ஞாயிறு, 29 மே, 2016

சுவாரசியமான ஆட்டம்

உலக கோப்பை டி20 தொடர் எதிர்பார்த்ததை விடவும் சுவாரசியமாகவே தொடங்கி இருக்கிறது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட இந்திய அணி, முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வியதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வலுவான சுழல் கூட்டணியை அமைத்த நியூசிலாந்து அணியின் வியூகமும், அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நெருக்கடியும் இந்திய பேட்ஸ்மேன்களை சரணடைய வைத்துவிட்டன. இருபது ஓவர் போட்டிகளில் நியூசிலாந்தை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை நமது வீரர்களால் மாற்றி எழுத முடியாததில் ரசிகர்களுக்கு தான் பெருத்த ஏமாற்றம்.இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் விளாசிய சதம் சரியான விருந்து. டி20 உலக கோப்பையில் அதிவேக சதம், 2 சதம் அடித்த முதல் வீரர், அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் என்று பல சாதனைகள் அவரது வசமாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமும் அவருக்கு கை கொடுக்கிறது. இந்திய ஆடுகளங்களின் தன்மையை நன்றாக அறிந்தவர் என்பதால், இவரது அதிரடியை கட்டுப்படுத்துவது எந்த அணிக்கும் மிகப் பெரிய சவால் தான்.தென் ஆப்ரிக்கா நிர்ணயித்த 230 ரன் கடின இலக்கை இங்கிலாந்து விரட்டிப் பிடித்த சாகசமும் ரசிகர்களை அதிசயிக்க வைத்தது. வெற்றிகரமான சேசிங், ஒரே போட்டியில் 459 ரன் குவிப்பு என்று சாதனைகளின் அணிவகுப்புக்கு பஞ்சமே இல்லை. இவையெல்லாவற்றையும் விட, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்துக்கு தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பு. உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற புள்ளி விவரம் இந்திய அணிக்கு உற்சாகம் அளிக்க, கொல்கத்தா மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகள் அனைத்திலும் வெற்றி என்ற புள்ளி விவரம் பாகிஸ்தான் தரப்புக்கு உத்வேகமாக அமைந்தது. போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்க இது போன்ற மோதல்கள் அவசியம். வெற்றி, தோல்வி என்பதையும் தாண்டி, திறமை வெளிப்பாட்டின் உச்சம் தரும் அந்த சுவாரசியத்துக்கு ஈடு இணை இல்லை. உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் இதை விடவும் சூடான, சுவையான விருந்தாக அமையட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக