சனி, 26 மே, 2012

ஐபிஎல் சீசன் 5

ஆரம்பிச்சாச்சு சம்மர் கலாட்டா

கிரிக்கெட்டை அழிக்க வந்த குட்டிப் பிசாசு என்று சிலர் கரித்துக் கொட்டினாலும், இந்த அழகான ராட்சசியின் பிடியில் இருந்து விலக யாருக்குத்தான் மனம் வரும்? இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கிடைத்த ஊமைக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வந்திருக்கிறது ஐபில் 5. டெஸ்டில் உதை வாங்கக் காரணமே இந்த பாழாய்ப் போன ஐபிஎல் வைரஸ்தான் என்றாலும், அதுவே இப்போது மருந்தாகவும் ஆகியிருக்கிறது. ரசிகர்களை விடவும் வீரர்களுக்குதான் இது அதிகம் தேவைப்படுகிறது.விஷம் முறியுமா இல்லை வீரியம் அதிகரிக்குமா? என்று கவலைப்படாமல் வழக்கம்போல கொண்டாடி வைப்போம்.
தொடக்க விழா நடந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் குவிந்த ரசிகர்களின் முகத்தில், ஐபிஎல் காய்ச்சல் அறிகுறி அப்பட்டமாகத் தெரிந்தது. ’மீண்டும் பிறப்பதாக இருந்தால்’… பிரசூன் ஜோஷியின் கவிதையை அமிதாப் வாசிக்கத் தொடங்கியதுமே ஜுர வேகம் சில டிகிரி எகிறியது. ஆடவரெல்லாம் ஆட வரலாம் என்று பிரியங்கா அழைக்க… டிராவிட், கங்குலி வெட்கத்துடன் ஒதுங்க… மும்பை இந்தியன்ஸ் புது கேப்டன் ஹர்பஜன் உற்சாகமாக எழுந்து அட்டகாசமான சிறு நடன அசைவுகளைக் கொடுக்க அரங்கம் அதிர்ந்தது. ஹாட்ரிக் அடிப்பீங்களா? என்று பிரியங்கா பேட்டி எடுக்க ‘மற்ற அணிகளும் வலுவாகவே உள்ளன. மீண்டும் கோப்பையை வெல்ல முயற்சிப்போம்’ என்று புன்னகைத்தார் டோனி.    
பிரபு தேவா, கரீனா கலந்து கட்டி அடித்து அப்ளாசை அள்ளிக்கொண்டு போனார்கள். அலங்கார கட் அவுட்டுடன் அமர்க்களமாக என்ட்ரி கொடுத்த சல்மான் கான் வான்ட்டட்…பாடிகார்டு…ரெடி என்று அசத்தினார். அணிகளின் கேப்டன்கள் அணிவகுத்து சம்பிரதாய உறுதிமொழி ஏற்றனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரிக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த ஆரவார வரவேற்பு ஆச்சரியமாக இருந்தது. அவரது ’பயர் ஒர்க்ஸ்’, ‘கலிபோர்னியா கேர்ள்ஸ்’ பாடல்கள் அந்த வரவேற்பு நியாயமானதுதான் என்பதை நிரூபித்தன. அப்படி ஒரு எனர்ஜி. பாட்டு மட்டுமல்ல, அந்த செர்ரியின் ஆடையும் ஆட்டமும் கூட அட்டகாசம்தான். அவரோடு சிஎஸ்கே வீரர் போலிஞ்சர் அட்டை போல ஒட்டிக் கொண்டு ஆட்டம் போட, மனிதரைப் பிரித்து எடுப்பது பெரும்பாடாக இருந்தது.
நந்தனம் டிரெய்லர் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைக்க, அடுத்து சேப்பாக்கத்தில் மெயின் பிக்சர். முதல் போட்டியிலேயே சாம்பியன் சூப்பர் கிங்சுடன் மும்பை இந்தியன்ஸ் மோதியதால் ரசிகர்கள் ஏகப்பட்ட டென்ஷனோடு வந்திருந்தார்கள். மும்பை வீரர்களின் துல்லியமான பவுலிங் துடிப்பான பீல்டிங்கில் சிஎஸ்கே பெட்டிப் பாம்பாய் அடங்கியது. ரெய்னா மட்டும் கொஞ்சம் பிலிம் காட்டினார். அவரையும் போட்டுக் கொடுத்து அமுக்கிவிட்டார்கள். இந்த ஜடேஜாவுக்கு பத்து கோடியா? கிரிமினல் வேஸ்ட்டுப்பா என்று பொடிசுகள் கூட கமெண்ட் அடித்ததை கேட்க முடிந்தது.
சச்சினுடன் இணைந்து ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கும் பாக்கியத்தை பெற்ற தென் ஆப்ரிக்க இளம் புயல் லெவி, அழகாக ஒரு அரைசதம் அடித்து மும்பை வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். போலிஞ்சர் வீசிய பவுன்சரில் சச்சின் காயம் அடைந்து வெளியேறினாலும் 113 என்ற சொற்பமான இலக்கை எட்டுவதில் மும்பைக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. முதல் வெற்றியை கோட்டை விட்டது சென்னை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினாலும், ‘இன்னும் 15 லீக் ஆட்டம் இருக்கு. போன சீசனில் கூட நம்ம பசங்க பின்னாடிதான் சூப்பரா ஆட ஆரம்பிச்சாங்க’ என்று தேற்றிக் கொண்டார்கள். டோனியின் அதிர்ஷ்ட டப்பா காலி ஆயிடுச்சா… மிச்சம் மீதி ஏதாவது இருக்கா என்பது போகப் போகத்தான் தெரியும்.
இலங்கை – இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள் முடிந்து அந்த வீரர்கள் வரும் வரை இருப்பதைக் கொண்டு சிறப்புடன் ஆடுவதைத் தவிர அணிகளுக்கு வேறு வழியில்லை. கிறிஸ் கேல், சேவக், வல்தாட்டி, யூசுப் பதான் அதிரடி எல்லாம் இனிமேல்தான் வர வேண்டும். இவர்களை ஓரங்கட்டி புது ஹீரோ உருவானாலும் ஆச்சரியம் இல்லை. அதுதான் ஐபிஎல் ஸ்பெஷாலிடி!
சென்னை போட்டிக்கே 22,000 ரசிகர்கள்தான் வந்திருந்தார்கள். செட் மேக்ஸ் விளம்பர நேரத்திலும் 40 சதவீதம் பிரீயாக இருந்ததாகத் தகவல். ரசிகர்களின் ஆர்வம் அதிகரிப்பதும் டிஆர்பி ரேட்டிங் எகிறுவதும் அடுத்து வரும் ஆட்டங்களின் சுவாரசியத்தை பொருத்தே அமையும்.
பா.சங்கர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக