 ரன்னுக்கு கடைசி? 9 விக்கெட்டுகளை தாரை வார்த்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனர். அப்படியும்… 297 ரன்னை சேஸ் செய்ய முடியாதுப்பா என்று ரசிகர்கள் தெம்பாகவே இருந்தனர். தென் ஆப்ரிக்காவும் விடாக்கண்டனாக விரட்ட நமக்கு கண்ணைக் கட்டியது. கடைசி ஓவரில் நெஹ்ரா சிக்சரும் பவுண்டரியுமாக போட்டுக் கொடுத்து நெருங்கி வந்த வெற்றியை விரட்டி அடித்தார். சச்சினுக்காக கோப்பையை வெல்வோம் என்று சபதம் செய்த வீரர்கள், அவர் அற்புதமாக சதம் அடித்த போட்டியில் சொதப்பலாக விளையாடி அணியை கவிழ்த்ததை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் புலம்பினர்.
சென்னையில் வெஸ்ட் இண்டீசுடன் நடந்த வாழ்வா சாவா லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து கடைசி வரை போராடி ஜெயித்து தொலைக்க, பி பிரிவில் குடுமிப்பிடி சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த அணி அந்த அணியை ஜெயித்தால், அந்த அணி இந்த அணியிடம் தோற்றால்… அப்புறம் ரன் ரேட் கணக்கு என்று தலையை சுற்றி மூக்கைத் தொட முயற்சித்ததில் அணிகள் மூச்சு வாங்கி மூர்ச்சையாகாத குறைதான். கத்துக்குட்டி அணிகளும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் கவுரவமாக விளையாடி, அடுத்த உலக கோப்பையிலும் தங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்று அப்ளிகேஷன் போட்டுள்ளன. ஐசிசி கருணை காட்டுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
கடைசி கட்ட லீக் சுற்றில் அனல் பறந்ததால் நாக் அவுட் ஆட்டங்களில் சுனாமியை எதிர்பார்க்கலாம். இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் உயிரைக் கொடுத்து விளையாடினால்தான் கரை சேர முடியும். டோனியின் பிராப்ளமே இதனை இதனால் இவன் முடிக்கும் என்று… சரியாகக் கணித்து வீரர்களை வேலை வாங்குவதில்தான் இருக்கிறது. ரெய்னா, அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என்று ரசிகர்கள் கதறாத குறை. 6 பேட்ஸ்மேன் 5 பவுலர் என்று பார்முலாவை மாற்றிப் பார்க்கலாம்… என்றாலும் சோதனை முயற்சிகளுக்கான காலம் கடந்துவிட்டது. சிறிய தவறுக்கு கூட இடமில்லை. எல்லாம் நன்றாகவே முடியும் என நம்புவோம்.

இந்த உலக கோப்பையுடன் கனடாவின் ஜான் டேவிசன், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயிப் அக்தர் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். அடுத்த வாரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். தோற்கும் கேப்டன்களின் தலைகள் உருள்வது நிச்சயம். வங்கதேசத்தின் மிர்பூரில் இரண்டு கால் இறுதி ஆட்டங்கள், அகமதாபாத் மற்றும் கொழும்புவில் தலா ஒன்று. கொழும்பு, சண்டிகரில் அரை இறுதி. ஏப்ரல் 2ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மெகா பைனல். சாதனை நாயகன் சச்சின் கைகளில் உலக கோப்பையை ஒப்படைக்கும் பொறுப்பை சக வீரர்கள் நிறைவேற்றுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.






-    பா.சங்கர் (குங்குமம் இதழில் வெளியானது) 

     







வியாழன், 10 மார்ச், 2011

பேட்டிங் ஸ்டிராங்கு… பவுலிங் வீக்கு…


இந்தியா காமெடி பீஸா?

மூன்றாவது சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்து எல்லா அணிகளும் அரை கிணறு தாண்டியுள்ள நிலையில், கோப்பையில் சூறாவளி வீசத் தொடங்கியிருக்கிறது. சரிசமன், ஹாட்ரிக், அதிர்ச்சி தோல்வி, அதிரடி சதம், டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு, சூதாட்ட புகார் என்று சுவாரசியங்களின் அணிவகுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் திக்குமுக்காடிக் கொண்டுள்ளனர்.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதிய லீக் ஆட்டம்… சச்சின் சாதனை சதம் விளாசியதில் இந்தியா 338 ரன் குவித்தது. வெற்றி உறுதி என்று ரசிகர்கள் மட்டுமல்ல வீரர்களும் அசட்டையாக இருந்தது ஆபத்தாகிப் போனது. ஸ்டிராஸ் – பெல் ஜோடி கொடுத்த பதிலடியில் இந்திய பந்துவீச்சு மூச்சு வாங்கியது. கவுத்துட்டாங்கய்யா…என்று ரசிகர்கள் நடையைக் கட்டத் தொடங்க, ஜாகீர் திடீரென்று விக்கெட்டுகளை சாய்த்து உயிரூட்டினார். மீண்டும் வெற்றிக் காற்று இந்தியா பக்கம். அப்படியா? என்று வெளியே போன ரசிகர்கள் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், சிக்சராக போட்டுக் கொடுத்து சாகடித்தார் சாவ்லா. முனாப் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தில் சிக்சர் பறக்க கதை கந்தல். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட, இங்கிலாந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை சரிசமனில் முடித்தது.

இந்தியா பேட் செய்தபோது ஒரு பந்தை மிச்சம் வைத்து ஆல் அவுட் ஆனதுடன், முனாப் கிரீசைத் தொடாமல் ஓடியதால் ஒரு ரன் கணக்கில் சேராமல் போனது. அந்த ஒரு ரன் இருந்திருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்ப, ஒரு புள்ளியாவது கிடைத்ததே என்று இரு அணி கேப்டன்களும் திருப்திபட்டனர். இந்திய பவுலர்கள் இப்படி போட்டுக் கொடுத்தால் கோப்பை வாய்ப்பு அம்பேல் என்று எச்சரிக்கிறார் கபில். பேட்டிங் ஸ்டிராங்கு… பவுலிங் வீக்கு… என்று ரசிகர்கள் காமெடி பண்ணிக் கொண்டிருந்தாலும் இந்திய அணியின் ரேட்டிங் அப்படியே மெயிண்டெய்னாவது அதிசயம்.

இரண்டே நாள் இடைவெளியில் பெங்களூரில் அடுத்த ஆட்டம். இந்த முறை இங்கிலாந்துடன் மோதியது பங்காளி அயர்லாந்து. டிராட் – பெல் அசத்தியதில் இங்கிலாந்து 327 ரன் குவித்தது. அயர்லாந்து பேட்டிங்கில் 111 ரன்னுக்கு 5 விக்கெட் காலி. இங்கிலாந்து வெற்றி பற்றி யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் கணக்கு மட்டும் வேறாக இருந்தது. எவனா இருந்தாலும் அடிப்பேன் என்று அவர் ஆடிய ருத்ரதாண்டவத்தில் இங்கிலாந்து வீரர்கள் மயக்கம் போடாத குறை. போதாக்குறைக்கு கெவின் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டு தலையில் கை வைத்தார் ஸ்டிராஸ். யார் தலையில் கை வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்த அதிர்ச்சி தோல்வி, அப்போதே இங்கிலாந்தை குறி வைத்துவிட்டது. கோப்பையையே வென்றது போல அயர்லாந்து வீரர்கள் ஆர்ப்பரித்து அமர்க்களப்படுத்தினார்கள். கேலரியில் அமர்ந்து கெவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

2007 உலக கோப்பையில் அயர்லாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டத்தில் அண்ணன் நியால் ஓ பிரையன் ஆட்டநாயகன். இப்போது இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த ஆட்டத்தில் தம்பி கெவின் ஓ பிரையன் ஆட்டநாயகன். அதிலும் கெவின் 50 பந்தில் அடித்த சதம் உலக கோப்பையின் அதிவேக சதமாக பதிவாகி இருக்கிறது. இதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? என்று நெகிழ்ந்த தந்தை பிரெண்டனும் அயர்லாந்து அணிக்காக 52 போட்டியில் ஆடியிருக்கிறாராம். அயர்லாந்தின் இந்த வெற்றி கத்துக்குட்டி அணிகள் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

நெதர்லாந்துடன் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்திய 24 மணி நேரத்துக்குள்ளாகவே 2011 உலக கோப்பையில் 2வது ஹாட்ரிக் பதிவாகிவிட்டது. இலங்கையின் மலிங்கா புயல் தாக்கியதில் கென்யா கூடாரம் தரைமட்டமானது. கனடா அணியிடம் 184 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தானை, அதிர்ச்சி தோல்வியில் இருந்து காப்பாற்றினார் கேப்டன் அப்ரிடி. விக்கெட் வேட்டையில் அவர்தான் லீடிங். சூதாட்ட சர்ச்சையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன், ஹாடின், இலங்கையின் ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோர் பெயர் அடிபட, ’அப்பாடி… எங்க பிளேயர்ஸ் மேல எந்த கம்ப்ளெயிண்டும் இல்ல’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ். ஏ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி ஆட்டத்தை இலங்கை அல்லது வங்கதேசத்தில் ஆட வேண்டும் என்று கணக்கு போடுகிறார் அப்ரிடி. இந்தியாவில் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது என்பதுதான் காரணம். ’கால் இறுதி நாக் அவுட் போட்டி என்பதால் அப்ரிடியின் ஆசை நியாயமானதே. அரை இறுதி, பைனலை இந்தியாவில் ஆடுவது பிரச்னையாக இருக்காது. அதற்குள் பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக செட்டிலாகி இருப்பார்கள்’ என்று சப்போர்ட் செய்கிறார் அக்ரம். அவர்கள் கவலை அவர்களுக்கு. டோனி கோப்பையை தூக்கி முத்தமிடும் வரை நமக்கு தூக்கம் வராது.

பா.சங்கர் 


(குங்குமம் இதழில் வெளியானது) 

வியாழன், 3 மார்ச், 2011

களை கட்டுது 2வது ரவுண்டு

எல்லா அணிகளும் தலா ஒரு லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்த நிலையில் 2வது ரவுண்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. கத்துக்குட்டிகளிடம் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் கால் இறுதி வாய்ப்பு காலை வாரிவிடும் என்பதால், பெரிய அணிகள் கையைப் பிசைந்து கொண்டுள்ளன.
சேப்பாக்கத்தில் நியூசிலாந்து & கென்யா மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம். சாவகாசமாகப் போய் 2வது பாதி ஆட்டத்தை ரசிக்கலாம் என்று திட்டமிட்டவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. பலர் ஸ்டேடியம் வாசலை மிதிப்பதற்குள்ளாகவே போட்டி முடிந்துவிட்டது. கென்யா வெறும் 69 ரன்னில் சுருள, நியூசிலாந்து ஓபனர்கள் 8 ஓவரில் கதையை முடித்துவிட்டார்கள். டி20 மாதிரி ஆடியிருந்தால் கூட கென்யா இதை விட பெரிய ஸ்கோர் அடித்திருக்கலாம். ஆழ்வார்பேட்டை அணியை இறக்கியிருந்தால் கூட அமர்க்களப்படுத்தி இருப்பார்கள் என்று அங்கலாய்த்தார் ஒரு சென்னை ரசிகர்.




பளபளவென ஜொலித்த ஸ்டேடியத்தில் ஐந்தாயிரம் ரசிகர்களுக்கும் குறைவாகத்தான் வந்திருந்தார்கள். எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று முதல் நாளே ஹவுஸ் புல் போட்ட நிலையில், ஸ்டேடியம் வெறிச்சோடியது வெறுப்பேற்றியது. பெரும்பாலான டிக்கெட்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் சங்கம், கிளப் உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள்... என்று கோட்டா சிஸ்டத்தில் ஒதுக்கப்படுவதால் வந்த வினை இது. இப்படி ஒதுக்கப்படும் டிக்கெட்டுகளும் ஒழுங்காக விநியோகிக்கப் படுவதில்லை. 
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள பைனலுக்கு, இப்படி ஒதுக்கீடு எல்லாம் போக வெறும் நாலாயிரம் டிக்கெட் மட்டுமே அப்பாவி ரசிகர்களுக்கு போனால் போகிறது என்று ஒதுக்கி இருக்கிறார்கள். அதிலும் ஆயிரம் டிக்கெட் ஆன்லைனில் விற்கப்படும் என்று அலட்டல் அறிவிப்பு வேறு. ஒரே நேரத்தில் ஒரு கோடி ரசிகர்கள் மொய்த்ததில் கியாசூங்கா.காம் இணையதளம் முடங்கிப் போனது. பெங்களூரில் இந்தியா & இங்கிலாந்து லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததில் ஒரே களேபரம். போலீசார் தடியடி நடத்தும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். இப்படி வெறித்தனமான ரசிகர்களுக்கு அதிக டிக்கெட்டுகளை ஒதுக்காமல், கிளப்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் மூட்டை கட்டி அனுப்புவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு வேறு மாதிரி பிரச்னை. இந்தியா விளையாடுவதாக இருந்த ஒரே போட்டியையும் பெங்களூருக்கு பைபாஸ் செய்துவிட்டதால் ரசிகர்கள் செம மூட் அவுட். மற்ற அணிகள் ஆடும் ஆட்டத்தை பார்க்க ஆயிரக் கணக்கில் அழ அவர்கள் தயாராக இல்லை. ரூ.750க்கு மேல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம். இந்த டிக்கெட் விஷயத்தில் ஐசிசி ஏதாவது நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம். 
கென்யாவை தொடர்ந்து கனடாவும் பரிதாபமாக மண்ணைக் கவ்வியதால், அடுத்த உலக கோப்பையில் கத்துக்குட்டி அணிகளுக்கு கல்தா கொடுப்பது என்ற ஐசிசி முடிவுக்கு ஆதரவு அதிகரித்தது. ஒரு சிலர் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறார்கள். இங்கிலாந்து அணிக்கு நெதர்லாந்து தண்ணி காட்டியதைப் பார்த்தபோது அதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. அந்த அணியின் டென் டஸ்சேட் ஆல்ரவுண்டராக அமர்க்களப் படுத்தினார். ஐபிஎல் போட்டி ஏலத்தில் இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகையை விட 3 மடங்கு அதிகமாக கொடுத்து (சுமார் ரூ.70 லட்சம்) கொல்கத்தா அணி வாங்கியதை நியாயப்படுத்தி இருக்கிறார். கனடாவின் ரிஸ்வான் சீமாவும் தனது அதிரடியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இவருக்கும் ஐபிஎல் டி20ல் பிரகாசமாக எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்தி நடிகை மிங்க் சிங் தனது முதுகில் அழகாய் ஓவியம் தீட்டிக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை விழி பிதுங்க வைத்தார். உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது, தங்கள் அணி கோப்பையை வென்றால் தலைநகர வீதிகளில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து பராகுவே மாடல் அழகி லரிஸா ரிகுல்மே பரபரப்பூட்டியது ஞாபகம் வருகிறது. இந்தியா ஜெயித்தால் இப்படி ஓடுவதாக யாராவது அறிவித்திருக்கிறார்களா? என்று ஜொள் ரசிகர்கள் ஆவலோடு விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. 
ரன் அவுட் ஆன ஆத்திரத்தில் ஆஸி. கேப்டன் பான்டிங் டிவியை அடித்து நொறுக்கியது லேசான சலசலப்பூட்டியது. மற்றபடி பெரிய அளவில் சர்ச்சை எதுவும் கிளம்பாதது ஆறுதலான விஷயம். இந்திய அணி ஆட்டங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அம்சம். இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்துவிட்ட நிலையில் எல்லா அணிகளும் இப்போதே புள்ளிப் பட்டியல், ரன் ரேட் என்று கணக்கு போடத் தொடங்கிவிட்டன. கோப்பை சூடுபிடித்துள்ளதால், அடுத்த வாரத்தில் இருந்து அனல் பறக்கும்.

பா.சங்கர்

(குங்குமம் இதழில் வெளியானது)

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

போட்டுத் தாக்குது டோனி & கோ…


திருஷ்டி சுத்தி போடுங்கய்யா!

அசத்தலான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோ, வாணவேடிக்கை என்று வங்கதேச தலைநகர் தாக்காவில் உலக கோப்பை தொடக்க விழா அமர்க்களப் படுத்திவிட்டது. கேப்டன்களின் ரிக்‌ஷா பவனி செம ரகளை. சோனு நிகம், பிரையன் ஆடம்ஸ், ஷங்கர் மகாதேவன் இசை மழை அட்டகாசம். இனி கவனம் எல்லாம் ஆட்டத்தில் மட்டுமே.
இந்த முறை கோப்பை யாருக்கு? என்ற கேள்விக்கு, எல்லா கருத்து கணிப்புசாமி!களும் இந்தியாவை கை காட்டி இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் உதறலும் இருக்கத்தான் செய்கிறது. ஓவர் கான்பிடன்ஸ் கவிழ்த்துவிடக் கூடாதே என்ற கவலைதான்.
பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை பதம் பார்த்ததுமே இந்திய அணியின் ரேட்டிங் டபுளாகிவிட்டது. பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் அசத்த, சேப்பாக்கத்தில் நியூசிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். சச்சின், சேவக், பதான் கணிசமாக ரன் அடிக்காமலேயே ஸ்கோர் 350ஐ தாண்டியதில் எல்லா அணிகளுமே அரண்டு போய்விட்டன. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுமே கிளிக் ஆனதில் பரம திருப்தி.
ரொம்ப நாளைக்குப் பிறகு கேப்டன் டோனி தனது அதிரடி ஆட்டத்தை ரீவைண்ட் செய்து நடுவரிசைக்கு வலு சேர்த்திருக்கிறார். பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது யாரை கழட்டி விடுவது என்பதுதான் டோனிக்கு ஒற்றை தலைவலி. இதில் ரெய்னாவை ஓவர்டேக் செய்திருக்கிறார் கோஹ்லி. தலா 2 வேகம், 2 சுழல் ஸ்பெஷலிஸ்டுகளுடன் யுவா, பதான், சேவக், சச்சினை வைத்து எஞ்சிய 10 ஓவர்களை சமாளித்து விடலாம் என்பதால் டோனி உற்சாகமாக இருக்கிறார்.
நம்ம அஷ்வின் ஆல்-ரவுண்டராக அசத்துவதால் டோனிக்கு அவர் மீது அலாதி பிரியம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கவும் தயார் எனத் தெரிகிறது. போட்டுத் தாக்கத் தொடங்கியிருக்கும் டோனி & கோவுக்கு இப்போதே திருஷ்டி சுற்றிப் போடுவது நல்லது. லீக் சுற்றில் கொஞ்சம் சறுக்கினாலும் சுதாரித்துக் கொள்ள ஏராளமான வாய்ப்பு இருப்பதால் பெரிய அணிகள் ரிலாக்சாக இருக்கின்றன. கற்றுக் குட்டிகளிடம் உதை வாங்காமல் சமாளித்துவிட்டாலே கால் இறுதி உறுதி.
வழக்கம் போல எக்கச்சக்கமான சாதனைகள் சச்சினைத் துரத்துகின்றன. படித்துக் கொண்டிருக்கும் போதே, உலக கோப்பையில் அதிக சதம், 2000 பிளஸ் ரன் குவிப்பு என்று செய்தி பிளாஷ் ஆகும் வாய்ப்பு அதிகம். இந்திய அணியை பொருத்தவரை பேஸ்மெண்ட் செம ஸ்ட்ராங்! பில்டிங்கையும் அப்படியே எழுப்பிவிட்டால் கோப்பையில் பால் காய்ச்சி விடலாம்.
- பா.சங்கர்
(குங்குமம் இதழில் வெளியானது)

ஆடுகளம் தயார்


சிலிர்க்கும் சண்டைக் கோழிகள்

உலக கோப்பை கிரிக்கெட்எக்கச்சக்க பில்டப்பில் ரசிகர்கள் இப்போதே டென்ஷனாகிக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சி ஆட்டங்களுக்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. போதாக் குறைக்கு, இந்த முறை கோப்பை இந்தியாவுக்குத்தான் என்று ஆளாளுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கணிப்பு பலிப்பதற்கான வாய்ப்பும் அதிகம்தான்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக் கொடி கட்டிய 1975ல் இருந்து இதுவரை 9 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 4, வெஸ்ட் இண்டீஸ் 2, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறை கோப்பையை முத்தமிட்டுள்ளன. பத்தாவது உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. தீவிரவாத அச்சுறுத்தலால் பாகிஸ்தான் கழட்டிவிடப்பட்டது.
வெள்ளை சீருடை, 60 ஓவர், சிவப்பு பந்து என்று தொடங்கிய போட்டி, பல மாற்றங்களை சந்தித்துவிட்டது. வண்ண சீருடை, 50 ஓவர், வெள்ளைப் பந்து, பவர் பிளேயுடன் இந்த கோப்பையில் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் ‘யுடிஆர்எஸ்’ முறையும் ஆட்டம் சரிசமனில் முடிந்தால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவரும் அறிமுகமாகிறது. கடந்த உலக கோப்பையில் (வெஸ்ட் இண்டீஸ், 2007) இந்தியா தொடக்க சுற்றிலேயே மண்ணைக் கவ்வியதால் சுவாரசிய பலூன் காற்று இறங்கி தொங்கிப் போனது. சுதாரித்துக் கொண்ட ஐசிசி இம்முறை உஷாராக லீக் சுற்றை வடிவமைத்திருக்கிறது.
மொத்தம் 14 அணிகள் இரண்டு பிரிவாக களத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 6 அணிகளுடன் லீக் சுற்றில் மோத வேண்டும். இரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறு. சூப்பர் 8, சூப்பர் 6 என்று தலையை சுற்றாமல் ஸ்ட்ரெய்ட்டாக கால் இறுதி, அரை இறுதி, பைனல் என்று கனகச்சிதம். டாப் அணிகள் கால் இறுதிவரை முன்னேறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். வங்கதேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளிடம் சர்வ ஜாக்கிரதையாக விளையாட வேண்டியது அவசியம். கொஞ்சம் அசந்தாலும் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த உலக கோப்பையில் வங்கதேசத்திடம் உதை வாங்கிய இந்திய அணி, இந்த முறையும் தொடக்க ஆட்டத்திலேயே அந்த அணியுடன் மோதுகிறது. சமீபத்தில் நியூசிலாந்தை புரட்டி எடுத்த வங்கதேசம், சொந்த மண்ணில் விளையாடும் தெம்பில் சிலுப்பிக் கொண்டு நிற்கிறது. கொஞ்சம் கூட அசராமல் அடித்து பழிதீர்ப்போம் என்கிறார் அதிரடி வீரரும் இந்திய அணியின் துணை கேப்டனுமான சேவக்.
எல்லா சாதனைகளையும் ஒரு கை பார்த்துவிட்ட சச்சினுக்கு இது 6வது உலக கோப்பை. ரன் குவிப்பு, சதம், அரைசதம் என எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்கும் சச்சினுக்கு கோப்பையை தூக்கிக் கொண்டாடும் பாக்கியம் மட்டுமே குறையாக இருக்கிறது. அவருக்காகவாவது இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்று மற்ற 14 வீரர்களும் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார்கள். பேப்பரில் மிரட்டலாக இருக்கும் பேட்டிங் வரிசை களத்திலும் ஒர்க் அவுட்டானால், இந்த இந்திய அணியை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.
காயம்…உடல்தகுதி… எல்லா அணிகளுக்குமே இதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கடைசி நேரத்தில் பிரவீன் குமார் விலகிக் கொள்ள, ‘இதயமே நொறுங்கிவிட்டது’ என்று புலம்பிக் கொண்டிருந்த ஸ்ரீசாந்துக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு. கேப்டன் டோனியின் முக்கியமான துருப்புச் சீட்டு யூசுப் பதான். இவர் 5 ஓவர் களத்தில் நின்றால் கூட போதும், ஆட்டம் ஓவர்! இந்தியா வெற்றி என்று அடித்துச் சொல்லிவிடலாம்.
கபில் தேவின் 175, சேத்தன் சர்மா ஹாட்ரிக், கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர் என்று சென்சேஷனல் அமர்க்களங்கள் அணிவகுத்தால் ரசிகர்களின் ஜுர வேகம் தெர்மாமீட்டரை பதம் பார்க்கும். இந்த பிரிவுக்கான பட்டியலில் சேவக், பதான், கிறிஸ் கேல், ஷேன் வாட்சன், அப்ரிடி, பீட்டர்சன், தில்ஷன், பிராங்க்ளின், ஹர்பஜன்!... பெயர்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சரியப்படாமல் இருக்கலாம்.
உலக கோப்பைக்காக பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானம் பளபளக்கிறது. சென்னைக்கு நான்கு போட்டிகள். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் லீக் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் நடக்க உள்ள அந்த போட்டிக்கு (மார்ச் 20) முன்பே இந்தியா கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்வு நேரத்தில் போட்டிகள் நடப்பது பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். மாணவர்களே… ஸ்கோர் மட்டும் கேட்டுக்கோங்க. வெற்றி நமதே!
பா.சங்கர்
(குங்குமம் இதழில் வெளியானது)


சனி, 22 ஜனவரி, 2011

தாதா வீரர்களுக்கு கல்தா


சாதா வீரர்களுக்கு அள்ளித் தா! 
அதிர வைத்த ஐபிஎல் பார்முலா

இந்தியன் பிரிமியர் லீக் டி20 நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூரில் ஏகத்துக்கு சூடு கிளப்பியது. அணி உரிமையாளர்கள் விஜய் மல்லையா, நீதா அம்பானி, ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா என்று பிரபலங்கள் குவிய மீடியா பரபரத்தது.
மொத்தம் 350 வீரர்கள்… இரண்டு ரவுண்டு. தொடக்க வீரர் கவுதம் கம்பீருக்கு ஏக கிராக்கி. கடும் போட்டிக்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11.4 கோடிக்கு கம்பீரை வாங்கியது. யூசுப் பதான், உத்தப்பாவுக்கு தலா 9.66 கோடி!
கங்குலி, லாரா, ஜெயசூரியா, கிறிஸ் கேல்… 1.8 கோடி ஒருதரம்… 1.8 கோடி ஒருதரம்… ஏலம் நடந்த அரங்கில் மயான அமைதி; ஒருத்தரும் வாயை திறக்கவில்லை. பெயரைக் கேட்டாலே அதிருதில்ல வகை வீரர்களை சீண்ட ஆளில்லை. என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை.
சவுரவ் திவாரி, இர்பான் பதான், அஷ்வின், பத்ரிநாத், தினேஷ் கார்த்திக்… இளம் இந்திய வீரர்களை கொஞ்சம் கூட தயங்காமல் கோடிகளைக் கொட்டி அள்ளினார்கள் அணி உரிமையாளர்கள். டேனியல் கிறிஸ்டியன்… யாரோ ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டராம்! ஐதராபாத் அணி 4.14 கோடிக்கு ஏலம் எடுக்க, நமக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
4.14 கோடியா? எனக்கே எனக்கா! என்று டேனியல் ஆனந்த அதிர்ச்சியில் மூர்ச்சை போட்டுவிட்டாராம். பெய்லி, பிளெஸ்ஸி என்று நாக்கு சுளுக்கிக் கொள்ளும் பெயர்களை எல்லாம் பரபரப்பாக வாங்கிய அணிகள் நியூசி. ஆல்-ரவுண்டர் ரைடர், முகமது கைப் போன்றவர்கள் மறு ஏலம் விடப்பட்டபோது தயங்கித் தயங்கி வாங்கின. வேணுகோபால் ராவுக்கு 3.22 கோடி!
கடந்த சீசனில் வெறும் 18 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சவுரவ் திவாரிக்கு இந்த முறை கிடைத்தது 7.6 கோடி! கங்குலியை கழட்டி விடலாம் என்று கணக்கு போட்ட ஷாருக்கான், ஆப்பு அசைத்த குரங்காய் அல்லாடிக் கொண்டிருக்கிறார். கொதித்துப் போன கொல்கத்தா ரசிகர்கள் கொடி பிடிக்க, ‘கங்குலி இல்லாமல் கொல்கத்தா அணி இல்லை. நாடு திரும்பியதும் அவருடன் இது பற்றி பேசுவேன்’ என்று ஷாருக் ஜகா வாங்கி இருக்கிறார். ஆலோசகர், நிர்வாகி என்று இறங்கி வர கங்குலிக்கு விருப்பம் இல்லை. களமிறங்க அனுமதித்தால் மட்டுமே வெள்ளைக் கொடி என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட சச்சின், டோனி, சேவக்குக்கு தலா 8.1 கோடிதான் பேசப்பட்டிருந்தது. கம்பீருக்கே 11.04 கோடி என்றால் எங்களுக்கு? என்று இந்த வீரர்கள் கேட்டால் நியாயம் தானே! அதை விட அதிகமாகவே தருகிறோம் என்று இவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏலம் முடிந்து அணிகள் பற்றிய நிலை இப்போதுதான் மெல்ல தெளிவாக ஆரம்பித்திருக்கிறது. நிறைய தலைகள் அங்கும் இங்குமாக மாறி இருப்பதால் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் லெவன் கேப்டனாக கில்கிறிஸ்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. முரளிதரன் இல்லாதது நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய இழப்புதான். இம்முறை கொச்சி அணிக்காக கையை சுழற்ற உள்ளார் முரளி.
கடந்த பைனல்சில் விளையாடிய வீரர்களில் 10 பேர் அணியில் நீடிப்பதால் சிஎஸ்கே உற்சாகமாகவே உள்ளது. ஹில்பென்ஹாஸ், பிராவோ, ரந்திவ் வரவும் பலத்தை அதிகரித்துள்ளது. அடுத்து சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் முழுமையான அணியாக தோன்றுகிறது. சர்ச்சை வீரர்கள் ஹர்பஜனும், ஆண்ட்ரூ சைமண்ட்சும் ஒரே அணியில் விளையாட இருப்பது ஆச்சரியமான விஷயம். தென் ஆப்ரிக்காவின் டேவிட் ஜேக்கப்ஸ், நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்க்ளின் அதிரடி மும்பைக்கு கூடுதல் பலம் சேர்க்கும். டி20ல் காலி பெருங்காய டப்பாக்களுக்கு இடமில்லை, பெர்பார்மன்ஸ்தான் முக்கியம் என்று அணி உரிமையாளர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதால், கோடிக் கணக்கில் விலை போயுள்ள வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள் என்று நம்பலாம். இல்லை என்றால் அடுத்த சீசனில் காணாமல் போய் விடுவோம் என்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். ஏலத்தின் சூடு ஆட்டத்திலும் எதிரொலித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

பா.சங்கர் 

(குங்குமம் இதழில் வெளியானது)

பயஸ் – பூபதி கொடுத்த டபுள்ஸ் ட்ரீட்


வாவ்… ஒரே டிக்கெட்டில் ரஜினியின் 2 சூப்பர் ஹிட் படம் பார்த்த மகிழ்ச்சியும் திருப்தியும் சென்னை ஓபனில் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி ஜோடி பைனலுக்கு முன்னேறியதுமே ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் றெக்கை கட்டிக் கொண்டது.
ஜன.9 சென்னை ஓபனில் கடைசி நாள். பயஸ் – பூபதியின் டபுள் ட்ரீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் குவிந்ததால் நுங்கம்பாக்கம் ஸ்டேடியம் திக்குமுக்காடியது. முதலில் ஒற்றையர் பைனல்ஸ். சுவிஸ் வீரர் வாவ்ரின்காவும் நெதர்லாந்தின் சேவியர் மலிஸேவும் மல்லுகட்டினார்கள். கடந்த ஆண்டு பைனலில் மரின் சிலிக்கிடம் விட்டதை பிடித்துவிட வேண்டும் என்ற வெறியோடு விளையாடிய வாவ்ரின்கா புதிய சாம்பியனாகி கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.
அடுத்து நாம் ஆவலோடு எதிர்பார்த்த பரபர கிளைமாக்ஸ். பயஸ் – பூபதி இரட்டைக் குழல் துப்பாக்கியாக படபடக்க, ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) – டேவிட் மார்ட்டின் (அமெரிக்கா) ஜோடி முதல் செட்டில் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அடுத்த செட்டிலும் நம்மவர்கள் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று நினைத்தால், கதை டிராக் மாறியது. விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இரண்டு ஜோடியும் போராடியதால் ரசிகர்கள் இருக்கை நுனியில்.
டை-பிரேக்கரில் ராபின் – மார்டின் கை ஓங்கி 2வது செட்டை கைப்பற்ற சமநிலை. மூன்றாவது செட் சூப்பர் டை-பிரேக்கர்… உனக்கா எனக்கா என்று டக் ஆப் வாராக இரண்டு ஜோடியும் தம் கட்டி இழுக்க… ரசிகர்கள் மூச்சு விடவும் மறந்தனர். ஒரு வழியாக 10-7 என்ற கணக்கில் பயஸ் – பூபதி வென்று துள்ளிக் குதித்து மார்போடு மார்பை மோதி தங்கள் டிரேட் மார்க் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியபோது ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
சச்சின் – கங்குலி, பாரதிராஜா – இளையராஜா இப்படி நமக்கு பிடிச்ச கூட்டணியிடம் இருந்து வரும் மாஸ்டர் பீஸ் என்னைக்குமே சலிக்காது இல்லையா. 1997ல் இருந்து 2002 வரை இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய பயஸ் – பூபதி பிரிந்தபோது வருத்தப்படாத இந்திய ரசிகர்களே இருக்க முடியாது. அதன் பிறகு நாட்டுக்காக மட்டும் சேர்ந்து விளையாடி வந்தவர்கள், ஈகோ கிளாஷை ஒதுக்கிவிட்டு புரொபஷனல் போட்டிகளில் மீண்டும் சேர்ந்து விளையாடுவது என்று முடிவு செய்ததுமே, 2வது இன்னிங்சை சென்னையில்தான் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இருவருக்குமான சென்னை கனெக்‌ஷன் அவ்வளவு ஸ்ட்ராங். கொல்கத்தாவில் பிறந்த பயஸ், சென்னை கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை இந்த ஜோடி 5வது முறையாக வென்றதில் அவர்களை விட ரசிகர்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி.
’ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து சென்னை ஓபன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு இங்கு டேவிஸ் கோப்பை போட்டியிலும் வென்றோம். சென்னை ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் எங்களால் மறக்கவே முடியாது’ என்று நெகிழ்ந்தார் பயஸ். அதை அப்படியே வழிமொழிந்தார் பூபதி.

பா.சங்கர்

(குங்குமம் இதழில் வெளியானது)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு பொங்கல்/புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொங்கலையொட்டி, தினகரன் அலுவலக ஊழியர்களிடையே துறை சார்ந்த கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மைதானமே கதி என்று விளையாடிக் கொண்டிருந்த  நாட்கள் மனதில் மின்னல் அடிக்க, ஆர்வக் கோளாறில் உற்சாகமாய் பங்கேற்றோம்.
அரை இறுதியில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் ஆட்டத் திறமை அடியோடு காணாமல் போகாமல், ஓரளவு சிறப்பாகவே விளையாட முடிந்ததில் மகிழ்ச்சியும் திருப்தியும் மனதில் அலையடித்தது.
அலுவலக உதவியாளர்கள் அணி...முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளம்! துடிப்புடன் விளையாடி சன் குழும கோப்பையுடன் முதல் பரிசாய் ரூ.30 ஆயிரம் தட்டிச் சென்றது. மறுநாள்தான் பிரச்னையே ஆரம்பம். அலுவலகம்... கம்ப்யூட்டரில் லொட் லொட்...வீடு...டிவி, லேப்டாப்...உடற்பயிற்சிக்கு நேரமே ஒதுக்காமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென களத்தில் இறங்கி அலட்டிக் கொண்டதில் அங்கங்கே தசைப்பிடிப்பு. நடக்க முடியவில்லை...உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. ஒருவழியாய் பொங்கல் பூஜையை முடித்து, அப்படியே படுத்துக் கிடந்தேன்.
மாலை 5 மணிக்கு பூங்காவில் சென்னை சங்கமம். நாட்டுப்புறக் கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள்...காணத் தவறாதீர்கள் என்று ஒலிபெருக்கியில்  அலறிக் கொண்டிருந்தார்கள்.

கால் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல இறங்கிச் சென்றேன். கரகாட்டம், கொக்காலிக்கட்டை (கால்களில் கட்டைகளைக் கட்டி உயரத்தை அதிகரித்துக் கொண்டு செய்யும் சாகசம்), பறையாட்டம் என்று அமர்க்களப்படுத்தினார்கள். குழந்தைகளும் பெரியவர்களுமாய் திரண்டு கண்டு களித்ததைப் பார்க்க பரவசமாக இருந்தது.



சனி, 1 ஜனவரி, 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. கடந்த ஆண்டின் கடைசி நாளான நேற்று ஆன்மிகக் கவிஞரும் பாடகருமான திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த மாதம் 25ம் தேதி 93வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள இவர், கன்னியாகுமரியில் இருந்து கைலாயம் வரை (14,000 கி.மீ.) இரண்டு முறை பாதயாத்திரை சென்றிருக்கிறார்.
*  7 வயதில் பழநி மலைக் குகையில் யோகா பயிற்சி.
* 11 வயதில் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம்.
* ஓட்டலில் சர்வர் வேலை.
* 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி பா(ர)த யாத்திரை.
*  ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்து மறியல் செய்து, தடியடி வாங்கி,மீண்டும் 6 மாத சிறை.
* முருக பக்தராய், கவிஞராய், பாடகராய் உலகப் புகழ்.
* தென் ஆப்ரிக்காவில் அதிபர் நெல்சன் மண்டேலா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி, அவரது பாராட்டுதல்களைப் பெற்றது.
இப்படி ஏராளமான சுவையான தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

அவரது வாழ்க்கைப் பயணத்தின் அத்தனை சுவடுகளையும் இணையதளத்தில் விரிவாகப் பதிக்கும் முயற்சியில் லஷ்மண் ஸ்ருதி முனைப்புடன் இறங்கியிருக்கிறது. அந்தாதி வடிவிலான சுயசரிதை, எழுதிய பிற புத்தகங்கள், பாடல்கள், புகைப்படங்கள், வீடியோ... என்று தொகுப்பதற்கு ஏராளமாய் இருக்கிறது. பக்கங்கள் தயாரானதும் பரிமாறிக் கொள்வோம்.

பா.சங்கர்