வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

போட்டுத் தாக்குது டோனி & கோ…


திருஷ்டி சுத்தி போடுங்கய்யா!

அசத்தலான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோ, வாணவேடிக்கை என்று வங்கதேச தலைநகர் தாக்காவில் உலக கோப்பை தொடக்க விழா அமர்க்களப் படுத்திவிட்டது. கேப்டன்களின் ரிக்‌ஷா பவனி செம ரகளை. சோனு நிகம், பிரையன் ஆடம்ஸ், ஷங்கர் மகாதேவன் இசை மழை அட்டகாசம். இனி கவனம் எல்லாம் ஆட்டத்தில் மட்டுமே.
இந்த முறை கோப்பை யாருக்கு? என்ற கேள்விக்கு, எல்லா கருத்து கணிப்புசாமி!களும் இந்தியாவை கை காட்டி இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் உதறலும் இருக்கத்தான் செய்கிறது. ஓவர் கான்பிடன்ஸ் கவிழ்த்துவிடக் கூடாதே என்ற கவலைதான்.
பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை பதம் பார்த்ததுமே இந்திய அணியின் ரேட்டிங் டபுளாகிவிட்டது. பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் அசத்த, சேப்பாக்கத்தில் நியூசிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். சச்சின், சேவக், பதான் கணிசமாக ரன் அடிக்காமலேயே ஸ்கோர் 350ஐ தாண்டியதில் எல்லா அணிகளுமே அரண்டு போய்விட்டன. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுமே கிளிக் ஆனதில் பரம திருப்தி.
ரொம்ப நாளைக்குப் பிறகு கேப்டன் டோனி தனது அதிரடி ஆட்டத்தை ரீவைண்ட் செய்து நடுவரிசைக்கு வலு சேர்த்திருக்கிறார். பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது யாரை கழட்டி விடுவது என்பதுதான் டோனிக்கு ஒற்றை தலைவலி. இதில் ரெய்னாவை ஓவர்டேக் செய்திருக்கிறார் கோஹ்லி. தலா 2 வேகம், 2 சுழல் ஸ்பெஷலிஸ்டுகளுடன் யுவா, பதான், சேவக், சச்சினை வைத்து எஞ்சிய 10 ஓவர்களை சமாளித்து விடலாம் என்பதால் டோனி உற்சாகமாக இருக்கிறார்.
நம்ம அஷ்வின் ஆல்-ரவுண்டராக அசத்துவதால் டோனிக்கு அவர் மீது அலாதி பிரியம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கவும் தயார் எனத் தெரிகிறது. போட்டுத் தாக்கத் தொடங்கியிருக்கும் டோனி & கோவுக்கு இப்போதே திருஷ்டி சுற்றிப் போடுவது நல்லது. லீக் சுற்றில் கொஞ்சம் சறுக்கினாலும் சுதாரித்துக் கொள்ள ஏராளமான வாய்ப்பு இருப்பதால் பெரிய அணிகள் ரிலாக்சாக இருக்கின்றன. கற்றுக் குட்டிகளிடம் உதை வாங்காமல் சமாளித்துவிட்டாலே கால் இறுதி உறுதி.
வழக்கம் போல எக்கச்சக்கமான சாதனைகள் சச்சினைத் துரத்துகின்றன. படித்துக் கொண்டிருக்கும் போதே, உலக கோப்பையில் அதிக சதம், 2000 பிளஸ் ரன் குவிப்பு என்று செய்தி பிளாஷ் ஆகும் வாய்ப்பு அதிகம். இந்திய அணியை பொருத்தவரை பேஸ்மெண்ட் செம ஸ்ட்ராங்! பில்டிங்கையும் அப்படியே எழுப்பிவிட்டால் கோப்பையில் பால் காய்ச்சி விடலாம்.
- பா.சங்கர்
(குங்குமம் இதழில் வெளியானது)

ஆடுகளம் தயார்


சிலிர்க்கும் சண்டைக் கோழிகள்

உலக கோப்பை கிரிக்கெட்எக்கச்சக்க பில்டப்பில் ரசிகர்கள் இப்போதே டென்ஷனாகிக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சி ஆட்டங்களுக்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. போதாக் குறைக்கு, இந்த முறை கோப்பை இந்தியாவுக்குத்தான் என்று ஆளாளுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கணிப்பு பலிப்பதற்கான வாய்ப்பும் அதிகம்தான்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக் கொடி கட்டிய 1975ல் இருந்து இதுவரை 9 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 4, வெஸ்ட் இண்டீஸ் 2, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறை கோப்பையை முத்தமிட்டுள்ளன. பத்தாவது உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. தீவிரவாத அச்சுறுத்தலால் பாகிஸ்தான் கழட்டிவிடப்பட்டது.
வெள்ளை சீருடை, 60 ஓவர், சிவப்பு பந்து என்று தொடங்கிய போட்டி, பல மாற்றங்களை சந்தித்துவிட்டது. வண்ண சீருடை, 50 ஓவர், வெள்ளைப் பந்து, பவர் பிளேயுடன் இந்த கோப்பையில் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் ‘யுடிஆர்எஸ்’ முறையும் ஆட்டம் சரிசமனில் முடிந்தால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவரும் அறிமுகமாகிறது. கடந்த உலக கோப்பையில் (வெஸ்ட் இண்டீஸ், 2007) இந்தியா தொடக்க சுற்றிலேயே மண்ணைக் கவ்வியதால் சுவாரசிய பலூன் காற்று இறங்கி தொங்கிப் போனது. சுதாரித்துக் கொண்ட ஐசிசி இம்முறை உஷாராக லீக் சுற்றை வடிவமைத்திருக்கிறது.
மொத்தம் 14 அணிகள் இரண்டு பிரிவாக களத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 6 அணிகளுடன் லீக் சுற்றில் மோத வேண்டும். இரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறு. சூப்பர் 8, சூப்பர் 6 என்று தலையை சுற்றாமல் ஸ்ட்ரெய்ட்டாக கால் இறுதி, அரை இறுதி, பைனல் என்று கனகச்சிதம். டாப் அணிகள் கால் இறுதிவரை முன்னேறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். வங்கதேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளிடம் சர்வ ஜாக்கிரதையாக விளையாட வேண்டியது அவசியம். கொஞ்சம் அசந்தாலும் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த உலக கோப்பையில் வங்கதேசத்திடம் உதை வாங்கிய இந்திய அணி, இந்த முறையும் தொடக்க ஆட்டத்திலேயே அந்த அணியுடன் மோதுகிறது. சமீபத்தில் நியூசிலாந்தை புரட்டி எடுத்த வங்கதேசம், சொந்த மண்ணில் விளையாடும் தெம்பில் சிலுப்பிக் கொண்டு நிற்கிறது. கொஞ்சம் கூட அசராமல் அடித்து பழிதீர்ப்போம் என்கிறார் அதிரடி வீரரும் இந்திய அணியின் துணை கேப்டனுமான சேவக்.
எல்லா சாதனைகளையும் ஒரு கை பார்த்துவிட்ட சச்சினுக்கு இது 6வது உலக கோப்பை. ரன் குவிப்பு, சதம், அரைசதம் என எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்கும் சச்சினுக்கு கோப்பையை தூக்கிக் கொண்டாடும் பாக்கியம் மட்டுமே குறையாக இருக்கிறது. அவருக்காகவாவது இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்று மற்ற 14 வீரர்களும் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார்கள். பேப்பரில் மிரட்டலாக இருக்கும் பேட்டிங் வரிசை களத்திலும் ஒர்க் அவுட்டானால், இந்த இந்திய அணியை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.
காயம்…உடல்தகுதி… எல்லா அணிகளுக்குமே இதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கடைசி நேரத்தில் பிரவீன் குமார் விலகிக் கொள்ள, ‘இதயமே நொறுங்கிவிட்டது’ என்று புலம்பிக் கொண்டிருந்த ஸ்ரீசாந்துக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு. கேப்டன் டோனியின் முக்கியமான துருப்புச் சீட்டு யூசுப் பதான். இவர் 5 ஓவர் களத்தில் நின்றால் கூட போதும், ஆட்டம் ஓவர்! இந்தியா வெற்றி என்று அடித்துச் சொல்லிவிடலாம்.
கபில் தேவின் 175, சேத்தன் சர்மா ஹாட்ரிக், கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர் என்று சென்சேஷனல் அமர்க்களங்கள் அணிவகுத்தால் ரசிகர்களின் ஜுர வேகம் தெர்மாமீட்டரை பதம் பார்க்கும். இந்த பிரிவுக்கான பட்டியலில் சேவக், பதான், கிறிஸ் கேல், ஷேன் வாட்சன், அப்ரிடி, பீட்டர்சன், தில்ஷன், பிராங்க்ளின், ஹர்பஜன்!... பெயர்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சரியப்படாமல் இருக்கலாம்.
உலக கோப்பைக்காக பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானம் பளபளக்கிறது. சென்னைக்கு நான்கு போட்டிகள். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் லீக் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் நடக்க உள்ள அந்த போட்டிக்கு (மார்ச் 20) முன்பே இந்தியா கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்வு நேரத்தில் போட்டிகள் நடப்பது பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். மாணவர்களே… ஸ்கோர் மட்டும் கேட்டுக்கோங்க. வெற்றி நமதே!
பா.சங்கர்
(குங்குமம் இதழில் வெளியானது)