ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு பொங்கல்/புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொங்கலையொட்டி, தினகரன் அலுவலக ஊழியர்களிடையே துறை சார்ந்த கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மைதானமே கதி என்று விளையாடிக் கொண்டிருந்த  நாட்கள் மனதில் மின்னல் அடிக்க, ஆர்வக் கோளாறில் உற்சாகமாய் பங்கேற்றோம்.
அரை இறுதியில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் ஆட்டத் திறமை அடியோடு காணாமல் போகாமல், ஓரளவு சிறப்பாகவே விளையாட முடிந்ததில் மகிழ்ச்சியும் திருப்தியும் மனதில் அலையடித்தது.
அலுவலக உதவியாளர்கள் அணி...முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளம்! துடிப்புடன் விளையாடி சன் குழும கோப்பையுடன் முதல் பரிசாய் ரூ.30 ஆயிரம் தட்டிச் சென்றது. மறுநாள்தான் பிரச்னையே ஆரம்பம். அலுவலகம்... கம்ப்யூட்டரில் லொட் லொட்...வீடு...டிவி, லேப்டாப்...உடற்பயிற்சிக்கு நேரமே ஒதுக்காமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென களத்தில் இறங்கி அலட்டிக் கொண்டதில் அங்கங்கே தசைப்பிடிப்பு. நடக்க முடியவில்லை...உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. ஒருவழியாய் பொங்கல் பூஜையை முடித்து, அப்படியே படுத்துக் கிடந்தேன்.
மாலை 5 மணிக்கு பூங்காவில் சென்னை சங்கமம். நாட்டுப்புறக் கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள்...காணத் தவறாதீர்கள் என்று ஒலிபெருக்கியில்  அலறிக் கொண்டிருந்தார்கள்.

கால் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல இறங்கிச் சென்றேன். கரகாட்டம், கொக்காலிக்கட்டை (கால்களில் கட்டைகளைக் கட்டி உயரத்தை அதிகரித்துக் கொண்டு செய்யும் சாகசம்), பறையாட்டம் என்று அமர்க்களப்படுத்தினார்கள். குழந்தைகளும் பெரியவர்களுமாய் திரண்டு கண்டு களித்ததைப் பார்க்க பரவசமாக இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக