சனி, 26 மே, 2012

கரீபிய சிக்சாசுரன்!


ஐபிஎல் சீசன் 5 இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ரைடர்சும் டெவில்சும் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில்… சார்ஜர்ஸ்,  வாரியர்ஸ் மூட்டை கட்ட தயாராகிவிட்டார்கள். மற்ற இரண்டு இடங்களுக்குத்தான் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. ஐந்து அணிகள் அடித்துக் கொள்வதால் ஒரே களேபரம்.
மும்பை இந்தியன்சுடன் வாங்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே ஆட்டம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. கடைசி 3 பந்தில் 14 ரன் தேவை என்பதால் சென்னை ரசிகர்கள் தெம்பாக இருந்தார்கள். ஹில்பென்ஹாஸ் ‘எப்படி யார்க்கர் போடுகிறேன் என்று மட்டும் பாருங்க’ என்று அலட்டலாகப் போட வேய்ன் ஸ்மித் சிக்சர், பவுண்டரி, பவுண்டரி என்று அசால்ட்டாகத் தூக்கி வெற்றியைத் தட்டிப் பறித்தார்.  
நம்ப முடியாத அசாத்தியமான விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் செய்து காட்டிய ஸ்மித், ‘சிங்கிள் எடுத்து எங்கிட்ட ஸ்டிரைக் கொடுங்க மத்தத நான் பாத்துக்கிறேன் என்று ஆர்.பி.சிங்கிடம் சொன்னேன். வாய்ப்பு கிடைத்தால் மூன்று பந்தையும் விளாச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது’ என்று ஏதோ அல்வா சாப்பிட்ட மாதிரி சொன்னார். மிச்சம் மீதி இருக்கிற எல்லா ஆட்டத்திலும் ஜெயித்தால்தான் பிளே ஆப் வாய்ப்பு என்ற நெருக்கடியில் சிஎஸ்கே விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டி முடிந்த சில மணி நேரத்தில், பெங்களூரில் ஒரு கொல வெறி அரங்கேறியது. கடைசி 3 ஓவரில் 39 ரன் தேவை… சேலஞ்சர்ஸ் கதை கந்தல் என்று 99.00 சதவீதம் பேர் பெட் கட்டத் தயாராக இருந்தார்கள். ஸ்டார் பவுலர் ஸ்டெயினை விரட்டி விரட்டி அடித்தார் டிவில்லியர்ஸ். அடுத்து வந்த ஆனந்த ராஜனும் அவரது ஆக்ரோஷத்துக்கு முன் நொந்த ராஜன் ஆனார். இப்படியா அடிப்பார்கள்? வில்லியர்ஸ் விளையாட்டாய் விளாசியது 17 பந்தில் 47 ரன் மட்டுமே! கடைசி 3 ஓவரை போடச் சொல்லக் கூடாது என்று ஒப்பந்தத்திலேயே எழுதி வாங்கிக்கலாமா என்று சில பவுலர்கள் யோசிப்பதாகக் கேள்வி.
நைட் ரைடர்சுக்கு எதிராக ஈடன் கார்டனில், கங்குலியின் வாரியர்ஸ் களமிறங்கிய போட்டியில் கொல்கத்தா இரண்டுபட்டது! எதிர்பார்த்ததற்கும் மேலாகவே விறுவிறுப்பாக இருந்த போட்டியில் கம்பீர் அணி கம்பீரமாக வெற்றி பெற்றாலும், கங்குலியின் போராட்டம் ரசிகர்களைக் கொள்ளை அடித்தது. ரைடர்ஸ் ஓனர் ஷாருக் கானும் கங்குலியை கட்டியணைத்து பாராட்டி பழைய கசப்பான மெமரியை டெலீட் செய்தார்.
ஆட்டத்துக்கு ஆட்டம் கிறிஸ் கேல் அட்டகாசம் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்சை அப்படியே சாப்பிட்டார் இந்த கரீபிய சிக்சாசுரன்! 5வது சீசனில் 500 ரன் கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் சேவக் வசமிருந்த ஆரஞ்சு தொப்பியையும் அபகரித்தார். சேலஞ்சர்சின் வெற்றிக்குப் பின்னால் கேப்டன் வெட்டோரியின் தியாகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பார்மில் உள்ள முரளிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பெஞ்ச்சில் உட்கார முன்வந்த அவரது பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது.
வாட்சன், டெய்ட் வாய்த்த மகிழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்சை கையில் பிடிக்க முடியவில்லை. ஏற்கனவே ரஹானே, டிராவிட், ஷா என்று மிரட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வாட்சனின் ஆல் ரவுண்ட் ஆட்டம் வரப்பிரசாதமாகிவிட்டது. ‘பாயின்ட்ஸ் டேபிள பாக்காதீங்க, ஆட்டத்துல மட்டும் கவனம் வைத்தால் போதும்’ என்பதே ராயல்ஸ் வீரர்களுக்கு கேப்டன் டிராவிட் வழங்கும் மந்திர ஆலோசனை. சூப்பர் கிங்சுக்கும் இது ஒர்க் அவுட் ஆகும் என்றாலும், அவசியம் இருக்குமா?
இந்த சீசனுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று பூரிக்கிறார் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா. டிக்கெட் கலெக்‌ஷனிலேயே அணி ஓனர்கள் கணிசமாக கல்லா கட்டுவார்கள் என்று கணக்கு சொல்கிறார். நெட்டில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எகிறி இருக்கிறதாம்.
சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதி கிடைக்காததால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகள் காலியாக இருப்பது பிரச்னையாகி உள்ளது. உள்ளூர் அணியும் சொதப்புவதால் பைனலை இங்கிருந்து மாற்றப் போகிறார்கள் என்றும் தகவல் கசிந்தது. அதெல்லாம் இல்லை, இறுதிப் போட்டி இங்குதான் நடக்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகம் அடித்துச் சொன்னாலும், வாரியம் வாய் திறக்காததால் எதுவும் நடக்கலாம். 
பா.சங்கர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக