சனி, 26 மே, 2012

ரசிகர்களுக்கு ஹெல்மட் கட்டாயம்


ஜெய் ஜக்கம்மா! கடைசி பந்தில் சிக்சர், ஒரே ஓவரில் 6 பவுண்டரி, சீசன் 5ல் முதல் சதம் என்று நாம் ஆசைப்பட்டதெல்லாம் ஒரே வாரத்தில் நடக்க ஆட்டங்களில் அனல் பறக்கிறது. புள்ளி பட்டியலில் முன்னேற அணிகள் முண்டியடிக்கின்றன.
ரஹானே தயவில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜ நடை போடுகிறது. ரன் குவிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதுடன் சீசனின் முதல் சதம் விளாசிய வீரர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 6 பவுண்டரி விளாசிய முதல்வர்! என்று அசத்தும் ரஹானேவின் தலையை ஆரஞ்சு தொப்பி அலங்கரிப்பதில் ஆச்சரியம் இல்லை. டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று இப்போதே பேச்சு அடிபடுகிறது. ‘செஞ்சுரியோ… டக் அவுட்டோ, எதுவாக இருந்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. டி20 உலக கோப்பை பற்றியெல்லாம் இப்போது நினைத்து கூட பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடி ரன் அடிப்பதில் மட்டுமே கவனம். மற்றதை தேர்வுக் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள்’ என்கிறார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் இடத்தை நிரப்பக் கூடியவராகவும் கணிக்கிறார்கள். காலம் கனியும், கணிப்பும் கை கூடும் என நம்பலாம்.
ராயல் சேலஞ்சர்சின் கிறிஸ் கேல் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டார். வாரியர்சின் ராகுல் ஷர்மா ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் தூக்கி மிரட்டினார். அந்த ருத்ரதாண்டவத்தில், கேலரியில் இருந்த சிறுமி டியா பாட்டியா மூக்கு உடைந்து ரத்தக்களரியாகிவிட்டது. விஷயத்தை கேள்விப்பட்ட கேல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். ஆஸ்பிட்டலுக்கு ஓடி டியாவுக்கு ஆறுதல் சொன்ன பிறகுதான் அமைதியானார். ‘அங்கிள்… இதெல்லாம் சப்ப (மூக்கு) மேட்டர்! நீங்க தொடர்ந்து சிக்சர் அடிச்சிக்கிட்டே இருங்க’ என்று அந்த வாண்டு வாழ்த்தியதில் நெகிழ்ந்து போயிருக்கிறார் இந்த வெஸ்ட் இண்டீஸ் ராட்சசன். இவர் ஆடும்போது ஸ்டேடியத்துக்கு வெளியேயும் பீல்டர்களை போடுவதுடன், ரசிகர்களுக்கு ஹெல்மட் கட்டாயம் என்று அறிவித்தால் நல்லது.
நெஹ்ரா வீசிய கடைசி பந்தில் திவாரி சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்த சேலஞ்சர்ஸ் முகத்தில் ஆனந்தம். கங்குலியின் புனே வாரியர்ஸ் நொந்து போனார்கள்.
நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவுக்கு கெரகம் சரியில்ல போல. கேப்டன் டோனிக்கு காயம் என்று தகவல் கசிய, ரசிகர்கள் கவலையில். இந்த குழப்பம் தீர்வதற்குள்ளாகவே, ஆருயிர் நண்பரை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்ற சேதியால் உடைந்து போன அல்பி மார்க்கெல் அடுத்த பிளைட் பிடித்து ஜோகன்னஸ்பர்க் போய்விட்டார். கடைசி கட்ட லீக் ஆட்டங்களில், விட்டதைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதை வைத்துதான் வாரத்தை ஓட்ட வேண்டும்! பத்து கோடிக்கு நன்றிக் கடனாக தலை முடியில் சிஎஸ்கே பெயரைப் பொறித்துக் கொண்ட ஜடேஜா, அணியின் தலையெழுத்தை மாற்றுவாரா பார்க்கலாம்.
மொகாலியில் நைட் ரைடர்சுடன் நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் வீரருக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்ததை பார்த்து கொதித்து போனார் அணி ஓனர் பிரீத்தி ஜிந்தா. கன்னம் சிவக்க, கண்கள் கலங்க வாதிட்டவரை அமைதிப்படுத்தினார் கேப்டன் கில்கிறிஸ்ட். இப்போதைக்கு பின்தங்கியிருந்தாலும் பஞ்சாப் நிலைமை அத்தனை மோசம் இல்லை. டெக்கான் மட்டுமே ஹாட்ரிக் தோல்வியால் சார்ஜ் இறங்கிக் கிடக்கிறது.
வல்தாட்டி, யூசுப் பதான், முரளி விஜய், கோஹ்லி போன்ற லோக்கல் ஹீரோக்கள் தொடர்ந்து பிளாப் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்க தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் ஆட்டத்தால் தனக்கு இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார் ராயல்ஸ் வீரர் ஓவைஸ் ஷா. ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் 2வது இடத்தில் இருப்பவரின் ஆசை நியாயமானதே.
கென்ய அணிக்காக உலக கோப்பையில் விளையாடிய தன்மே மிஷ்ரா, டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இந்திய வீரராக விளையாட அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. அணியில் ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தன்மே மிஷ்ராவை இந்தியராகக் கணக்கு காட்டினார்கள். எந்த நாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும், பிறந்த நாட்டுக்காக எப்போது வேண்டுமானாலும் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்கிறது. அந்த விதியைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம் என்கிறது ஐபிஎல் நிர்வாகம். மற்ற அணிகள் எதிர்க்காமல் இருந்தால் இதில் பெரிய பிரச்னை இல்லை. தன்மே மிஷ்ரா அடித்து நொறுக்காமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்!
கால்வாசி சீசன்தான் காலாவதி ஆகியிருக்கிறது. அடுத்த வாரம் நிலைமை கொஞ்சம் தெளிவாகும் வாய்ப்பு உள்ளது. அது வரை குட்டையை குழப்பிக் கொண்டிருப்போம்.
பா.சங்கர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக