வெள்ளி, 25 மார்ச், 2011

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

சென்னையில் கடைசி லீக் ஆட்டம்
சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு வெளியே...


தலையை சுற்றி மூக்கை தொட்டு…


பி பிரிவு களேபரம்

உலக கோப்பையில் லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. ஏ பிரிவில் பெரிய அணிகள் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் கால் இறுதியை உறுதி செய்ய, பி பிரிவில் ஒரே களேபரம். கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் மரணப் போராட்டமாக இருந்தன.

இந்தியா நான்கு ஆட்டத்தில் ஏழு புள்ளிகள் எடுத்ததுமே கால் இறுதியில் கால் வச்சாச்சு என்று டிக்ளேர் செய்தது பேக் பயர் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தென் ஆப்ரிக்காவுடன் நடந்த லீக் ஆட்டத்தில் நம்மவர்கள் சொதப்பியதை நம்பவே முடியவில்லை. சேவக் – சச்சின் அதைத் தொடர்ந்து சச்சின் – கம்பீர் அமர்க்களமாக ரன் குவிக்க 400 ரன் அடிப்பாங்கப்பா என்று ரசிகர்கள் கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிக்சர் மட்டுமே அடிப்போம் என்று பிடிவாதமாக இருந்த இந்திய வீரர்கள் 29 ரன்னுக்கு கடைசி? 9 விக்கெட்டுகளை தாரை வார்த்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனர். அப்படியும்… 297 ரன்னை சேஸ் செய்ய முடியாதுப்பா என்று ரசிகர்கள் தெம்பாகவே இருந்தனர். தென் ஆப்ரிக்காவும் விடாக்கண்டனாக விரட்ட நமக்கு கண்ணைக் கட்டியது. கடைசி ஓவரில் நெஹ்ரா சிக்சரும் பவுண்டரியுமாக போட்டுக் கொடுத்து நெருங்கி வந்த வெற்றியை விரட்டி அடித்தார். சச்சினுக்காக கோப்பையை வெல்வோம் என்று சபதம் செய்த வீரர்கள், அவர் அற்புதமாக சதம் அடித்த போட்டியில் சொதப்பலாக விளையாடி அணியை கவிழ்த்ததை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் புலம்பினர்.
சென்னையில் வெஸ்ட் இண்டீசுடன் நடந்த வாழ்வா சாவா லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து கடைசி வரை போராடி ஜெயித்து தொலைக்க, பி பிரிவில் குடுமிப்பிடி சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த அணி அந்த அணியை ஜெயித்தால், அந்த அணி இந்த அணியிடம் தோற்றால்… அப்புறம் ரன் ரேட் கணக்கு என்று தலையை சுற்றி மூக்கைத் தொட முயற்சித்ததில் அணிகள் மூச்சு வாங்கி மூர்ச்சையாகாத குறைதான். கத்துக்குட்டி அணிகளும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் கவுரவமாக விளையாடி, அடுத்த உலக கோப்பையிலும் தங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்று அப்ளிகேஷன் போட்டுள்ளன. ஐசிசி கருணை காட்டுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
கடைசி கட்ட லீக் சுற்றில் அனல் பறந்ததால் நாக் அவுட் ஆட்டங்களில் சுனாமியை எதிர்பார்க்கலாம். இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் உயிரைக் கொடுத்து விளையாடினால்தான் கரை சேர முடியும். டோனியின் பிராப்ளமே இதனை இதனால் இவன் முடிக்கும் என்று… சரியாகக் கணித்து வீரர்களை வேலை வாங்குவதில்தான் இருக்கிறது. ரெய்னா, அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என்று ரசிகர்கள் கதறாத குறை. 6 பேட்ஸ்மேன் 5 பவுலர் என்று பார்முலாவை மாற்றிப் பார்க்கலாம்… என்றாலும் சோதனை முயற்சிகளுக்கான காலம் கடந்துவிட்டது. சிறிய தவறுக்கு கூட இடமில்லை. எல்லாம் நன்றாகவே முடியும் என நம்புவோம்.

இந்த உலக கோப்பையுடன் கனடாவின் ஜான் டேவிசன், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயிப் அக்தர் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். அடுத்த வாரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். தோற்கும் கேப்டன்களின் தலைகள் உருள்வது நிச்சயம். வங்கதேசத்தின் மிர்பூரில் இரண்டு கால் இறுதி ஆட்டங்கள், அகமதாபாத் மற்றும் கொழும்புவில் தலா ஒன்று. கொழும்பு, சண்டிகரில் அரை இறுதி. ஏப்ரல் 2ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மெகா பைனல். சாதனை நாயகன் சச்சின் கைகளில் உலக கோப்பையை ஒப்படைக்கும் பொறுப்பை சக வீரர்கள் நிறைவேற்றுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.






-    பா.சங்கர் (குங்குமம் இதழில் வெளியானது) 

     







வியாழன், 10 மார்ச், 2011

பேட்டிங் ஸ்டிராங்கு… பவுலிங் வீக்கு…


இந்தியா காமெடி பீஸா?

மூன்றாவது சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்து எல்லா அணிகளும் அரை கிணறு தாண்டியுள்ள நிலையில், கோப்பையில் சூறாவளி வீசத் தொடங்கியிருக்கிறது. சரிசமன், ஹாட்ரிக், அதிர்ச்சி தோல்வி, அதிரடி சதம், டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு, சூதாட்ட புகார் என்று சுவாரசியங்களின் அணிவகுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் திக்குமுக்காடிக் கொண்டுள்ளனர்.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதிய லீக் ஆட்டம்… சச்சின் சாதனை சதம் விளாசியதில் இந்தியா 338 ரன் குவித்தது. வெற்றி உறுதி என்று ரசிகர்கள் மட்டுமல்ல வீரர்களும் அசட்டையாக இருந்தது ஆபத்தாகிப் போனது. ஸ்டிராஸ் – பெல் ஜோடி கொடுத்த பதிலடியில் இந்திய பந்துவீச்சு மூச்சு வாங்கியது. கவுத்துட்டாங்கய்யா…என்று ரசிகர்கள் நடையைக் கட்டத் தொடங்க, ஜாகீர் திடீரென்று விக்கெட்டுகளை சாய்த்து உயிரூட்டினார். மீண்டும் வெற்றிக் காற்று இந்தியா பக்கம். அப்படியா? என்று வெளியே போன ரசிகர்கள் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், சிக்சராக போட்டுக் கொடுத்து சாகடித்தார் சாவ்லா. முனாப் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தில் சிக்சர் பறக்க கதை கந்தல். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட, இங்கிலாந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை சரிசமனில் முடித்தது.

இந்தியா பேட் செய்தபோது ஒரு பந்தை மிச்சம் வைத்து ஆல் அவுட் ஆனதுடன், முனாப் கிரீசைத் தொடாமல் ஓடியதால் ஒரு ரன் கணக்கில் சேராமல் போனது. அந்த ஒரு ரன் இருந்திருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்ப, ஒரு புள்ளியாவது கிடைத்ததே என்று இரு அணி கேப்டன்களும் திருப்திபட்டனர். இந்திய பவுலர்கள் இப்படி போட்டுக் கொடுத்தால் கோப்பை வாய்ப்பு அம்பேல் என்று எச்சரிக்கிறார் கபில். பேட்டிங் ஸ்டிராங்கு… பவுலிங் வீக்கு… என்று ரசிகர்கள் காமெடி பண்ணிக் கொண்டிருந்தாலும் இந்திய அணியின் ரேட்டிங் அப்படியே மெயிண்டெய்னாவது அதிசயம்.

இரண்டே நாள் இடைவெளியில் பெங்களூரில் அடுத்த ஆட்டம். இந்த முறை இங்கிலாந்துடன் மோதியது பங்காளி அயர்லாந்து. டிராட் – பெல் அசத்தியதில் இங்கிலாந்து 327 ரன் குவித்தது. அயர்லாந்து பேட்டிங்கில் 111 ரன்னுக்கு 5 விக்கெட் காலி. இங்கிலாந்து வெற்றி பற்றி யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் கணக்கு மட்டும் வேறாக இருந்தது. எவனா இருந்தாலும் அடிப்பேன் என்று அவர் ஆடிய ருத்ரதாண்டவத்தில் இங்கிலாந்து வீரர்கள் மயக்கம் போடாத குறை. போதாக்குறைக்கு கெவின் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டு தலையில் கை வைத்தார் ஸ்டிராஸ். யார் தலையில் கை வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்த அதிர்ச்சி தோல்வி, அப்போதே இங்கிலாந்தை குறி வைத்துவிட்டது. கோப்பையையே வென்றது போல அயர்லாந்து வீரர்கள் ஆர்ப்பரித்து அமர்க்களப்படுத்தினார்கள். கேலரியில் அமர்ந்து கெவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

2007 உலக கோப்பையில் அயர்லாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டத்தில் அண்ணன் நியால் ஓ பிரையன் ஆட்டநாயகன். இப்போது இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த ஆட்டத்தில் தம்பி கெவின் ஓ பிரையன் ஆட்டநாயகன். அதிலும் கெவின் 50 பந்தில் அடித்த சதம் உலக கோப்பையின் அதிவேக சதமாக பதிவாகி இருக்கிறது. இதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? என்று நெகிழ்ந்த தந்தை பிரெண்டனும் அயர்லாந்து அணிக்காக 52 போட்டியில் ஆடியிருக்கிறாராம். அயர்லாந்தின் இந்த வெற்றி கத்துக்குட்டி அணிகள் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

நெதர்லாந்துடன் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்திய 24 மணி நேரத்துக்குள்ளாகவே 2011 உலக கோப்பையில் 2வது ஹாட்ரிக் பதிவாகிவிட்டது. இலங்கையின் மலிங்கா புயல் தாக்கியதில் கென்யா கூடாரம் தரைமட்டமானது. கனடா அணியிடம் 184 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தானை, அதிர்ச்சி தோல்வியில் இருந்து காப்பாற்றினார் கேப்டன் அப்ரிடி. விக்கெட் வேட்டையில் அவர்தான் லீடிங். சூதாட்ட சர்ச்சையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன், ஹாடின், இலங்கையின் ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோர் பெயர் அடிபட, ’அப்பாடி… எங்க பிளேயர்ஸ் மேல எந்த கம்ப்ளெயிண்டும் இல்ல’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ். ஏ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி ஆட்டத்தை இலங்கை அல்லது வங்கதேசத்தில் ஆட வேண்டும் என்று கணக்கு போடுகிறார் அப்ரிடி. இந்தியாவில் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது என்பதுதான் காரணம். ’கால் இறுதி நாக் அவுட் போட்டி என்பதால் அப்ரிடியின் ஆசை நியாயமானதே. அரை இறுதி, பைனலை இந்தியாவில் ஆடுவது பிரச்னையாக இருக்காது. அதற்குள் பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக செட்டிலாகி இருப்பார்கள்’ என்று சப்போர்ட் செய்கிறார் அக்ரம். அவர்கள் கவலை அவர்களுக்கு. டோனி கோப்பையை தூக்கி முத்தமிடும் வரை நமக்கு தூக்கம் வராது.

பா.சங்கர் 


(குங்குமம் இதழில் வெளியானது) 

வியாழன், 3 மார்ச், 2011

களை கட்டுது 2வது ரவுண்டு

எல்லா அணிகளும் தலா ஒரு லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்த நிலையில் 2வது ரவுண்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. கத்துக்குட்டிகளிடம் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் கால் இறுதி வாய்ப்பு காலை வாரிவிடும் என்பதால், பெரிய அணிகள் கையைப் பிசைந்து கொண்டுள்ளன.
சேப்பாக்கத்தில் நியூசிலாந்து & கென்யா மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம். சாவகாசமாகப் போய் 2வது பாதி ஆட்டத்தை ரசிக்கலாம் என்று திட்டமிட்டவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. பலர் ஸ்டேடியம் வாசலை மிதிப்பதற்குள்ளாகவே போட்டி முடிந்துவிட்டது. கென்யா வெறும் 69 ரன்னில் சுருள, நியூசிலாந்து ஓபனர்கள் 8 ஓவரில் கதையை முடித்துவிட்டார்கள். டி20 மாதிரி ஆடியிருந்தால் கூட கென்யா இதை விட பெரிய ஸ்கோர் அடித்திருக்கலாம். ஆழ்வார்பேட்டை அணியை இறக்கியிருந்தால் கூட அமர்க்களப்படுத்தி இருப்பார்கள் என்று அங்கலாய்த்தார் ஒரு சென்னை ரசிகர்.




பளபளவென ஜொலித்த ஸ்டேடியத்தில் ஐந்தாயிரம் ரசிகர்களுக்கும் குறைவாகத்தான் வந்திருந்தார்கள். எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று முதல் நாளே ஹவுஸ் புல் போட்ட நிலையில், ஸ்டேடியம் வெறிச்சோடியது வெறுப்பேற்றியது. பெரும்பாலான டிக்கெட்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் சங்கம், கிளப் உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள்... என்று கோட்டா சிஸ்டத்தில் ஒதுக்கப்படுவதால் வந்த வினை இது. இப்படி ஒதுக்கப்படும் டிக்கெட்டுகளும் ஒழுங்காக விநியோகிக்கப் படுவதில்லை. 
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள பைனலுக்கு, இப்படி ஒதுக்கீடு எல்லாம் போக வெறும் நாலாயிரம் டிக்கெட் மட்டுமே அப்பாவி ரசிகர்களுக்கு போனால் போகிறது என்று ஒதுக்கி இருக்கிறார்கள். அதிலும் ஆயிரம் டிக்கெட் ஆன்லைனில் விற்கப்படும் என்று அலட்டல் அறிவிப்பு வேறு. ஒரே நேரத்தில் ஒரு கோடி ரசிகர்கள் மொய்த்ததில் கியாசூங்கா.காம் இணையதளம் முடங்கிப் போனது. பெங்களூரில் இந்தியா & இங்கிலாந்து லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததில் ஒரே களேபரம். போலீசார் தடியடி நடத்தும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். இப்படி வெறித்தனமான ரசிகர்களுக்கு அதிக டிக்கெட்டுகளை ஒதுக்காமல், கிளப்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் மூட்டை கட்டி அனுப்புவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு வேறு மாதிரி பிரச்னை. இந்தியா விளையாடுவதாக இருந்த ஒரே போட்டியையும் பெங்களூருக்கு பைபாஸ் செய்துவிட்டதால் ரசிகர்கள் செம மூட் அவுட். மற்ற அணிகள் ஆடும் ஆட்டத்தை பார்க்க ஆயிரக் கணக்கில் அழ அவர்கள் தயாராக இல்லை. ரூ.750க்கு மேல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம். இந்த டிக்கெட் விஷயத்தில் ஐசிசி ஏதாவது நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம். 
கென்யாவை தொடர்ந்து கனடாவும் பரிதாபமாக மண்ணைக் கவ்வியதால், அடுத்த உலக கோப்பையில் கத்துக்குட்டி அணிகளுக்கு கல்தா கொடுப்பது என்ற ஐசிசி முடிவுக்கு ஆதரவு அதிகரித்தது. ஒரு சிலர் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறார்கள். இங்கிலாந்து அணிக்கு நெதர்லாந்து தண்ணி காட்டியதைப் பார்த்தபோது அதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. அந்த அணியின் டென் டஸ்சேட் ஆல்ரவுண்டராக அமர்க்களப் படுத்தினார். ஐபிஎல் போட்டி ஏலத்தில் இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகையை விட 3 மடங்கு அதிகமாக கொடுத்து (சுமார் ரூ.70 லட்சம்) கொல்கத்தா அணி வாங்கியதை நியாயப்படுத்தி இருக்கிறார். கனடாவின் ரிஸ்வான் சீமாவும் தனது அதிரடியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இவருக்கும் ஐபிஎல் டி20ல் பிரகாசமாக எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்தி நடிகை மிங்க் சிங் தனது முதுகில் அழகாய் ஓவியம் தீட்டிக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை விழி பிதுங்க வைத்தார். உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது, தங்கள் அணி கோப்பையை வென்றால் தலைநகர வீதிகளில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து பராகுவே மாடல் அழகி லரிஸா ரிகுல்மே பரபரப்பூட்டியது ஞாபகம் வருகிறது. இந்தியா ஜெயித்தால் இப்படி ஓடுவதாக யாராவது அறிவித்திருக்கிறார்களா? என்று ஜொள் ரசிகர்கள் ஆவலோடு விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. 
ரன் அவுட் ஆன ஆத்திரத்தில் ஆஸி. கேப்டன் பான்டிங் டிவியை அடித்து நொறுக்கியது லேசான சலசலப்பூட்டியது. மற்றபடி பெரிய அளவில் சர்ச்சை எதுவும் கிளம்பாதது ஆறுதலான விஷயம். இந்திய அணி ஆட்டங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அம்சம். இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்துவிட்ட நிலையில் எல்லா அணிகளும் இப்போதே புள்ளிப் பட்டியல், ரன் ரேட் என்று கணக்கு போடத் தொடங்கிவிட்டன. கோப்பை சூடுபிடித்துள்ளதால், அடுத்த வாரத்தில் இருந்து அனல் பறக்கும்.

பா.சங்கர்

(குங்குமம் இதழில் வெளியானது)